ஆறாம் வகுப்பில் வெவ்வேறு பள்ளிகளிலிருந்து வந்து அந்நியமாக தெரிந்தவர்களெல்லாம், ஏழாம் வகுப்பு வரும்போது சிறந்த நண்பர்களாக மாறியிருந்தார்கள்! வகுப்புகளை செக்சன் வாரியாக பிரிக்கும்போது புதிதாய் சிலரும் வந்திருந்தார்கள்! மிகப்பிடித்தமான சில நண்பர்கள் பெயில்ஆகி 6 ம் வகுப்பிலேயே இருப்பார்கள், மிக வருத்தமாக இருக்கும், மரத்தடியிலிருந்து வகுப்பறைக்கு மாறினோம், வகுப்பு ஆசிரியர் ராமலட்சுமி டீச்சர். மதுரை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டில் பல வருடங்களாக தொடர்ந்து எங்கள் பள்ளிதான் சாம்பியன், மாநில அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கு வந்துவிடுவார்கள்! அதனால் ஹாக்கியில் அதிக ஆர்வம் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் தினமும் மாலை விளையாடிவிட்டு தாமதமாக டியூசன் போய், சிறிது நேரம் மட்டும் படித்துவிட்டு வீடு வந்து விடுவேன்! இரண்டு மாதத்தில் வீட்டிற்கு தெரியவர, அப்பாவிடம் அன்று வாங்கிய அடியில் விளையாட்டை மறந்துவிட்டேன்! வகுப்பில் சில மாணவர்கள் அடிக்கடி சண்டை போடுவோம், அவர்கள் கால்பந்து விளையாடும்போதும்,ஹாக்கி விளையாடும்போது பந்தை தாக்குவதை விட காலை தாக்குவதிலேயே குறியாக இருப்பர்கள்! 11 மற்றும் 12 வகுப்பில் மட்டும் பெண்கள் இருப்பார்கள்! ஏதேனும் கடைக்கு போகவேண்டுமென்றாலும், சிறு உதவி என்றாலும் எங்களிடம்தான் சொல்லுவார்கள் நாங்களும் மறுக்காமல் செய்வோம்! அதில் சிலர் சொந்த தம்பிபோல் மிக அன்பாக இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் நமக்கு உடன் பிறந்த ஒரு அக்கா இல்லையே என்று நினைத்திருக்கிறேன். அதிரடியான ஜாக்கிசான் படங்கள் பார்க்க ஆரம்பித்த வகுப்பு இது! பட்டப்பெயர்களில் ஒருவன் பெயர் "பப்ஸ்". அடிக்கடி பப்ஸ் வாங்கி சாப்பிடுவதால் அவனுக்கு அப்படி பெயர்.! பள்ளியிலிருந்து முதல் சுற்றுலா கன்னியாகுமரி, திருச்செந்தூர் தூத்துக்குடி சென்றுவந்தோம், நான் முதன் முதலில் கடலும் அலைகளும் பார்த்து ஆச்சர்யமடைந்த வகுப்பு இது. 92 ல் எங்களுடன் 7ம் வகுப்பு படித்து விட்டு தஞ்சைக்கு வேறு பள்ளிக்கு மாறிசென்ற மணிகண்டன் என்ற நண்பன் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் 20 வருடங்களுக்கு பிறகு 2012 ல் என்னை facebook ல் தேடி கண்டுபிடித்துவிட்டான்! ஆச்சர்யமான நட்பு ஆச்சர்யமான facebook
