Tuesday, February 27, 2007

நேரம்

பேசுவதற்காகவே!
நேரம்
எடுத்துக்கொள்வார்கள்
காதல‌ர்கள்!

நேரம்
கிடைக்கும்போது!
பேசிகொள்வார்கள்
நண்ப‌ர்கள்!

~நம்பிக்கை பாண்டியன்

Sunday, February 25, 2007















அழகு

அழகிய விதமாய்
தலை வாரவில்லை!
புருவத்தின் இயல்பை
சீர் செய்யவில்லை!
உதட்டிற்கு சிவப்பு
சாயமிடவில்லை!
முகத்திற்கு அழகூட்ட
‌எதுவும் பூசவில்லை!
கழுத்திலும் உடலிலும்
ஆபரணங்கள் இல்லை!
விலைஉயர்ந்த நாகரீக
ஆடையுமில்லை!
கையில் மணிகாட்டும்
கடிகாரமில்லை!
காலில் எந்த
காலணியுமில்லை!
ஆனாலும்
அழகாய் இருக்கிறது
குழந்தை!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்

Monday, February 19, 2007

என்னை சுற்றி

(உயர்ந்தோர் நட்பு உதவும்)

பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் நான் கல்லூரி படிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை, படிக்க பணம் செலவாகும் என் வீட்டின் நிலமையோ அதற்குரிய வகையில் இல்லை,என்வே எந்த ஒரு கனவும் லட்சியமும் இல்லாமலே 12ம் வகுப்பை படித்தேன், கணிதப்பாடம் கவிழ்த்துவிட (படிச்சாதானே வரும்) அறிவியல் பாடங்கள் அனைத்திலும் 80% மதிப்பெண் பெற ,எப்படியாவது படிக்க வைக்கிறோம் நீ படி என்று சொல்லிவிட்டார்கள்
,
எங்கள் உறவினர் நண்பர் பிரபு என்ற ஒருவர் ஒரு கல்லுரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டிருந்தார் அவர் ஆலோசனைப்படி அந்த கல்லூரியில் விண்ணப்பித்தேன், இன்னொரு கல்லூரியில் வேதியியல் கிடைத்தது,வேதியியல் படித்தால் இருபாலர் கல்லூரி, இயற்பியல் படித்தால் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி எதில் சேர என்று குழப்பம் , வேதியலை விட இயற்பியல் எனக்கு படிக்க எளிது என்பதால் இயற்பியலில் சேர்ந்துவிட்டேன்,
பிரபு தான் எனக்கு கல்லூரியில் முதல் நண்பர் என்று சொல்லலாம் , எங்கள் கல்லுரியில் ராகிங் உண்டு அளவான முறையில், நாங்கள் அவர்கள் சொல்வ‌தை மறுக்காமல் செய்வோம், பிரபுவின் உதவியால் அவரின் வகுப்பில் நிறைய‌ மாண‌வர்களுக்கு அறிமுகமாகிவிட்டேன்,நேரம் கிடைக்கும்போது அவர்களின் அரட்டையில் கலந்துகொள்வேன்,சில‌ நண்பர்கள் சீனியரிடம் ஏதேனும் புத்தகம் வாங்க வேண்டுன்றால் என்னை அழைத்து செல்வார்கள்,அப்போது துறைவாரியாக கல்லுரிகளுக்கு இடையே ஒவ்வொரு கல்லுரியிலும் போட்டிகள் நடக்கும், நிறைய‌ கல்லுரிகளில் இருந்து வந்து கலந்துகொள்வார்கள், போட்டிகளில் அதிகம் இரண்டாமாண்டு மூன்றாமாண்டு மாணவர்கள் தான் கலந்து கொள்வார்கள், முதலாமாண்டு மாணவர்களை அழைக்க மட்டார்கள் , ஆனால் ஒரு கல்லுரியில் ந‌டந்த‌ போட்டிக்கு என்னை மட்டும் அழத்து சென்று .

