Thursday, February 14, 2019

காதல் மாற்றங்கள் - கவிதை

என் மனைவி எனும் காதலியே
உன் வருகைக்கு பின்,

என் புகைபிடிக்கும் பழக்கத்தை
தொடர முடிவதில்லை...

இருசக்கர வாகனத்தை
அதிவேகமாக ஓட்ட முடிவதில்லை...

இரவு காட்சி படம் பார்த்துவிட்டு
தாமதமாக வீடு திரும்ப முடிவதில்லை...

நண்பர்களின் சனிக்கிழமை
இரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை...

நள்ளிரவை தாண்டி
தொலைக்காட்சி பார்க்க முடிவதில்லை...

அடிதடி பிரச்சனைகளில்
 முன்நிற்க முடிவதில்லை...

என்னை கடந்து செல்லும்
அழகான பெண்களை உற்று பார்க்க முடிவதில்லை...

சம்பாதிக்கும் பனத்தை
கண்மூடித்தனமாக செலவு செய்ய முடிவதில்லை...

திருமணத்திற்கு பின்
இழந்துவிட்டதாக தோன்றும்
அத்தனை இழப்புகளையும்
அன்பு நிறைந்த உன்
ஒற்றை முத்தம் ஈடு செய்துவிடுகிறது

                                                      நம்பிக்கைபாண்டியன்

Monday, November 12, 2018

செல்போன் - கவிதைகள்

1)

எட்டாத
தூரத்திலிருப்பவர்களுடன்
பேசுவதை எளிதாக்கிவிட்டு...
அருகிலிருப்பவர்களுடன்
பேசுவதை அரிதாக்கிவிட்ட
விசித்திர நவீனம்
செல்போன்கள்!


2)

திருவிழா தேரில்
ஊர்வலம் வரும் கடவுளை
முதலில்
வணங்குகின்றன‌
செல்போன்கள்!

                                                        நம்பிக்கைபாண்டியன்





Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டு ‍ (குட்டிகதை)

                                                                                 மகன் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்திருப்பதை அறியாத‌ அப்பா " நேரத்தில வீட்டுக்கு வராம ஏண்டா இப்படி மாடு மாதிரி ஊர சுத்திட்டு வர்ற" என்றார்.


அதைகேட்ட மகன் " என்னப்பா சொன்னீங்க? மாடு மாதிரியா" என்று கேட்டு கர்வமாக சிரித்துக்கொண்டே , தன் சட்டை காலரை தூக்கி விட்டான்,


அதற்கு அப்பா "ஏண்டா உன்ன மாடுனு திட்டுறேன் இப்படி சிரிக்கிறியேடா" என்றார்

 மகன் சிரித்துக்கொண்டே " அப்பா மாடுனா சும்மா இல்லப்பா,
சாதி, மதங்களை கடந்து, ஊரை மறந்து, அத்தனை இளைஞர்களையும், ஒற்றுமையாக ஒன்று சேர்க்கும் வேலையை,

 நம்ம நாட்டில் ஒரு அரசியல்வாதியோ, ஒரு சினிமா நடிகரோ, ஒரு பெரும் பண‌க்காரனோ செய்ய முடியாததை இன்று ஒரு மாடு செய்திருக்கிறது அப்பா,
என்னை மாடு என்று திட்டுவதில் எனக்கு பெருமைதான் அப்பா" என்றான்

 அப்பா புன்னகையுடன் அமைதியானார்.

 

Friday, July 26, 2013

கபீஷ் கவிதைகள் - மழலை கவிதைகள்!

Inline image 1

கபீஷ் கவிதைகள்

                         1

தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!

                         2

தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள்  அனைத்தையும்
 "அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன  குழந்தைகள்!

                          3

இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை 
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by  அம்மா!

                           4

பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!


(எனது மகன் கபீஷ்வர்  எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)








Thursday, February 14, 2013

ஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்





நீ
ஊருக்குச்சென்ற‌
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள்
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
 உன் புகைப்படம்!
                 *
நேரத்தில் சாப்பிடு
நேரத்தில் தூங்கு" என‌
எளிதில் சொல்லிவிடுகிறாய்
தொலைபேசியின் வழியே
நிச்சயம் முடிவதில்லை
 நீ இல்லாத நாட்களில்!
                 *
நீ அருகிலிருந்து கொடுக்கும்
நூறு முத்தங்களின் மகிழ்ச்சியை!
தொலைபேசி பேச்சின்
முடிவில் கொடுக்கும்
ஒற்றை முத்தம்
கொடுத்துவிடுகிறது
                  *
நீ அருகிலிருந்து
ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களிலும்
அமைதியான வீடாக உணர்ந்து
எளிதில் தூங்கிவிடுகிறேன்!
நீ ஊருக்குச்சென்ற நாட்களில்
தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!


