Tuesday, March 13, 2012

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 2- தொடர் பதிவு



 ஏழாப்பு!                                      
                                                                       ஆறாம் வகுப்பில் வெவ்வேறு பள்ளிகளிலிருந்து வந்து அந்நியமாக தெரிந்தவர்களெல்லாம்,  ஏழாம் வகுப்பு வரும்போது சிறந்த நண்பர்களாக மாறியிருந்தார்கள்! வகுப்புகளை செக்சன் வாரியாக பிரிக்கும்போது புதிதாய் சிலரும் வந்திருந்தார்கள்! மிகப்பிடித்தமான சில நண்பர்கள் பெயில்ஆகி 6 ம் வகுப்பிலேயே இருப்பார்கள், மிக வருத்தமாக இருக்கும், மரத்தடியிலிருந்து வகுப்பறைக்கு மாறினோம், வகுப்பு ஆசிரியர் ராமலட்சுமி டீச்சர். மதுரை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டில் பல வருடங்களாக தொடர்ந்து எங்கள் பள்ளிதான் சாம்பியன், மாநில அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கு வந்துவிடுவார்கள்! அதனால் ஹாக்கியில் அதிக ஆர்வம் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல்  தினமும் மாலை விளையாடிவிட்டு தாமதமாக டியூசன் போய், சிறிது நேரம் மட்டும் படித்துவிட்டு வீடு வந்து விடுவேன்! இரண்டு மாதத்தில் வீட்டிற்கு தெரியவர, அப்பாவிடம் அன்று வாங்கிய அடியில் விளையாட்டை மறந்துவிட்டேன்! வகுப்பில் சில மாணவர்கள் அடிக்கடி சண்டை போடுவோம், அவர்கள் கால்பந்து விளையாடும்போதும்,ஹாக்கி விளையாடும்போது பந்தை தாக்குவதை விட காலை தாக்குவதிலேயே குறியாக இருப்பர்கள்! 11 மற்றும் 12 வகுப்பில் மட்டும் பெண்கள் இருப்பார்கள்! ஏதேனும் கடைக்கு போகவேண்டுமென்றாலும், சிறு உதவி என்றாலும் எங்களிடம்தான் சொல்லுவார்கள் நாங்களும் மறுக்காமல் செய்வோம்! அதில் சிலர் சொந்த தம்பிபோல் மிக அன்பாக இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் நமக்கு உடன் பிறந்த ஒரு அக்கா இல்லையே என்று நினைத்திருக்கிறேன். அதிரடியான ஜாக்கிசான் படங்கள் பார்க்க ஆரம்பித்த வகுப்பு இது! பட்டப்பெயர்களில் ஒருவன் பெயர் "பப்ஸ்". அடிக்கடி பப்ஸ் வாங்கி சாப்பிடுவதால் அவனுக்கு அப்படி பெயர்.! பள்ளியிலிருந்து முதல் சுற்றுலா கன்னியாகுமரி, திருச்செந்தூர் தூத்துக்குடி சென்றுவந்தோம், நான் முதன் முதலில் கடலும் அலைகளும் பார்த்து ஆச்சர்யமடைந்த வகுப்பு இது.  92 ல் எங்களுடன் 7ம் வகுப்பு  படித்து விட்டு  தஞ்சைக்கு  வேறு பள்ளிக்கு மாறிசென்ற மணிகண்டன் என்ற நண்பன் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் 20 வருடங்களுக்கு பிறகு 2012 ல் என்னை    facebook ல் தேடி கண்டுபிடித்துவிட்டான்! ஆச்சர்யமான நட்பு ஆச்சர்யமான    facebook                                                                                                                           