5 பேர் கலந்து கொள்ளும் 6 நிமிட நாடகப்போட்டி என்னையும் சேர்த்துகொண்டார்க‌ள், பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்றுள்ளேன், இங்குதான் முத‌ல்முறையாக‌ மேடையேறினேன்,சீனிய‌ர் மாண‌‌வ‌ரின் க‌ற்பனையில் உதித்த சின்ன ஸ்க்ரிப்ட், சிறப்பாக நடித்தோம். இரண்டாம் பரிசு கிடைத்தது
சிறிய நிகழ்வுதான் ,
ஆனால் என் வளர்ச்சிக்கு இது மிக பயனுள்ளதாக‌ இருந்த‌து,
மேடைகூச்ச‌ம் குறைய‌ உத‌விய‌து,
எப்ப‌டிப‌ட்ட‌ போட்டிக‌ளுக்கு எப்ப‌டி க‌ற்பனை செய்து ஸ்கிரிப்ட் தயாரிக்கவேண்டும் என்ற கற்பனை திற‌ன் வளர உதவியது
( இது நான் மூன்றாமாண்டு படிக்கும் போது பெரிய அளவில் வெற்றிபெற உதவியது)
இது போக படிப்பு ரீதியாகவும் ,மற்ற ஆசிரியர்களை ப‌ற்றியும் சிறு சிறு பிரசனைகளை எதிர்கொள்வது என்பதிலும் அவர்கள் பல வழிகளை சொல்லி கொடுத்தார்( ஆனால் நான் சரியா படிக்கல‌ங்க) இத‌ன் வ‌ழியாக‌ நான் தெரிந்துகொண்ட‌து என்ன‌வென்றால்
எங்கு சென்றாலும் நம்மை விட‌ உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் நல்ல!! நட்பை ஏற்படுத்திகொள்வது நல்லது,அது நம் வளர்ச்சிக்கு உதவும்.

இத‌ன்பிற‌கு நாங்க‌ள் ப‌ல போட்டிகளில் நம்பிக்கையுடன் ப‌ங்கேற்க செல்வோம் ,‌
நாட்டு நலப்பணி திட்ட 10 முகாமில் கிராமத்தில் தினமும் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும், அதற்கு உதவியது,
அப்போது வரலாற்று துறையை சேர்ந்த மிகத்திறமையான மாண‌வ‌ன் ச‌ங்க‌ர் என்ப‌வ‌னும் எங்களுட‌ன் க‌ல‌ந்துகொள்வான் , எங்களையும் அவன் போட்டிகளுக்கு அழைத்து செல்வான் ஆன‌ல் நாங்க‌ள் யாரும் அதில் தொட‌ர்ந்து ஆர்வ‌ம் செலுத்தாமல் இருந்துவிட்டோம் அவ‌ன் தொட‌ர்ந்து ஆர்வ‌ம் செலுத்தி , கமெடி பாய்ஸ் குழு நடத்தி, விஜ‌ய் டி.வி க‌ல‌க்கப்போவ‌து யாரு நிக‌ழ்ச்சியில் பிர‌ப‌ல‌மாகி, இன்று சினிமாவிலும் ந‌டித்துக்கொண்டிருக்கிறான், ம‌துரை "ரோபோ" ச‌ங்க‌ர்
பட்டாசுக்காதல்

ராக்கெட்

உ ன் க‌ண்க‌ளின்
பார்வைத் "தீ" பற்ற‌ வைத்த
காதல் நெருப்பில்!
உற்சாகமாய் வானில் பறந்தேன்!
தீபாவாளி ராக்கெட்டைப்ப போல!
விரைவில், வெடித்து
சிதறப்போவது தெரியாமல்!



மத்தாப்பு

நீ!
ரசிக்கிறாய் என்பதற்காக
‌என்னை கம்பி மத்தாப்பாக!
எரித்துக்கொண்டேன்!
எரிந்து முடித்ததும்!
வீதியில் வீசியெறிந்துவிட்டாய்!



அணுகுண்டு

ஊசி வெடிக்கு
பயந்து நடுங்கியவள்!
என் இதயத்திற்கு
அணுகுண்டு வைக்கும்போது!
கவலையின்றி
சிரித்துக்கொண்டிருந்தாள்!