Monday, November 05, 2012

வீடு! - படக்கவிதை
















வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!

 

             

நமது கவலைகளும், கோரிக்கைகளும்.


தருமி அவர்கள் பதிவிலிருந்து
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

*

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12) அத்வானி கூறியுள்ளார்.


*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

Wednesday, August 08, 2012

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை




இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை 
ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை
குழந்தைகளால்!

*****************************

வராமல் 
சோறு ஊட்டும்
 பூச்சாண்டியும்...

வந்து
சோறு ஊட்டும் 
நிலாவும்...

காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

*****************************

தூங்கும்பொழுது
சிரிக்கின்ற‌ குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!





Tuesday, July 10, 2012

ஆனந்த விகடனின் வலையோசையில் என் வலைபதிவு!


 "ஆனந்தவிகடனின் இணைப்பு புத்தகமான என் விகடனில்,  வலைபதிவில் எழுதி வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக "வலையோசை"என்ற பகுதியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு வலைபதிவை அறிமுகப்படுத்திவருகிறார்கள்,

                                         கடந்த வார (04.07.2012) ஆனந்தவிகடனில் தென்மாவட்டங்களுக்குகான மதுரை பதிப்பு என்விகடனில் வலையோசை பக்கத்தில் எனது வலை பதிவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்! இதன் வழியாக நூற்றுக்கணக்கானவர்களை சென்றடைந்த என் எழுத்துக்களை  ஆயிரக்கணக்கானோர்  படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, அதற்கு காரணமாக இருந்து, எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை என் எழுத்துக்களை படித்தும் &பாராட்டியும் ஊக்குவித்த  அனைத்து நண்பர்களுக்கும்,   என் வலை பதிவினை அறிமுகப்படுத்தி வெளியிட்ட‌ஆனந்த விகடன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

(கடந்த வாரம் எழுத வேண்டிய பதிவு இது பணிச்சூழல் காரணமாக தாமதமாகிவிட்டது)

Monday, June 25, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம் 4 - கவிதைகள்


சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே! என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!

இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என‌
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!


*******************************



பழிக்குப்பழி!
அன்பளிப்பாக கிடைத்த‌
அரிய புத்த‌கமொன்று
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!
கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!


வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!
அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன‌
அம்மாவின் 
விலை உயர்ந்த 
பட்டுப்புடவைகள்!

*******************************

Monday, June 18, 2012

உன் ரசிகன் - காதல் கவிதைகள்


 யார் நீ?

தூரத்தில் இருக்கும்
சூரியன்தான்
நட்சத்திரமாம்!
அருகில் இருக்கும்
நட்சத்திரம்தான்
சூரியானாம்!

உருவத்தால்
எனக்கு
தூரத்திலிருந்தாலும்
உள்ளத்தால்
என்
அருகிலிருக்கும் நீ,
சூரியனா? நட்சத்திரமா?

வேகத்தடை!
விரைந்து செல்லும்
என்
வாகனத்திற்கு!
சாலைக்கு வெளியே
ஒரு வேகத்தடையாய்,
உன்
பெயர் கொண்ட‌
கடையொன்றின்
விளம்பர பலகை!


ரசிகன்
அம்மன் கோவில்
நாய்க்குட்டி
சூரிய உதயம்
மலர்ந்த பூக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி
குழந்தைகளின் முத்தம்
குட்டி கவிதைகள்!
ஜோடிப் பறவைகள்!
தன்னம்பிக்கை புத்தகங்கள்
வெனிலா ஐஸ்கிரீம்
வண்ணக் கோலங்கள்
வாழ்த்துஅட்டை சேகரிப்பு
மொட்டைமாடி நட்சத்திரங்கள்
நிலா வெளிச்சத்தில் உணவு!