                                                        எட்டாப்பு                                               
                                                       இந்த வருடம் முதல் இனி எட்டாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புபோல் பொதுத்தேர்வுதான் என பயமுறுத்தினார்கள், நல்ல வேலை அப்படி நடக்கவில்லை! வீட்டிலிருந்து உணவு கொண்டுவராத நாட்களிளும் இலவச முட்டை போடும் நாட்களில் பள்ளிச்சாப்பாடுதான்!  பள்ளிக்கூட மழை நாட்கள் அழகானவை! வகுப்பறைக்குள் இருந்து பார்க்கும்போது சிறுமலையிலிருந்து இறங்கி மைதானம் முழுவதும் மழை பெய்யும் காட்சி அற்புதமானது, மழை காலத்தில் பள்ளி மைதானத்தில் திரியும் சிறிய சிவப்பு நிறத்திலான பட்டுபோன்ற மென்மையான வெல்வெட் பூச்சிகளை பிடித்து விளையாடுவோம்! ஒரு நாள் மாலை நான்கு மணிக்கு திடீர் மழை! கடுமையான மழை, 4.30 க்கு பள்ளி முடிந்தது 5.30 வரை மழை குறையவில்லை! குடையும் மழைகாகிதமும், கொண்டுவந்திருந்த சிலர் மட்டும் சென்றுவிட்டனர்! நாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை,புத்தக நோட்டுகள் நனைய கூடாதே!   பலர் மழை நிற்க காத்திருந்தோம்!  வாட்ச்மேன் வகுப்பறைய பூட்ட வந்துவிட்டார், பிறகு அவரிடம் சொல்லி எல்லாருடைய புத்தகப்பைகளையும் வகுப்பிலேயே வைத்து பூட்டிவிட்டு ஒட்டு மொத்தமாக மழையில் இறங்கினோம்! எங்களைபார்த்த மற்ற வகுப்பினர் சிலரும் சேர்ந்துகொள்ள ,ஹே,,, என கத்திக்கொண்டு பெரிய கூட்டமாய் எல்லோரும் சேர்ந்து ஓடி ஆடி சாலைகளில் விளையாடிக்கொண்டே மழையில் நனைந்தபடியே வீடு சென்றோம்! ஊரே அன்று எங்களை பார்த்து ஆச்சரியபட்டது! ஏதாவது விழிப்புணர்வு நாள் வந்துவிட்டால், உடனே எல்லோரையும் அழைத்துக்கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டையை கொடுத்து ஊர்வலம் வரச்சொல்லுவார்கள்! ஆர்வத்துடன் செல்வோம்,  பிடித்த கலர் கலர் ஆடைகளில் வரலாம் தினமும் அணியும் சீருடை  அன்று அவசியமில்லை என்பதால் தீபாவளி, பொங்கலுக்கு அடுத்து வரும் பள்ளி நாள், சனிக்கிழமை பள்ளி நாள் ஆகியவற்றிகாக ஆர்வத்தோடு காத்திருப்போம், பட்டப்பெயரில் ஒருவன் பெயர் "டொய்ங்" சப்தம் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் டொய்ங் என்ற வார்த்தையை பயன்படுத்துவான்! (உ.தா) ஹீரோ வில்லன டொய்ங்னு(டுமீல்) சுடுவான் வில்லன் கீழே "டொய்ங்"(டொம்னு) விழுந்துருவான்" என்பான். பள்ளியில் விவசாய ஆசிரியர் ஒருவர் வந்தார்! பள்ளியை சுற்றி மரங்களை  நட்டு வாரத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு நாள்! ஒவ்வொரு செக்சனுக்கும் ஒவ்வொரு பகுதி என பிரித்து கொடுத்தார்! நம் பொறுப்பில் உள்ள மரம் நன்றாக வளரவேண்டும் என்று ஆர்வமாக மிக அக்கறையாய் மரங்களை பார்த்துக்கொள்வோம்! இன்றும் மரங்களின் மீது இருக்கும் அன்பை அன்றே ஆரம்பித்து வைத்த வகுப்பு இது!                                                                                          