Thursday, February 08, 2007

என்னை சுற்றி

(நாம் செய்யும்போதுதான் புரிகிற‌து)

விவசாய இடுபொருட்கள் நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை பார்த்தபோது ஒவ்வொரு பகுதியிலும் விவசாயத்தினை பொருத்து சில மாதங்கள் அறை எடுத்து தங்கி இருப்போம் காலையில் விவசாய நிலங்களுக்கு சென்று ஒவ்வொரு விவசாயிகளாக சந்தித்து பேசிவிட்டு மதியஉணவுக்கு ஏதேனும் உணவகத்திற்கு சாப்பிட ஊருக்குள் வந்துவிடுவோம்,பிறகு ஓய்வு எடுத்துவிட்டு எங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகளை பார்த்து பேசிவிட்டால் அன்றைய வேலை முடிந்துவிடும்,

விளை நிலங்களில் சில விவசாயிக‌ள் சரியாக பேசமாட்டார்கள், சில விவசாயிகள் நன்றாக பேசுவார்கள்,எளிதில் நண்பர்களாகிவிடுவார்கள் அவர்கள் தோட்டத்தில் என்ன இருக்கிறதோ(பழங்கள்,இளநீர்,கிழங்குகள்) உண்ண கொடுப்பார்கள் மிக தாராள‌மனதுடன் இருப்பார்கள் , சிலர் எவ்வளவு மறுத்தாலும் காய்கறிகளை கொடுத்து "வீட்டுல‌ கொண்டு போய் கொடுங்க தம்பி" என்பார்கள்,அங்கு தங்கியிருந்த மூன்று பேரும் இனி அவ்வப்போது சமைத்து சாப்பிட முடிவு செய்தோம், அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு போய்வரும்போது சமைப்பதற்கு தேவையான பொருட்களை ஆளுக்கொன்றாய் வீட்டிலிருந்து எடுத்து வந்துவிட்டோம்,இதில் நகைச்சுவையான விசயம் என்னவென்றால் எங்கள் யாருக்குமே சமைக்க தெரியாது,

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மதிய உணவுசமைக்க முடிவு செய்தோம், நான் வீட்டிலிருந்து அம்மாவிடம் கேட்டு சமைப்பதற்க்கு தேவையான சில‌குறிப்புகளை எழுதி வந்துவிட்டேன், இன்னொருவன் சமைக்கும்போது தொலைபேசியில் கேட்டு சாதத்திற்கு குக்கரில் எவ்வளவு தண்ணீர்வைப்பது, எவ்வளவு உப்பு சேர்ப்பது, காரம் சேர்ப்பது என்று கேட்டுக்கொண்டான், இன்னொருவனோ ஒரு சமையல் குறிப்பு புத்தகத்தை வாங்கிவந்துவிட்டான், இதுபோக‌ அந்தந்த பொடி பாக்கெட்டின் பின்புறமே குறிப்பு கொடுத்திருந்தார்கள், எல்லாம் தயார் செய்து மூவரும் சேர்ந்து 1மணிக்கு சமைக்க ஆரம்பித்துவிட்டோம்,

முதலில் காய் பொறியல், அடுத்து சாதம், அடுத்து ரசம்,தயிர் கடையில் வாங்கி விட்டோம், கடைசியில் சாம்பாருக்கு பருப்பு வேக‌வைத்து காய், சாம்பார் பொடி விட்டுகுக்கரில் விசில்வந்துகொண்டிருந்தது "நல்லா வேகட்டும்டா" என்று 5 விசில் வரும் வரை காத்திருந்து குக்கரை கீழே இறக்கிவிட்டோம், மணி 3ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது,நல்ல பசிவேறு, அவசரமாக‌ உள்ளே இருக்கும் வெப்பக்காற்று வெளியேற‌ விசில்குண்டை கரண்டியால் தூக்கிபிடித்ததும் நல்ல சத்த‌த்துடன் வெப்பக்காற்று வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தது பாதி வெளியேறிய நிலையில் இனி திறக்கலாம் என நினைத்து உடனே திற‌ந்துவிட்டேன், உள்ளே அதிக அழுத்ததில் காற்று இருந்ததால் சட்டென்று சாம்பார் பொங்கி என் இடது முழங்கால் முழுவதும் கொட்டிவிட்டது, சூடு தாங்காமல் அலறிவிட்டேன் கொட்டிய இடம் எரிச்சலுடன் வலித்தது கொப்புளம் வராமல் இருக்க உப்பை கரைத்து ஊற்றினோம், அப்படி இருந்தும் கொப்புளமாகி புண்ணாகிவிட்டது, நல்லவேளை "பேண்ட்" அணிந்திருந்ததால் சிறியகாயத்துடன் போனது இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்தான்,"ஆக்கப் பொறுத்த‌வுங்க‌ ஆற‌ப்பொறுக்க‌னும்னு" ப‌ழ‌மொழி சொல்லுற‌து ச‌ரிய‌தான் இருக்கு!

