Tuesday, March 27, 2007

என்னை சுற்றி

(சிலநண்பர்கள் சிலபாடங்கள்‍)

ந‌ம் வாழ்வில் எவ்வ‌ள‌வோ ந‌ண்ப‌ர்க‌ளை ச‌ந்திக்கிறோம்,அவர்களை கவனித்து பார்த்தால் ஒவ்வொருவ‌ரிட‌மும் ஒவ்வொரு வித‌மான‌ குண‌ங்க‌ள் காணப்ப‌டுகின்ற‌ன, அதில் ந‌ல்ல‌வை கெட்ட‌வை என‌ எல்லாம் க‌ல‌ந்திருக்கும்,அப்ப‌டி என் ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரிட‌ம் நான் க‌ண்ட‌ ந‌ல்ல‌குண‌ங்களில் சிலவற்றை நானும் பின்ப‌ற்றி இருக்கிறேன்,அதில் ஒன்றை சொல்லுகிறேன்,

க‌ல்லூரி நாட்க‌ளில் பாதி நாட்க‌ள் க‌ல்லூரி முடிவ‌த‌ற்கு முன்பே வேக‌மாக‌ புற‌ப்ப‌ட்டு சைட் அடிப்ப‌த‌ற்காக‌ பேருந்து நிலை‌ய‌த்திற்கு சென்றுவிடுவோம், மீதி நாட்க‌ள் இரவு வ‌ரை க‌ல்லூரியிலேயே இருப்போம், வார‌த்தில் 2 நாள் NCC இருக்கும், ஒரு நாள் NSS இருக்கும் சில‌ நாட்க‌ள் ம‌ற்ற துறைக‌ளுக்கு இடையே கிரிகெட் போட்டி ந‌ட‌த்துவோம், இத‌னால் என் வ‌குப்பு நண்ப‌ர்க‌ளின் விடுதி அறைக்கு அடிக்க‌டி செல்வோம், மாண‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் என்ப‌தால் எங்க‌ள் க‌ல்லூரியில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ள் இருக்காது சுத‌ந்திரமாக‌ இருப்போம், சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் திருட்டுத்த‌ன‌மாக‌ மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வாங்கி வ‌ந்து த‌ருவார்க‌ள், எப்போத‌வ‌து வார்ட‌ன் பார்த்து விட்டால்" சார் NCCல‌ இருக்கோம் சார் ட்ரெஸ் மாத்த‌ வ‌ந்தோம் சார்" என்று ஏதாவ‌து பொய் சொல்லி த‌ப்பித்துவிடுவோம்,விடுதி வாழ்க்கையில் நட்பு மிகமிக‌ ச‌ந்தோச‌மான‌து‌,அர‌ட்டை அடிக்க‌ சேர்ந்துவிட்டால், ஒரே சிரிப்பு ம‌ய‌மாக‌த்தான் இருக்கும், ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் உண்மையான‌ குணங்க‌ளை எளிதில் க‌ண்டுபிடித்துவிட‌லாம்,எங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் குழுவில் எல்லோரும் பெரிய‌ அர‌ட்டை ம‌ன்ன‌ர்க‌ள், என‌வே விடுதியில் எல்லா துறை மாண‌வ‌ர்களிடமும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ந‌ட்பு இருக்கும்,

ஒருமுறை வரலாற்று துறையை சேர்ந்த‌ மாண‌‌வ‌ன் ஒருவ‌ன் அறையில் சில‌ர் அம‌ர்ந்து பேசிகொண்டிருந்தோம் அப்போது அவ‌ன் க‌டித‌ம் எழுதிக்கொண்டிருந்தான்,விடுதி மாணவர்களுக்கும் கடிதங்களுக்கும் நெருங்கிய ப‌ந்தம் உண்டு,அவர்களின் மனஆறுதலுக்கும் , வீட்டில் அன்பிற்க்கும்,பணதேவைகளுக்கும் கடிதத்தையே அதிகம் சார்ந்திருப்பார்கள், பேசிகொண்டே த‌ற்செய‌லாக‌ அவ‌னை பார்த்தேன் க‌டித‌ம் எழுதிகொண்டிருந்த‌வ‌ன் சட்‌டென்று எழுதுவ‌தை நிறுத்திவிட்டு ச‌ற்று நிமிர்ந்து அம‌ர்ந்து க‌ண்க‌ளை மூடி ஏதோ பிரார்த்த‌னை செய்தான் பிற‌கு மீண்டும் எழுதுவ‌தை தொட‌ர்ந்தான், என‌க்கு அவ‌ன் என்ன‌ பிரார்த்த‌னை செய்தான், யாருக்கு க‌டித‌ம் எழுதினான், என்ன‌ எழுதினான் என்ப‌தை அறிந்துகொள்ளும் ஆர்வ‌ம் தொற்றிகொண்ட‌து,(அடுத்தவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஆர்வம்).