 ஒன்பதாப்பு 
                                                           வகுப்பு ஆசிரியர் சொக்கப்பன், வகுப்புகளை வெவ்வேறாக பிரித்ததில்  நிறைய நண்பர்கள் வேறு செக்சனுக்கு சென்றுவிட்டார்கள்! மிகவும் வருத்தப்பட்டேன் அதில் ஒருசாதகமான விசயம் என்ன வென்றால் என்னை விட நன்றாக படிப்பவர்கள் வேறு ஒரே செக்சனுக்கு சென்றுவிட!  சுமாராக படிப்பவர்கள் என் வகுப்பிற்கு வர, கொஞ்சம் நல்லா படிக்கும் நான் ரொம்ப நல்லா படிப்பவன் போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிவிட்டது பிறகு அதற்காகவே  படிக்க வேண்டியதாகப்போய்விட்டது! முதல் முறையாக வகுப்பு லீடர் ஆனேன்,  B.Ed  படிக்கும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் பயிற்சி எடுக்க  வகுப்பிற்கு வருவார்கள்! அதில்  மனோரஞ்சிதம் என்றஆசிரியை மாணவர்களை அதிகம் திட்டாமல் பொறுமையாக சொல்லி கொடுத்து  சிறு தேர்வுகளாக வைத்து எல்லாரையும் உற்சாக்கப்படுத்தி நம்பிக்கை வளரும்படி பேசி  நன்றாக படிக்கவைத்தார்கள், சுமாராக இருந்த என் கையெழுத்தை ஓரளவிற்கு நன்றாக இருக்குமாறு எழுத பயிற்சி கொடுத்த ஆசிரியை.  ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அன்று ஒரு ரோல் மாடலாக தெரிந்தவர் அந்த ஆசிரியை. நான் அவ்வப்போது பள்ளிக்கு தாமதமாக செல்வேன் , , காலை சிறப்பு வகுப்பு முடிந்து prayer ஆரம்பித்துவிடும், தாமதமாக வருபவர்களை தண்டிக்க கேட் அருகே PT ஆசிரியர் நின்றால் பயப்பட தேவையில்லை ஒரு அடியோடு அனுப்பிவிடுவார், எப்போதாவது தலைமை ஆசிரிய்ரே நிற்பார், அதிக அடி விழும் அரைநாள் ஆப்செண்ட் விழும்! அவர் நிற்கும் நாட்களில் பள்ளிக்கு பின்னே சென்று வேலி ஏறி குதித்து! எங்கள் வகுப்புக்குள் சென்று அமர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் திரில்லிங்கானவை!  அரைகால் ட்ரவுசரில் இருந்து முழுகால் பேண்ட்டுக்கு மாறிய வகுப்பு இது! ஒவ்வொரு  சனி ஞாயிறும்,  ஆற்றங்கரையில் கூட்டம் அலைமோதும்,  பட்டப் பெயர்களில்  ஒருவன் பெயர் கொய்யா தோப்பு, சொந்தமாக கொய்யாதோப்பு வைத்திருக்கிறார்கள், வகுப்பிற்கு அடிக்கடி கொய்யாபழம் கொண்டுவருவான்! தைப் பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் பழக்கம் அப்போது அதிகம் இருந்தது! ஒருநாள் நான் வாழ்த்து அட்டை வாங்க சென்றபோது எனது சக மாணவன் ஒருவன் கடைகாரர் கவனிக்காத நேரம் பார்த்து அன்றைய விலையில் 3 ரூபாய் மதிப்புள்ள இரண்டு வாழ்த்து அட்டைகளை எடுத்து என் கையில் திணித்து கண்சிமிட்டினான், நான் புரிந்துகொண்டு மறைத்துவைத்தபடி நகர்ந்து வந்துவிட்டேன்! பள்ளிக்கு வந்ததும் ஆளுக்கு ஒன்றாக பங்கு பிரித்துக்கொண்டோம்! அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் என்னுடைய டிபன் பாக்சை வகுப்பில் மறந்து வைத்துவிட்டேன் என்பது நினைவு வந்தது, உடனே போய் வாட்சுமேனை அழைத்துச்சென்று அறைய திறந்து வகுப்பில் தேடினேன் கிடைக்கவில்லை! மறுநாள் எல்லோரிடமும் விசாரித்தும் கிடைக்கவில்லை! நேற்று நாங்கள் எடுத்த 3 ரூபாய் வாழ்த்து அட்டைக்கும் தொலைந்த 20 ரூபாய் டிபன் பாக்சுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் மனம் உறுத்தியது, அன்றோடு அந்த பழக்கத்தை தவிர்த்துவிட்டேன், "தவறாக நாம் அடையும் பொருளின் மதிப்பை விட ,அதனால் நாம் இழக்கும் பொருளின் மதிப்பு அதிகமாக இருக்கும்" என்ற விசயத்தை அன்றே புரிய வைத்த நிகழ்வாக இன்று கருதுகிறேன்!  

