Thursday, February 14, 2019

காதல் மாற்றங்கள் - கவிதை

என் மனைவி எனும் காதலியே
உன் வருகைக்கு பின்,

என் புகைபிடிக்கும் பழக்கத்தை
தொடர முடிவதில்லை...

இருசக்கர வாகனத்தை
அதிவேகமாக ஓட்ட முடிவதில்லை...

இரவு காட்சி படம் பார்த்துவிட்டு
தாமதமாக வீடு திரும்ப முடிவதில்லை...

நண்பர்களின் சனிக்கிழமை
இரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை...

நள்ளிரவை தாண்டி
தொலைக்காட்சி பார்க்க முடிவதில்லை...

அடிதடி பிரச்சனைகளில்
 முன்நிற்க முடிவதில்லை...

என்னை கடந்து செல்லும்
அழகான பெண்களை உற்று பார்க்க முடிவதில்லை...

சம்பாதிக்கும் பனத்தை
கண்மூடித்தனமாக செலவு செய்ய முடிவதில்லை...

திருமணத்திற்கு பின்
இழந்துவிட்டதாக தோன்றும்
அத்தனை இழப்புகளையும்
அன்பு நிறைந்த உன்
ஒற்றை முத்தம் ஈடு செய்துவிடுகிறது

                                                      நம்பிக்கைபாண்டியன்

Monday, November 12, 2018

செல்போன் - கவிதைகள்

1)

எட்டாத
தூரத்திலிருப்பவர்களுடன்
பேசுவதை எளிதாக்கிவிட்டு...
அருகிலிருப்பவர்களுடன்
பேசுவதை அரிதாக்கிவிட்ட
விசித்திர நவீனம்
செல்போன்கள்!


2)

திருவிழா தேரில்
ஊர்வலம் வரும் கடவுளை
முதலில்
வணங்குகின்றன‌
செல்போன்கள்!

                                                        நம்பிக்கைபாண்டியன்





Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டு ‍ (குட்டிகதை)

                                                                                 மகன் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்திருப்பதை அறியாத‌ அப்பா " நேரத்தில வீட்டுக்கு வராம ஏண்டா இப்படி மாடு மாதிரி ஊர சுத்திட்டு வர்ற" என்றார்.


அதைகேட்ட மகன் " என்னப்பா சொன்னீங்க? மாடு மாதிரியா" என்று கேட்டு கர்வமாக சிரித்துக்கொண்டே , தன் சட்டை காலரை தூக்கி விட்டான்,


அதற்கு அப்பா "ஏண்டா உன்ன மாடுனு திட்டுறேன் இப்படி சிரிக்கிறியேடா" என்றார்

 மகன் சிரித்துக்கொண்டே " அப்பா மாடுனா சும்மா இல்லப்பா,
சாதி, மதங்களை கடந்து, ஊரை மறந்து, அத்தனை இளைஞர்களையும், ஒற்றுமையாக ஒன்று சேர்க்கும் வேலையை,

 நம்ம நாட்டில் ஒரு அரசியல்வாதியோ, ஒரு சினிமா நடிகரோ, ஒரு பெரும் பண‌க்காரனோ செய்ய முடியாததை இன்று ஒரு மாடு செய்திருக்கிறது அப்பா,
என்னை மாடு என்று திட்டுவதில் எனக்கு பெருமைதான் அப்பா" என்றான்

 அப்பா புன்னகையுடன் அமைதியானார்.