அவ‌ன் ந‌ன்கு ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ன் அத‌னால் த‌ய‌ங்காம‌ல் அவ‌னிட‌ம் கேட்டுவிட்டேன், இன்னும் ஒட்டாம‌ல் வைத்திருந்த‌ க‌டிதத்தை என்னிட‌ம் நீட்டினான்,"டேய் யாருக்கா‌க‌ பிரார்த்தனை செய்தனு தெரிஞ்சுக்க‌ கேட்டேன்டா‌ சொன்னா‌ போதும் " என்று த‌ய‌ங்கினேன், "அட‌ சும்ம‌ ப‌டிடா ம‌ச்சி இது என்ன பெரிய‌ ராணுவ‌ ர‌க‌சியமா" என்று கடித‌‌த்தை என் கையில் திணித்தான் அது அவனுடைய‌ ப‌ள்ளிப‌டிப்போடு ப‌டிப்பை நிறுத்திவிட்டு வேறு ஊரில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் ந‌ண்ப‌ன் ஒருவ‌னுக்கு அனுப்பிய‌ ப‌தில் க‌டித‌ம், அவ‌னுட‌ய‌ வேலை ம‌ற்றும் ப‌ண‌விச‌ய‌ங்க‌ளில் அந்த நண்பனுடைய ‌ க‌ஷ்ட‌ங்க‌ள் தீர‌ பிரார்த்தனை செய்வ‌தாக எழுதி இருந்தான், அப்ப‌டி எழுதும்போது உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்ப‌தை வார்த்தைக‌ளால் ம‌ட்டும் சொல்லாம‌ல் உட‌ன‌டியாக‌ க‌ண்க‌ளை மூடி சில‌ நொடிக‌ள் ம‌ன‌ம்விட்டு உண்மையாக‌வே க‌ட‌வுளிட‌ம் பிரார்த்தனை செய்திருக்கிறான் என்ப‌து அவ‌ன் சொல்லாம‌லேயே என‌க்கு புரிந்த‌து‌, ம‌ன‌ம் நெகிழ்ந்து பெருமையாக‌ அவ‌னை பார்த்தேன்,

பிரார்த்த‌னைக‌ளுக்கும் எண்ண‌‌ங்க‌ளுக்கும் வ‌லிமை உண்டு என்ப‌தால் யாரிட‌மாவ‌து "உங்க‌ளுக்காக‌ நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று வார்த்தைக‌ளாலோ, எழுத்துக்க‌ளாலோ சொல்லும்போது அந்த‌ ந‌ல்ல‌ குண‌த்தை நானும் பின்ப‌ற்றுகிறேன்!"" வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் வெளிப்படுத்தும் நல்லகுணங்களை செயல்களாலும் வெளிப்படுத்துவது நல்லது!!
ஒப்பீடு!

மனிதர்களுடன்!
மனிதர்களை
ஒப்பிட்டுப் பார்த்தால்!
தலைக்கனமும் வரும்!
தாழ்வு மனப்பான்மையும் வரும்!

பிரச்சனைகளை
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் தவறுகள் புரியும்!

வெற்றிகளை!
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் நன்மைகள் புரியும்!

வாழ்க்கையை!
சம்பவங்களுடன்

ஒப்பிட்டுப் பார்த்தால்!
வளமுடன் வாழ!
வழிகள் தெரியும்!

~நம்பிக்கைபான்டியன்
நட்பு வேண்டும்!

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்

யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி

இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை

தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை

கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்

காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

~நம்பிக்கைபாண்டியன்

Wednesday, March 21, 2007

நட்பு

காதலுக்காக
காத்துக் கொண்டு
இருப்பதை விட!