எட்டாப்பு இந்த வருடம் முதல் இனி எட்டாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புபோல் பொதுத்தேர்வுதான் என பயமுறுத்தினார்கள், நல்ல வேலை அப்படி நடக்கவில்லை! வீட்டிலிருந்து உணவு கொண்டுவராத நாட்களிளும் இலவச முட்டை போடும் நாட்களில் பள்ளிச்சாப்பாடுதான்! பள்ளிக்கூட மழை நாட்கள் அழகானவை! வகுப்பறைக்குள் இருந்து பார்க்கும்போது சிறுமலையிலிருந்து இறங்கி மைதானம் முழுவதும் மழை பெய்யும் காட்சி அற்புதமானது, மழை காலத்தில் பள்ளி மைதானத்தில் திரியும் சிறிய சிவப்பு நிறத்திலான பட்டுபோன்ற மென்மையான வெல்வெட் பூச்சிகளை பிடித்து விளையாடுவோம்! ஒரு நாள் மாலை நான்கு மணிக்கு திடீர் மழை! கடுமையான மழை, 4.30 க்கு பள்ளி முடிந்தது 5.30 வரை மழை குறையவில்லை! குடையும் மழைகாகிதமும், கொண்டுவந்திருந்த சிலர் மட்டும் சென்றுவிட்டனர்! நாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை,புத்தக நோட்டுகள் நனைய கூடாதே! பலர் மழை நிற்க காத்திருந்தோம்! வாட்ச்மேன் வகுப்பறைய பூட்ட வந்துவிட்டார், பிறகு அவரிடம் சொல்லி எல்லாருடைய புத்தகப்பைகளையும் வகுப்பிலேயே வைத்து பூட்டிவிட்டு ஒட்டு மொத்தமாக மழையில் இறங்கினோம்! எங்களைபார்த்த மற்ற வகுப்பினர் சிலரும் சேர்ந்துகொள்ள ,ஹே,,, என கத்திக்கொண்டு பெரிய கூட்டமாய் எல்லோரும் சேர்ந்து ஓடி ஆடி சாலைகளில் விளையாடிக்கொண்டே மழையில் நனைந்தபடியே வீடு சென்றோம்! ஊரே அன்று எங்களை பார்த்து ஆச்சரியபட்டது! ஏதாவது விழிப்புணர்வு நாள் வந்துவிட்டால், உடனே எல்லோரையும் அழைத்துக்கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டையை கொடுத்து ஊர்வலம் வரச்சொல்லுவார்கள்! ஆர்வத்துடன் செல்வோம், பிடித்த கலர் கலர் ஆடைகளில் வரலாம் தினமும் அணியும் சீருடை அன்று அவசியமில்லை என்பதால் தீபாவளி, பொங்கலுக்கு அடுத்து வரும் பள்ளி நாள், சனிக்கிழமை பள்ளி நாள் ஆகியவற்றிகாக ஆர்வத்தோடு காத்திருப்போம், பட்டப்பெயரில் ஒருவன் பெயர் "டொய்ங்" சப்தம் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் டொய்ங் என்ற வார்த்தையை பயன்படுத்துவான்! (உ.தா) ஹீரோ வில்லன டொய்ங்னு(டுமீல்) சுடுவான் வில்லன் கீழே "டொய்ங்"(டொம்னு) விழுந்துருவான்" என்பான். பள்ளியில் விவசாய ஆசிரியர் ஒருவர் வந்தார்! பள்ளியை சுற்றி மரங்களை நட்டு வாரத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு நாள்! ஒவ்வொரு செக்சனுக்கும் ஒவ்வொரு பகுதி என பிரித்து கொடுத்தார்! நம் பொறுப்பில் உள்ள மரம் நன்றாக வளரவேண்டும் என்று ஆர்வமாக மிக அக்கறையாய் மரங்களை பார்த்துக்கொள்வோம்! இன்றும் மரங்களின் மீது இருக்கும் அன்பை அன்றே ஆரம்பித்து வைத்த வகுப்பு இது!