                                                                                                                             
பத்தாப்பு                                                                                                                                                                                       உன்வாழ்க்கை எந்தபாதையில் போகப்போகிறது என்பதை தீர்மானிக்க கூடியவருடம் , பொதுத்தேர்வு, இப்போவே நல்ல படித்துவிடு அப்புறம் பின்னாடி பீல் பன்னுவ, என எங்கும் எல்லாரிடமும் அறிவுரை மழை, இதனால் மனதிற்குள் ஒருவித பயம்! ஆனாலும் இனிதே தொடங்கியது பத்தாம் வகுப்பு, அதுவரை தரையில் அமர்ந்து படித்த நாங்கள் இப்போது பெஞ்ச், டெஸ்குகளில் அமர்ந்தோம், வகுப்பு ஆசிரியர் "ஆத்மராம்" சார்! சிறப்பாக எளிமையாக கணிதம் நடத்துவார், புதிதாக வந்த ஆங்கில ஆசிரியை மிக மிக அமைதியானவர், ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தன் செலவில் மருத்துவரிடம் செல்லசொல்லி பணம் கொடுத்து மாத்திரையை காண்பிக்க சொல்லுவார்! எங்களில் சிலர் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதே எதாவது ஆசிரியருடன் ஏதாவதுபேசி பதில் சொல்லி காமெடி அடித்துகொண்டே இருப்போம், இது சில ஆசிரியர்களுக்கு பிடிக்கும், சில ஆசிரியர்களுக்கு பிடிக்காது  இதனால் சமூக அறிவியல் ஆசிரியருக்கும் எனக்கும் ஆகவே ஆகாது! என்னை திட்டிக்கொண்டே இருப்பார்.  காலாண்டு அரையாண்டு விடுமுறைக்கெல்லாம் ஆச்சி ஊருக்கு செல்லும் பழக்கம் குறைந்துவிட்ட வகுப்பு இது! கணித பயத்தில் எங்கள் பகுதியிலேயே புகழ்பெற்ற கணித ஆசிரியரிடம் டியூசனுக்கும் சென்றோம்! பெண்கள் பள்ளியிலிருந்தும் பல மாணவிகள் வந்திருந்தனர், அதிகம் பேசமுடியாவிட்டாலும் நிறைய பேருடைய பெயர்கள் தெரிந்தன, தெரியாத முகங்கள் தெரிந்த முகங்களாகியது, அவர்களில் சிலர், பெண்கள் பள்ளியை நாங்கள் கடந்துசெல்லும்போது  எங்களை கண்டும் காணாதது போல் செல்வார்கள், சில மாணவிகளோ எங்களை பார்த்ததும் சிரித்து விடுவார்கள் அப்போதெல்லாம் மனதில் பட்டாம் பூச்சி பறக்கும் !  வகுப்பில் அட்டனன்ஸ்(உள்ளேன் ஐயா) சொல்லிவிட்டு அமரும்போது பின்னே கவனிக்காமல் அமருவோம், அப்போது பின்னே உட்காரும் இடத்தில் நெருஞ்சி முள், பென்சில், மூடியுடன் பேனாவை செங்குத்தாக வைத்துவிடுவார்கள்! அப்போது  நாம் கவனிக்காமல் வேகமாக அமரும்போது நறுக்கென்று நம் "டிக்கியில் குத்திவிடும் நமக்கு வலிக்கும்! மற்றவர்கள் சிரிப்பார்கள், இது அடிக்கடி நடக்கும்!  நமக்கு நிறைய பேர் வைக்கிறார்கள் நாமும் யாருக்காவது வைப்போம் என்று திடீர் முடிவெடுத்து எனக்கு முன்னால் இருந்த மாணவன் பத்மநாபன் அமரும்போது என் மை பேனாவினை அவசரத்தில் மூடி இல்லாமல் அவன் அமரும் இடத்தில் வைத்துவிட்டேன், அவன் வேகமாக அமர்ந்ததால் நறுக்கென்று டிக்கியின் ஓரத்தில் குத்தி ரத்தம் வெளியே கசிகிறது! அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும், கோபத்தில் அடித்திருப்பார்கள், வேதனையில் அழுதிருப்பார்கள், அல்லது ஆசிரியரிடம் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்திருப்போம், ஆனால் அவனோ வலியை பொறுத்துகொண்டு லேசான புன்னகையுடன்"பரவாயில்லடா விளையாட்டுக்குதானே செய்தாய்" என்றான், பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்! அதற்கு பின் சாதராண நண்பர்களான நாங்கள் சிறந்த நண்பர்களானது மறக்கமுடியாதது!  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான என்னுடைய ஹால்டிக்கெட் புகைப்படத்தை பார்த்து நானே பயந்துவிட்டேன், பல மாணவர்களை அவ்வளவு கொடூரமாக தீவிரவாதியை போல எடுத்திருந்தார்கள்!  (இப்போது உள்ள வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் போல). வித்தியாசமான பட்டப்பெயரில் "கொக்கன்" என்று ஒருவன் இருந்தான் அதிக உயரமாக இருந்ததால் இந்த பெயர்!  இரண்டு மாத முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையில் வேலைக்குச் சென்று அந்த பணத்தில் என் இஷ்டப்படி செலவு செய்து, ஆடை எடுத்தது மகிழ்ச்சியான நிகழ்வு!  நம் தேர்வு முடிவை அடித்து பிடித்து பேப்பர் வாங்கி பரபரப்பாக தேடி நம் தேர்வு எண்ணை செய்திதாளில் பார்த்து மகிழ்ச்சியோடு ஓடிக்கொண்டு வழியில் பலரிடம் சொல்லி மிட்டாய் வாங்கி கொடுக்கும் ஒரு பரவசமான அனுபவம் தந்த வகுப்பு இது.              
                                                                                                                  