நட்புடன்
நடந்துகொண்டு
இருப்பது
நல்லது!
~நம்பிக்கைபாண்டியன்
என்னைசுற்றி

(இனிமையான‌ குழ‌ந்தைப‌ருவ‌ம்)

குழந்தைப் ப‌ருவ‌ம் எல்லோராலும் விரும்ப‌ப்ப‌டும் ப‌ருவ‌ம்,க‌ட‌வுள் க‌ண்முன் தோன்றி என்ன‌ வ‌ர‌ம் என்று கேட்டால் மீண்டும் என்னை குழ‌ந்தையாக்கு என்று கேட்ப‌த‌ற்கு நிறைய மனித‌ர்க‌ள் த‌யாராக‌வே இருக்கிறார்க‌ள்! குழந்தை‌ப்ப‌ருவ‌த்திலும் சிறுவ‌ர்க‌ளாக‌ இருக்கும்போதும் , ஒவ்வொருவ‌ரின் குற்றமில்லாத குறும்புகளும் பேச்சுகளும் நினைக்க நினைக்க அவ்வ‌ள‌வு இனிமையாவை!என் குழந்தை ப‌ருவ‌த்து நிகழ்வுக‌ள் என‌க்கு அதிக‌ம் நினைவில்லை நான் அறிந்த சிலரின் குழ‌ந்தைப‌ருவ நிகழ்வுகள் ந‌ன்கு நினைவில் இருக்கிற‌து!

ஒரு முறை என் சித்த‌ப்பாவின் ஊருக்கு என் வீட்டில் எல்லோரும் சென்றிருந்தோம், நாங்க‌ள் சென்ற மாலைநேர‌த்தில் டீ அருந்துவ‌த‌ற்கு த‌யாரானார்க‌ள்,எங்க‌ளை பார்த‌த்தும் இருந்த‌ குறைந்த அள‌விலான‌ டீ யை எல்லோருக்கும் பாதி பாதியாக ச‌ம‌மாக‌ பிரித்து ஊற்றி அருந்த‌ கொடுத்தார்க‌ள், அப்போது என் சித்த‌ப்பா இளையவன் விக்னேஷ் (அப்போது 5வயது இருக்கும்) ""ம்ம் போங்க!!‌என‌க்கு அர கிளாஸ்லாம் வேணாம் ட‌ம்ள‌ர் நிரையா வேணும்? என்று அட‌ம்பிடித்தான்,திரும்ப கொடுக்க முயன்ற‌ எங்க‌ளையும் சித்தி கொடுக்க‌விடாம‌ல் த‌டுத்து கோபத்துடன் அவனிடம் "போடா நாயே!நிறையா வேணும்னா போய் மிச்ச‌த்துக்கு த‌ண்ணி ஊத்திக்க! நிறைய‌ வ‌ந்துரும்!"" என்று சொல்ல‌ அவ‌னும் உட‌னே எழுந்து டம்ளர் நிறையவருமாறு பானையிலிருந்து த‌ண்ணீரை எடுத்து ஊற்றி ம‌ட‌ ம‌டவென‌ குடித்துவிட்டான், அன்று முழுவ‌தும் அதை நினைத்து நினைத்து சிரித்தோம்!

வைகாசி மாத‌ம் எங்க‌ள் ஊர் திருவிழாவிற்கு அத்தைக‌ள், சித்த‌ப்பா, பெரிய‌ப்பா எல்லோரும் குடும்ப‌மாக பாட்டி வீட்டில்தான் இருப்போம், அன்று இர‌வு முழுவ‌தும் மொட்டை மாடியில் அதிக‌மான‌ அர‌ட்டை அடித்துக்கொண்டேதான் எல்லோரும் சேர்ந்து தூங்குவோம்,தின்பண்டங்கள் நிறைய தருவார்கள், அத்தைகள், ச‌கோதரிகள் எல்லோரும் இருகைகளில் ம‌ருதாணி அரைத்து வைப்பார்கள்,சிறுவர்களாக இருக்கும் எங்களுக்கும் அத்தை பையன்களுக்கும் ஒரு கைக‌ளில் ம‌ட்டும் வைத்துவிடுவார்க‌ள், அன்று நடுஇர‌வு ப‌ல‌ரும் தூங்கிவிட‌ சில‌ர் ம‌ட்டும் தூங்காம‌ல் அரட்டைஅடித்து சிரித்து பேசிகொண்டே இருந்தோம், அப்போது கைக‌ளில் ம‌ருதாணியுட‌ன் தூங்கிக் கொண்டிருந்த‌ அத்தை பைய‌ன் ஒருவ‌ன் தூக்க‌த்திலேயே திடீரென‌ ‌எழுந்தான் கைக‌ளில் இருந்த‌ ம‌ருதாணியை ல‌ப‌க் ல‌ப‌க்கென‌ பிரித்து வாயில்போட்டு முழுங்க‌ ஆர‌ம்பித்துவிட்டான், சிறிது நேரத்திற்குபிறகே பார்த்தோம், உட‌னே த‌டுத்து ,வாயில் இருந்த‌தையும் தோண்டி எடுத்துவிட்டார்க‌ள்,ம‌றுநாள் முழுக்க‌ வ‌யிற்றுப்போக்குட‌ன் இருந்தான்,அவர் இப்போது சிலநேரங்களில் அதிககிண்டலுடன் பேசிகொண்டே இருப்பார், அவரின் பேச்சை நிறுத்த"நிறுத்துங்க மச்சான்!உங்க‌ளை ப‌த்தி எங்க‌ளுக்கு தெரியாதா‌ அரை தூக்க‌த்தில‌ அரைகிலோ ம‌ருதாணிய‌ தின்ண‌ ஆளுதானே நீங்க‌! என்று சொன்ன‌வுட‌ன் சிர்த்துகொண்டே அமைதியாகிவிடுவார்.