ஒன்பதாப்பு
வகுப்பு ஆசிரியர் சொக்கப்பன், வகுப்புகளை வெவ்வேறாக பிரித்ததில் நிறைய நண்பர்கள் வேறு செக்சனுக்கு சென்றுவிட்டார்கள்! மிகவும் வருத்தப்பட்டேன் அதில் ஒருசாதகமான விசயம் என்ன வென்றால் என்னை விட நன்றாக படிப்பவர்கள் வேறு ஒரே செக்சனுக்கு சென்றுவிட! சுமாராக படிப்பவர்கள் என் வகுப்பிற்கு வர, கொஞ்சம் நல்லா படிக்கும் நான் ரொம்ப நல்லா படிப்பவன் போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிவிட்டது பிறகு அதற்காகவே படிக்க வேண்டியதாகப்போய்விட்டது! முதல் முறையாக வகுப்பு லீடர் ஆனேன், B.Ed படிக்கும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் பயிற்சி எடுக்க வகுப்பிற்கு வருவார்கள்! அதில் மனோரஞ்சிதம் என்றஆசிரியை மாணவர்களை அதிகம் திட்டாமல் பொறுமையாக சொல்லி கொடுத்து சிறு தேர்வுகளாக வைத்து எல்லாரையும் உற்சாக்கப்படுத்தி நம்பிக்கை வளரும்படி பேசி நன்றாக படிக்கவைத்தார்கள், சுமாராக இருந்த என் கையெழுத்தை ஓரளவிற்கு நன்றாக இருக்குமாறு எழுத பயிற்சி கொடுத்த ஆசிரியை. ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அன்று ஒரு ரோல் மாடலாக தெரிந்தவர் அந்த ஆசிரியை. நான் அவ்வப்போது பள்ளிக்கு தாமதமாக செல்வேன் , , காலை சிறப்பு வகுப்பு முடிந்து prayer ஆரம்பித்துவிடும், தாமதமாக வருபவர்களை தண்டிக்க கேட் அருகே PT ஆசிரியர் நின்றால் பயப்பட தேவையில்லை ஒரு அடியோடு அனுப்பிவிடுவார், எப்போதாவது தலைமை ஆசிரிய்ரே நிற்பார், அதிக அடி விழும் அரைநாள் ஆப்செண்ட் விழும்! அவர் நிற்கும் நாட்களில் பள்ளிக்கு பின்னே சென்று வேலி ஏறி குதித்து! எங்கள் வகுப்புக்குள் சென்று அமர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் திரில்லிங்கானவை! அரைகால் ட்ரவுசரில் இருந்து முழுகால் பேண்ட்டுக்கு மாறிய வகுப்பு இது! ஒவ்வொரு சனி ஞாயிறும், ஆற்றங்கரையில் கூட்டம் அலைமோதும், பட்டப் பெயர்களில் ஒருவன் பெயர் கொய்யா தோப்பு, சொந்தமாக கொய்யாதோப்பு வைத்திருக்கிறார்கள், வகுப்பிற்கு அடிக்கடி கொய்யாபழம் கொண்டுவருவான்! தைப் பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் பழக்கம் அப்போது அதிகம் இருந்தது! ஒருநாள் நான் வாழ்த்து அட்டை வாங்க சென்றபோது எனது சக மாணவன் ஒருவன் கடைகாரர் கவனிக்காத நேரம் பார்த்து அன்றைய விலையில் 3 ரூபாய் மதிப்புள்ள இரண்டு வாழ்த்து அட்டைகளை எடுத்து என் கையில் திணித்து கண்சிமிட்டினான், நான் புரிந்துகொண்டு மறைத்துவைத்தபடி நகர்ந்து வந்துவிட்டேன்! பள்ளிக்கு வந்ததும் ஆளுக்கு ஒன்றாக பங்கு பிரித்துக்கொண்டோம்! அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் என்னுடைய டிபன் பாக்சை வகுப்பில் மறந்து வைத்துவிட்டேன் என்பது நினைவு வந்தது, உடனே போய் வாட்சுமேனை அழைத்துச்சென்று அறைய திறந்து வகுப்பில் தேடினேன் கிடைக்கவில்லை! மறுநாள் எல்லோரிடமும் விசாரித்தும் கிடைக்கவில்லை! நேற்று நாங்கள் எடுத்த 3 ரூபாய் வாழ்த்து அட்டைக்கும் தொலைந்த 20 ரூபாய் டிபன் பாக்சுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் மனம் உறுத்தியது, அன்றோடு அந்த பழக்கத்தை தவிர்த்துவிட்டேன், "தவறாக நாம் அடையும் பொருளின் மதிப்பை விட ,அதனால் நாம் இழக்கும் பொருளின் மதிப்பு அதிகமாக இருக்கும்" என்ற விசயத்தை அன்றே புரிய வைத்த நிகழ்வாக இன்று கருதுகிறேன்!