 
பதினொண்னாப்பு
                                                                                  பத்தாம் வகுப்பில் 74% மதிப்பெண் வாங்கியாச்சு அடுத்து என்ன படிக்கலாம்னு ஒரே குழப்பம் , 11 th, 12 th படிச்சு கல்லூரி எல்லாம் படிக்கிறது நம்ம குடும்ப சூழ்நிலைக்கு சரிப்பட்டுவராதென்று பாலிடெக்னிகில் சேர முடிவெடுத்து விசாரித்ததில் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று தெரிந்தது, அப்பாவின் வருமானத்தில் உணவு,உடை இருப்பிடத்திற்கு எந்த குறையும் இருந்ததில்லை! இந்த பணம் பெரிய தொகையாக தெரியவே உறவினர் ஒருவரிடம் மட்டும் கடன் கேட்டோம் கிடைக்கவில்லை! 11ம் வகுப்பிற்கு அரசு பள்ளிக்கட்டணம் வெறும் 125 ரூபாய்தான், இதுவே நல்லதென்று அதிலேயே பயோ-மேக்ஸ் பிரிவில் சேர்ந்துவிட்டேன்! இதுவரை இருந்த பாடத்திற்கும் இப்போது இருக்கும் பாடத்திற்கு சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றியது! அவ்வளவு கடினமாக தோன்றியது! ஒன்று நம்மைவிட்டு விலகிச்சென்ற பிறகுதான் அதன் அருமை தெரியும் என்று சொல்லுவார்களே அது உண்மைதான், 10ம் வகுப்பு  எளிதானது என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது! 10ம் வகுப்பில் கணிதத்தில்100 வாங்கியவர்கள் எல்லாம் இந்த கணிதத்தில் திணறிக்கொண்டிருந்தார்கள்! 4 பேர் வேறு கலை பிரிவுக்கு மாறி சென்றுவிட்டார்கள்! ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாறும், நாங்கள் 11ம் வகுப்பு வரும்போது புதிய பாடத்திட்டம் எனபதால், சீனியர் மாணவர்களிடம்  நோட்ஸ் வாங்கும் பழக்கமும்,  பழைய கேள்வித்தாள்களை வாங்கும் பழக்கமும் மறைந்துவிட்ட வகுப்பு இது! வகுப்பு ஆசிரியர் வேலுச்சாமி சார்.எங்கள் இயற்பியல் ஆசிரியர் மிக கடுமையானவர், ஆனால் நன்றாக சொல்லிகொடுப்பார், ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தப்போட்டவர்களை எல்லாம் கண்டிபிடித்து உண்டு இல்லை என செய்துவிட்டார்    கணித ஆசிரியர் கழுத்து நரம்பு  சிகிச்சையால் பள்ளிக்கே அதிகம் வருவதில்லை! வேதியியல் ஆசிரியரும் புரமோசன்ல போய்விட்டார், என சிக்கலாகவே ஆரம்பித்தது இந்த வகுப்பு, ஆனாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி காரணம் 20 மாணவிகள் எங்கள் வகுப்பில்! லேபிற்குள்ளேயே வகுப்பறை என்பதாலும் , இயற்பியல் &வேதியியல் ஆசிரியரின் கண்டிப்பால் சாதாரணமாக கூட மாணவிகளிடம் பேச முடியாது! ஆங்கிலம் மற்றும் உயிரியல் வகுப்புகள் மிக சந்தோசமாய் நகரும்! ஆங்கில ஆசிரியை என்ன கமெண்ட் அடித்தாலும் மாணவர்களிடம் கோபப்படமாட்டார்கள், மாணவிகளையே அடிக்கடி திட்டுவார்! வகுப்பை சிரிக்க வைப்பதற்கென்றே நாங்கள் நாலுபேர் இருப்போம், ஆசிரியர்களுக்கும் நிறைய பட்டப்பெயர்கள் இருக்கும், சக மாணவிகளுடன் சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள்! சிலருடன் மட்டும் நல்ல நட்புகள் என மகிழ்ச்சியாக கழிந்த நாட்கள் அவை! அப்பாவின் 20 வருடம் பழமையான இத்துப்போன சைக்கிளை நானாக பெயிண்ட் அடித்து, பள்ளிக்கு ஓட்டி வருவேன் அதில் நான்குபேர் பயணிப்போம்! அதை பார்த்து எல்லோரும் " வந்துருச்சுடா "ஹீரோ ஹோண்டா" என கிண்டலடிப்பது நகைச்சுவையாக இருக்கும்! ரயிலை கிராசிங்குகளிலும், ஸ்டேசன்களிலும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த நான் 11ல் படிக்கும்போதுதான்  எப்படியாவது ரயிலில் போகவேண்டுமென்று நினைத்து, மதுரை to  போடி,  ரயிலில் ஏறி தேனியில் இருக்கும் சித்தப்பா வீட்டுக்கு சென்று வந்த  உற்சாகமான  முதல் ரயில் பயணம் மறக்கமுடியாது!  வகுப்பில் ஆட்கள் யாரும் இல்லாத போது யாருடைய டிபன் பாக்ஸ் கிடைத்தாலும் காலியாகிவிடும்! சிலர் விட்டுவிடுவார், சிலரோ நாள் முழுதும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் சிறுமலை அடிவாரத்திலுள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவோம், பட்டப்பெயர்களில் "சுமாகே" என்று ஒருவன் இருந்தான், அடிக்கடி கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்லிக்கொண்டே இருப்பான் , ஹிந்தியும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் அவனாக ஒரு மொழியில் எதவாது சொல்லிக்கொண்டு கடைசியில் "சுமாகே" என்று சொல்லி முடித்துவிடுவான், அதனால் இந்த பெயர். பாடங்களை மனப்பாடம் செய்யும் வேலை எல்லாம் மறைந்து. புரிந்து படித்து தேர்வு எழுதும் பழக்கம் அதிகமானது இந்த வகுப்பில்தான் !               