சில‌ ஆண்டுக‌ளுக்குமுன்னால் என் நண்ப‌ன் வீட்டிற் சென்றிருந்தேன், அப்போது என் ந‌ண்ப‌னின் ச‌கோத‌ரிக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தை பிற‌ந்திருந்த‌து , நானும் என் ந‌ண்ப‌னும் குழ‌ந்தை அருகே அம‌ர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம், அப்போது முத‌ல் குழ‌ந்தை ஷீலா" ஏம்மா பாப்பாக்கு குட்டி க‌ண்ணா இருக்குல, அது பாக்குற‌ப்போ நாம‌லாம் அதுக்கு பூத‌ம் மாதிரி தெரிவோமா?? என்று கேட்க உட‌னே அக்கா "அய்யோ!! என் பிள்ளைக்கு அறிவ‌ பாருங்க‌டா‌ நீங்க‌ளும்தான் இருக்கீங்க!! என்று சொல்லி குழ‌ந்தையை அணைத்துக்கொண்டார்க‌ள்! அந்தக்‌ குழந்தை சிந்தனையான ‌கேள்வியை கேட்ட‌தும் நாங்க‌ள் சிறுவ‌ய‌தில்! "டேய் எரும்பு க‌ண்ணுக்கு நாம எல்லாரும் அர‌க்க‌ன்டா! ந‌ம்ம தெரு சாக்க‌டைதான் அதுக்கு க‌ட‌ல், இந்த‌க் க‌ல்லு எல்லாமே அதுக்கு இம‌ய‌மலைடா!" என்று சொல்லி விளையாடிய‌து நினைவுக்கு வ‌ந்து சென்ற‌து!

என் மாமா வீட்டில் ந‌ட‌ந்தது, ஒரு நாள் என் மாமா ம‌க‌ன் மூத்த‌வ‌ர் ச‌ர‌வ‌ண‌ன் ஆறு வ‌ய‌தில் முதல் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அருகே உள்ள ப‌ள்ளிக்கு சென்று மழையால் தாம‌தாமாக‌ வீடு திரும்பியிருக்கிறார்! அத்தை "ஏன்டா!கண்ணு இவ்வ‌ள‌வு நேர‌ம் க‌ழிச்சு வ‌ர‌! என்று கேட்க‌, அத‌ற்கு!" ம‌ழ‌ பேஞ்சுச்சுமா! அதான் கொஞ்சங் கொஞ்ச‌மா வ‌ந்தேன்!என்று சொல்ல‌, அத்தை முதலில் புரியாம‌ல் ,யோசித்த‌ பிற‌கு ம‌ழைக்கு ஒதுங்கி மெதுவாக‌ நின்று நின்று வ‌ந்த‌தை ம‌ழ‌லை மொழியில்"கொஞ்சங் கொஞ்ச‌மாக‌ வ‌ந்தேன்" என்று சொன்ன‌தை புரிந்து சிரித்தார்க‌ளாம்,

இதுபோல் எத்த‌னையோ வீடுகளில் எத்த்னையோ வித‌மான‌ குழ‌ந்தை ப‌ருவ‌த்து சுவாரஸ்ய‌மான‌ நிக‌ழ்வுக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌, குழ‌ந்தைக‌ளின் செய‌ல்க‌ள் சிலநேர‌ங்க‌ளில் கோப‌த்தை கொடுத்தாலும் பல நேரங்களில் குழந்தைபருவமும் அதன் நினைவுகளும் இனிமையாகவே இருகின்றன. அவ‌ர்க‌ளின் எண்ண‌ங்க‌ளை, பேச்சுக்க‌ளை சிரிப்புகளை எல்லாம் ர‌சிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் அந்தநேரத்தில் நம் க‌வ‌லைக‌ள் எல்லாம் இருக்கும் இட‌ம் தெரியாம‌ல் மறைந்துவிடுகின்ற‌ன‌!