பதினொண்னாப்பு
பத்தாம் வகுப்பில் 74% மதிப்பெண் வாங்கியாச்சு அடுத்து என்ன படிக்கலாம்னு ஒரே குழப்பம் , 11 th, 12 th படிச்சு கல்லூரி எல்லாம் படிக்கிறது நம்ம குடும்ப சூழ்நிலைக்கு சரிப்பட்டுவராதென்று பாலிடெக்னிகில் சேர முடிவெடுத்து விசாரித்ததில் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று தெரிந்தது, அப்பாவின் வருமானத்தில் உணவு,உடை இருப்பிடத்திற்கு எந்த குறையும் இருந்ததில்லை! இந்த பணம் பெரிய தொகையாக தெரியவே உறவினர் ஒருவரிடம் மட்டும் கடன் கேட்டோம் கிடைக்கவில்லை! 11ம் வகுப்பிற்கு அரசு பள்ளிக்கட்டணம் வெறும் 125 ரூபாய்தான், இதுவே நல்லதென்று அதிலேயே பயோ-மேக்ஸ் பிரிவில் சேர்ந்துவிட்டேன்! இதுவரை இருந்த பாடத்திற்கும் இப்போது இருக்கும் பாடத்திற்கு சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றியது! அவ்வளவு கடினமாக தோன்றியது! ஒன்று நம்மைவிட்டு விலகிச்சென்ற பிறகுதான் அதன் அருமை தெரியும் என்று சொல்லுவார்களே அது உண்மைதான், 10ம் வகுப்பு எளிதானது என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது! 10ம் வகுப்பில் கணிதத்தில்100 வாங்கியவர்கள் எல்லாம் இந்த கணிதத்தில் திணறிக்கொண்டிருந்தார்கள்! 4 பேர் வேறு கலை பிரிவுக்கு மாறி சென்றுவிட்டார்கள்! ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாறும், நாங்கள் 11ம் வகுப்பு வரும்போது புதிய பாடத்திட்டம் எனபதால், சீனியர் மாணவர்களிடம் நோட்ஸ் வாங்கும் பழக்கமும், பழைய கேள்வித்தாள்களை வாங்கும் பழக்கமும் மறைந்துவிட்ட வகுப்பு இது! வகுப்பு ஆசிரியர் வேலுச்சாமி சார்.எங்கள் இயற்பியல் ஆசிரியர் மிக கடுமையானவர், ஆனால் நன்றாக சொல்லிகொடுப்பார், ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தப்போட்டவர்களை எல்லாம் கண்டிபிடித்து உண்டு இல்லை என செய்துவிட்டார் கணித ஆசிரியர் கழுத்து நரம்பு சிகிச்சையால் பள்ளிக்கே அதிகம் வருவதில்லை! வேதியியல் ஆசிரியரும் புரமோசன்ல போய்விட்டார், என சிக்கலாகவே ஆரம்பித்தது இந்த வகுப்பு, ஆனாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி காரணம் 20 மாணவிகள் எங்கள் வகுப்பில்! லேபிற்குள்ளேயே வகுப்பறை என்பதாலும் , இயற்பியல் &வேதியியல் ஆசிரியரின் கண்டிப்பால் சாதாரணமாக கூட மாணவிகளிடம் பேச முடியாது! ஆங்கிலம் மற்றும் உயிரியல் வகுப்புகள் மிக சந்தோசமாய் நகரும்! ஆங்கில ஆசிரியை என்ன கமெண்ட் அடித்தாலும் மாணவர்களிடம் கோபப்படமாட்டார்கள், மாணவிகளையே அடிக்கடி திட்டுவார்! வகுப்பை சிரிக்க வைப்பதற்கென்றே நாங்கள் நாலுபேர் இருப்போம், ஆசிரியர்களுக்கும் நிறைய பட்டப்பெயர்கள் இருக்கும், சக மாணவிகளுடன் சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள்! சிலருடன் மட்டும் நல்ல நட்புகள் என மகிழ்ச்சியாக கழிந்த நாட்கள் அவை! அப்பாவின் 20 வருடம் பழமையான இத்துப்போன சைக்கிளை நானாக பெயிண்ட் அடித்து, பள்ளிக்கு ஓட்டி வருவேன் அதில் நான்குபேர் பயணிப்போம்! அதை பார்த்து எல்லோரும் " வந்துருச்சுடா "ஹீரோ ஹோண்டா" என கிண்டலடிப்பது நகைச்சுவையாக இருக்கும்! ரயிலை கிராசிங்குகளிலும், ஸ்டேசன்களிலும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த நான் 11ல் படிக்கும்போதுதான் எப்படியாவது ரயிலில் போகவேண்டுமென்று நினைத்து, மதுரை to போடி, ரயிலில் ஏறி தேனியில் இருக்கும் சித்தப்பா வீட்டுக்கு சென்று வந்த உற்சாகமான முதல் ரயில் பயணம் மறக்கமுடியாது! வகுப்பில் ஆட்கள் யாரும் இல்லாத போது யாருடைய டிபன் பாக்ஸ் கிடைத்தாலும் காலியாகிவிடும்! சிலர் விட்டுவிடுவார், சிலரோ நாள் முழுதும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் சிறுமலை அடிவாரத்திலுள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவோம், பட்டப்பெயர்களில் "சுமாகே" என்று ஒருவன் இருந்தான், அடிக்கடி கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்லிக்கொண்டே இருப்பான் , ஹிந்தியும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் அவனாக ஒரு மொழியில் எதவாது சொல்லிக்கொண்டு கடைசியில் "சுமாகே" என்று சொல்லி முடித்துவிடுவான், அதனால் இந்த பெயர். பாடங்களை மனப்பாடம் செய்யும் வேலை எல்லாம் மறைந்து. புரிந்து படித்து தேர்வு எழுதும் பழக்கம் அதிகமானது இந்த வகுப்பில்தான் !