ஆர்வ‌மாக‌ ஆர‌ம்பித்த‌ சமைய‌ல் சோக‌த்தில் முடிந்த‌து, ஒரு வ‌ருத்த‌மான‌ விச‌யம் இந்த பரபரப்பில் வாங்கி வைத்திருந்த‌ "அப்பள‌த்தை" பொறிக்க‌ முடியாம‌ல் போய்விட்ட‌து, ஒரு சந்தோச‌மான‌ விச‌ய‌ம் க‌டைசியில் அம‌ர்ந்து சாப்பிடும்போது சமைத்த எல்லாமே ந‌ல்ல ருசியாக‌ இருந்த‌து, அன்று இரவு ஒரு சிந்த‌னை வ‌ந்த‌து ஒரு நாள் ஒருநேர‌ம் ச‌மைப்ப‌த‌ற்க்கே இவ்வள‌வு நேரமும், இவ்வ‌ள‌வு க‌வ‌னமும் தேவைப்ப‌டுகிற‌து, ஆனால் எல்லோர் வீட்டிலும் வீட்டு வேலைக‌ளையும் பார்த்துக்கொண்டு, கவனமாக, இவ்வள‌வு விரைவாக, இவ்வ‌ள‌வு சுவையாக , அம்மாக்களும் மனைவிகளும், எப்ப‌டித்தான் சமைக்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளின் சிர‌ம‌ங்க‌ள் புரிந்த‌து,

இத‌ற்கு முன்பு நான் என்அம்மாவின் சுவையான‌ சமைய‌லில் சில‌ நேர‌ங்க‌ளில், உப்பு, காரம் போன்றவை அள‌வுமாறிப் போகும்போது அதை பெரிய‌குறையாக‌ குறிப்பிட்டு சொல்லுவேன், பிறகு அதை எல்லாம் குறைத்துக்கொண்டேன், சில‌ செய‌ல்கள் ந‌ம‌க்கு சாத‌ரணமாக‌ தோன்றினாலும் நாம் அதை செய்யும்போதுதான் அதிலிருக்கும் பிரச்ச‌னைக‌ளும், அதை செய்பவ‌ர்க‌ளின் சிர‌ம‌ங்க‌ளும் புரிகிற‌து."
மறுமணம்
(ஒரு விதவைப் பெண்ணை மறுமணம் செய்பவன், சொல்ல வேண்டிய‌கவிதை!)

பெண்ணே!
உன்
கடந்த காலத்தைப் பற்றி
கவலைகள்
வேண்டாம் உனக்கு!
நம்
எதிர்கால‌த்தைப் ப‌ற்றி
அக்கறைப்ப‌டு !
அது போதும் என‌க்கு!

~நம்பிக்கைபாண்டியன்
-
அன்பு

காத‌லனுடன் செல்கிறேன்
தேடவேண்டாம்! என்று
கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில்
"அதிகம் கண்விழித்து
உடல் நலத்தை கெடுக்காதே!
நாளை படிக்கலாம்
முதலில் தூங்கு!" என்ற
அம்மாவின்
குரலில் இருந்த
ஆழமான அன்பு!
சுக்குநூறாய் கிழித்தது
கண்ணீரில்
நனைந்த கடிதத்தை!

-- நம்பிக்கைபாண்டியன்