மழைபெய்து முடித்த‌தும்
மாச‌ற்ற‌ காற்று!
அழுது தீர்த்த‌தும்
அமைதியாகும் ம‌ன‌சு!
இமைமூடி ர‌சிக்கும்
இர‌வுநேர 
மெல்லிசைப்பாட‌ல்க‌ள்!" என‌
உன‌க்கு பிடித்த‌
எல்லாவ‌ற்றையும்
ர‌சிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்!
உன்னை என‌க்கு
பிடித்த‌ நாளிலிருந்து!

Wednesday, May 16, 2012

திருமண அழைப்பிதழ்

வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
வரும் மே 25 ல் எனது திருமணம் நடைபெற இருக்கிறது
அனைவரும் அவசியம் வருகை தந்து வாழ்த்தி சிறப்பிக்கவும்!



வருகை தரும் நண்பர்கள், தங்கும் வசதி ஏற்பாடுகள் செய்ய முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்!

9787777468
9092267222

நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்

Tuesday, May 15, 2012

குழப்ப கவிதைகள்!

நிறைய பேரின்
மனதில் இருக்கும்!
நிறைய பேரில்
ஒருவராய் இருப்பது
நட்பு!
ஒருவர் மனதில்
மட்டும் இருக்கும்!
ஒருவராய் இருப்பது
காதல்!


********************

எழுதுவதெல்லாம்
அனுபவமென்றால்
எல்லா மனிதர்களும்
கவிஞர்களே!

எழுதுவதெல்லாம்
கற்பனையென்றால்
எந்தக்கவிஞனும்
மனிதனல்ல! 


மனிதர்களாய் இருக்கும்
கவிஞர்களைப் போல‌
அனுபவமாய் இருக்கும்
கற்பனையே கவிதை!


**********************

பெண்களை
புரிந்துகொள்ள முடியாது
என்ற உண்மையை
புரிந்து கொண்டவர்கள் தான்!
பெண்களை!
உண்மையிலேயே!
புரிந்து கொண்டவர்கள்


            




Friday, April 27, 2012

என் ரயிலில் நீ! - காதல் கவிதைகள்


சிறுவனாய் பயணித்த
முதல் ரயில் பயணத்தின்
உற்சாகத்தை
மீண்டும் உணர்ந்தேன்
உன்னுடனான
முதல் ரயில்பயணத்தில்...

******************************


சில நேரங்களில்
அருகருகே அமர
இடம் கிடைத்தாலும்
எதிரே அமர்ந்து
பயணிப்பதையே விரும்புகிறேன்
உன்னை பார்த்துக்கொண்டே
பயணிப்பதால்!

*********************************
உன்னை வழியனுப்ப
வரும்போதெல்லாம்
உனக்கான ரயிலில்
நீ விடைபெற்றுச்
சென்ற பின்னும்
ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் அமர்ந்துவிட்டே
வீடு திரும்புகிறேன்
அங்கு நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை
சுவாசிப்பதால்!


*********************************

 


 

Wednesday, April 11, 2012

எழுதப்படாத நடைமுறைகள்! - கவிதை மாதிரி



1
ஒவ்வொரு ரயில்பயணத்திலும் தவறாமல் கிடைத்துவிடுகின்றன புதிதாய் சில அறிமுகங்கள்

2
ஊருக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளில் எடைகுறைந்த பையே(bag) மனைவியிடம் இருக்கிறது!

3
பேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது!

4
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை!

5)

நேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்!
                                      
                                              --நம்பிக்கைபாண்டியன்

Friday, March 23, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம்! 3 - படக்கவிதைகள்

வலியுணராதவர்கள்
நள்ளிரவில் 
அழும் குழந்தையை
தொந்தரவாக 
நினைக்கும் தம்பதிகள்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
குழந்தையற்றவர்களின் 
மனவலியை!

நட்பு
பத்திரிக்கை 
கொடுக்கப்படாத 
திருமணத்திற்கும்
நேரில் சென்று
வாழ்த்தும் குணம் 
நட்பில் மட்டுமே
சாத்தியமாகிறது!

ஏக்கம்
தினமும்
எங்கள் ஊரைக்

கடந்துதான் செல்கின்றன!
ஒருநாள் கூட‌
நின்றதேயில்லை
இந்த விமானங்கள்!