பன்னெண்டாப்பு
நம் லட்சிய வாழ்க்கையின் தீர்மானப்புள்ளி என்று சொல்லுவார்கள், பத்தாம்வகுப்பைவிட 12ம் வகுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, நாம் என்ன துறையில் போகப்போகிறோம் என்பதை இதுவே தீர்மானிக்கிறது.! எல்லா ஆசிரியர்களின் கண்டிப்பும் அதிகம் ஆனது, ,வகுப்பு ஆசிரியர் காளியப்பன் சார். இயற்பியல் ஆசியரிடம் அடிவாங்காதவர்கள் யாரும் இல்லை எதெற்கெடுத்தாலும் அடிதான், புதிதாக வந்த தூய தமிழில் பேசும் வேதியியல் ஆசிரியரும் அப்படியே,அடிக்கடி இம்ப்போசிசன் என்ற பெயரில் ஒரு முழு பாடத்தையே 2 & 3 முறை எழுதி வரச்சொல்லுவார்கள்! பிராக்டிகள் நோட்டுகளில் கையழுத்து வாங்குவதாற்குள் படாதபாடு படவேண்டியதிருக்கும், இரவுமுழுவதிலும் கண்விழித்து எழுதுவோம்! நெருக்கடிகள் அதிகமானதால் கொஞ்சம் படிப்பில் கூடுதல் அக்கறை ஏற்பட்டது! கணிதம் மட்டும் அறிவுக்கு இடித்தது! மற்ற பாடங்கள் எளிதானதுபோல் தோன்றியது, நாடு நலப்பணி திட்டத்தில் (Nss) கிராமங்களை தூய்மைபடுத்தவும் அவ்வப்போது சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சொல்லிகொடுப்பார்கள், தாவரவியல் டீச்சர் உதவியுடன், ஹெர்பேரியம் கலெக்சன் என்பதற்காக கல்விச்சுற்றுலாவாக கொடைக்கானாலுக்கு ஒருநாள் சுற்றுலா சென்றோம்! அந்த ஆண்டில் அதுவே மகிழ்ச்சியான நாள் என சொல்லலாம்! எல்லா மானவர்களும் எல்லா மாணவிகளுடனும் நிறைய பேசினோம், சேர்ந்து சாப்பிட்டோம், கேலி, கிண்டல், நலம் விசாரிப்பு என உற்சாகமாக இருந்தது. எங்கே போயிருந்தது இத்தனை நாளாக இந்த நட்பு என்று நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது! எல்லாருமே நல்ல நண்பர்களாகவே இருந்தோம், இரண்டு ஜோடிகள் மட்டும் பார்வைகளால் காதலித்தனர், அதில் ஒரு ஜோடி மட்டும் கடிதங்களால் காதலித்தனர், அதுவும் பள்ளி முடிந்ததும் முடிந்துவிட்டது! ஒருநாள் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுபோட்டிகள் எங்கள் பள்ளியில் நடைபெற அன்று முழுவதும் வகுப்புகள் நடைபெறவில்லை! ஆசிரியர்களுக்கு தெரியாமல் பஸ் ஏறிப்போய் புதிதாக வந்திருந்த "மின்சார கனவு" திரைப்படம் பார்த்து வந்தோம்! +2 மாணவர்களாக சேர்ந்து ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி, ஊரில் உள்ள ஒரு சிறந்த அணியை ஜெயித்து ஆச்சர்யபடுத்தியது, வகுப்பின் 15 மாணவர்கள் சேர்ந்து இரண்டு நாட்களில் பழநிக்கு பாதயாத்திரை சென்றுவந்தது, என மறக்க முடியாத நிகழ்வுகள் நிறைந்த வகுப்பு இது! நான் என் வீட்டில் இருப்பதை விட என் நண்பர்கள் வீட்டில்தான் அதிகம் இருப்பேன்! எல்லோருடைய வீட்டிற்குள்ளும் உரிமையாக போய்வரும் அனுமதி எனக்கு சற்று அதிகமாகவே இருந்தது எனலாம்! நண்பன் ஒருவனது வீட்டின் மாடியிலும், ஒருவனது கடையிலும் அடிக்கடி குரூப் study க்கு ஒன்று சேர்வோம், அப்போதெல்லாம் பாதி நேரம் படித்தோம் என்றால் மீதி நேரம் பேசுவோம் அல்லாது டேப்ரெக்கார்டரில் பாடல்கள் கேட்போம், என் நண்பர்களில் ஒருவன் இளையராஜா வின் இசைப் பைத்தியம் எனலாம் அப்படி ஒரு ரசிகன், நிறைய பாடல் கேசட்டுகள் வைத்திருப்பான், அந்த வயதிலேயே ஒவ்வொரு பாடலில் வரும் ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் விவரிப்பான், படத்தின் பிண்ணனி இசையை பற்றி சொல்லி எங்களையும் வியக்கவைப்பான். நானும் இசையை & இளையராஜாவை ரசிக்க கற்றுக்கொண்ட வகுப்பு இது! ஒரு சார்ட் பேப்பரில் அழகான செடி வரைந்து அதில் உள்ள ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொருவர் பெயரென எங்கள் வகுப்பில் உள்ள எல்லாருடைய பெயரையும் எழுதி கடைசிநாள் வகுப்பில் எல்லோரிடம் காண்பித்து சற்றே கனத்த மனதுடன் பிரிந்த கடைசி நாள் மறக்க முடியாதது! வகுப்பறைக்குள், அப்பாவி, படிப்பாளி, பந்தா பார்ட்டி, காமெடியன், என்று, எங்கள் வகுப்பு மாணவிகள் தயாரித்த பட்டியலில் நான் காமெடியன் பட்டியலில் இருந்தேனாம், (பின்னாட்களில் ஒரு தோழி சொன்னது) கேட்க சந்தோசமாகவே இருந்தது! இலக்குகளற்ற என் கல்வி பயணத்தில் சராசரியாக 70% மதிப்பெண் கொடுத்து, இயற்பிலில் மட்டும் அதிக மதிப்பெண் கொடுத்து என் கல்லூரி வாழ்க்கைக்கு(Bsc) பாதை அமைத்துக் கொடுத்த வகுப்பு இது !
உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 1- முதல்பகுதி
http://npandian.blogspot.in/2012/03/1.html
பெரிய பதிவாக இருந்தாலும் பொறுமையாக படித்த நட்புள்ளங்களுக்கு நன்றிகள். மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற பள்ளிகூட நினைவுகளின் தொடரை தொடர்ந்து எழுத இதனை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவு நண்பர்களினையும் அழைக்கிறேன்!
&
இவர்களையும் அழைக்கிறேன்!
இடைவிடாது எழுதும் அன்பு நண்பர் பாலா
http://balapakkangal.blogspot.
தமிழ் வளர்க்கும் முனைவர் குணா
http://gunathamizh.blogspot.
நன்றாக கவிதை எழுதும் தீபிகா
http://theepikatamil.blogspot.
குட்டிகவிதைகளாக கலக்கும் யோவ்
http://www.kannam.com/
பல்வேறு இதழ்களில் சிறப்பாக பங்களித்துவரும்
தேன