பன்னெண்டாப்பு          
                                                                     நம் லட்சிய வாழ்க்கையின் தீர்மானப்புள்ளி என்று சொல்லுவார்கள், பத்தாம்வகுப்பைவிட 12ம் வகுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, நாம் என்ன துறையில் போகப்போகிறோம் என்பதை இதுவே தீர்மானிக்கிறது.! எல்லா ஆசிரியர்களின் கண்டிப்பும் அதிகம் ஆனது, ,வகுப்பு ஆசிரியர் காளியப்பன் சார். இயற்பியல் ஆசியரிடம் அடிவாங்காதவர்கள் யாரும் இல்லை எதெற்கெடுத்தாலும் அடிதான், புதிதாக வந்த தூய தமிழில் பேசும் வேதியியல் ஆசிரியரும் அப்படியே,அடிக்கடி இம்ப்போசிசன் என்ற பெயரில் ஒரு முழு பாடத்தையே 2 & 3 முறை எழுதி வரச்சொல்லுவார்கள்! பிராக்டிகள் நோட்டுகளில் கையழுத்து வாங்குவதாற்குள் படாதபாடு படவேண்டியதிருக்கும், இரவுமுழுவதிலும் கண்விழித்து எழுதுவோம்!  நெருக்கடிகள் அதிகமானதால் கொஞ்சம் படிப்பில் கூடுதல் அக்கறை ஏற்பட்டது! கணிதம் மட்டும் அறிவுக்கு இடித்தது! மற்ற பாடங்கள் எளிதானதுபோல் தோன்றியது, நாடு நலப்பணி திட்டத்தில் (Nss)  கிராம‌ங்களை தூய்மைபடுத்தவும் அவ்வப்போது சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சொல்லிகொடுப்பார்கள், தாவரவியல் டீச்சர் உதவியுடன், ஹெர்பேரியம் கலெக்சன் என்பதற்காக கல்விச்சுற்றுலாவாக கொடைக்கானாலுக்கு ஒருநாள் சுற்றுலா சென்றோம்! அந்த ஆண்டில் அதுவே  மகிழ்ச்சியான நாள் என சொல்லலாம்! எல்லா மானவர்களும் எல்லா மாணவிகளுடனும் நிறைய பேசினோம், சேர்ந்து சாப்பிட்டோம், கேலி, கிண்டல், நலம் விசாரிப்பு என உற்சாகமாக இருந்தது. எங்கே போயிருந்தது இத்தனை நாளாக இந்த நட்பு என்று நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது!  எல்லாருமே நல்ல நண்பர்களாகவே இருந்தோம், இரண்டு ஜோடிகள் மட்டும் பார்வைகளால் காதலித்தனர், அதில் ஒரு ஜோடி மட்டும் கடிதங்களால் காதலித்தனர், அதுவும் பள்ளி முடிந்ததும் முடிந்துவிட்டது! ஒருநாள் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுபோட்டிகள் எங்கள் பள்ளியில் நடைபெற அன்று முழுவதும் வகுப்புகள் நடைபெறவில்லை! ஆசிரியர்களுக்கு தெரியாமல் பஸ் ஏறிப்போய்  புதிதாக வந்திருந்த "மின்சார கனவு" திரைப்படம் பார்த்து  வந்தோம்!  +2 மாணவர்களாக சேர்ந்து ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி, ஊரில் உள்ள ஒரு சிறந்த அணியை ஜெயித்து ஆச்சர்யபடுத்தியது, வகுப்பின் 15 மாணவர்கள் சேர்ந்து  இரண்டு நாட்களில் பழநிக்கு பாதயாத்திரை சென்றுவந்தது, என மறக்க முடியாத நிகழ்வுகள் நிறைந்த வகுப்பு  இது! நான் என் வீட்டில் இருப்பதை விட என் நண்பர்கள் வீட்டில்தான் அதிகம் இருப்பேன்! எல்லோருடைய வீட்டிற்குள்ளும் உரிமையாக போய்வரும் அனுமதி எனக்கு சற்று அதிகமாகவே இருந்தது எனலாம்! நண்பன் ஒருவனது வீட்டின் மாடியிலும், ஒருவனது கடையிலும் அடிக்கடி குரூப் study க்கு ஒன்று சேர்வோம், அப்போதெல்லாம் பாதி நேரம் படித்தோம் என்றால் மீதி நேரம் பேசுவோம் அல்லாது டேப்ரெக்கார்டரில் பாடல்கள் கேட்போம்,  என் நண்பர்களில் ஒருவன் இளையராஜா வின் இசைப் பைத்தியம் எனலாம் அப்படி ஒரு ரசிகன், நிறைய பாடல் கேசட்டுகள் வைத்திருப்பான், அந்த வயதிலேயே ஒவ்வொரு பாடலில் வரும் ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் விவரிப்பான், படத்தின் பிண்ணனி இசையை பற்றி சொல்லி எங்களையும் வியக்கவைப்பான். நானும் இசையை & இளையராஜாவை  ரசிக்க கற்றுக்கொண்ட வகுப்பு இது!   ஒரு சார்ட் பேப்பரில் அழகான செடி வரைந்து அதில் உள்ள ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொருவர் பெயரென  எங்கள் வகுப்பில் உள்ள எல்லாருடைய பெயரையும் எழுதி கடைசிநாள் வகுப்பில் எல்லோரிடம் காண்பித்து சற்றே கனத்த மனதுடன் பிரிந்த கடைசி நாள் மறக்க முடியாதது! வகுப்பறைக்குள், அப்பாவி, படிப்பாளி, பந்தா பார்ட்டி, காமெடியன், என்று, எங்கள் வகுப்பு மாணவிகள் தயாரித்த பட்டியலில்  நான் காமெடியன் பட்டியலில் இருந்தேனாம், (பின்னாட்களில் ஒரு தோழி சொன்னது)  கேட்க சந்தோசமாகவே இருந்தது! இலக்குகளற்ற என் கல்வி பயணத்தில் சராசரியாக 70% மதிப்பெண் கொடுத்து, இயற்பிலில் மட்டும் அதிக மதிப்பெண் கொடுத்து என் கல்லூரி வாழ்க்கைக்கு(Bsc) பாதை அமைத்துக் கொடுத்த வகுப்பு இது !



 உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 1- முதல்பகுதி
http://npandian.blogspot.in/2012/03/1.html
பெரிய பதிவாக இருந்தாலும் பொறுமையாக படித்த நட்புள்ளங்களுக்கு நன்றிகள். மீண்டும் பள்ளிக்கு போகலாம்  என்ற பள்ளிகூட நினைவுகளின் தொடரை தொடர்ந்து  எழுத இதனை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவு நண்பர்களினையும் அழைக்கிறேன்!
                               &
இவர்களையும் அழைக்கிறேன்!

இடைவிடாது எழுதும் அன்பு நண்பர் பாலா
http://balapakkangal.blogspot.in/

தமிழ் வளர்க்கும் முனைவர் குணா
http://gunathamizh.blogspot.in/

நன்றாக கவிதை எழுதும் தீபிகா
http://theepikatamil.blogspot.in/

குட்டிகவிதைகளாக கலக்கும் யோவ்
http://www.kannam.com/

பல்வேறு இதழ்களில் சிறப்பாக பங்களித்துவரும்
தேன





Thursday, March 08, 2012

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 1- தொடர் பதிவு

                                                                        ஒரு மனிதன் அதிக நாட்கள் தொடர்ந்து கவலையின்றி மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் என்று பார்த்தால், நிச்சயம் அது பள்ளிப்பருவத்து நாட்களாத்தான் இருக்கும்! பலருடைய நினைவுகளை ஏற்றிக்கொண்டு வலைபதிவுகளில்  தொடர்பதிவாக உற்சாகமாக சுற்றிவரும் இந்த பள்ளிப்பேருந்து வசந்த மண்டபம்  மகேந்திரன் அவர்களால் இங்கு வந்து என் பதிவில் நின்று சில நினைவுகளை ஏற்றிச்செல்கிறது!

பால் வாடி!
மூன்று வயது முடிந்து நான்காவது வயது தொடங்கும் போது சத்துணவுகூடம் என்று சொல்லப்படும் பால்வாடியில் சேர்த்து உள்ளே தள்ளி கதவை பூட்டிவிட்டார்கள்! கதறி அழுதுகொண்டிருப்பேன், என்னைபோல் இன்னும் சிலர் அழுதுகொண்டிருப்பார்கள்! அழுவதும் தூங்குவதும்தான் வேலை! பிறகு அது பழகிவிட்டது!அ.ஆ.இ.ஈ.... மற்றும் ABCD  யை அடையாளம் காட்ட கற்றுக்கொண்ட நாட்கள் அவை!

UKG
ஒரு வருடம் மட்டும் ஆங்கில வழி தனியார் பள்ளியில் யுகேஜி சேர்த்தார்கள், கூண்டு அடைக்கப்பட்ட சைக்கிள் ரிக்க்ஷாவில்தான் பள்ளிப்பயனம்! அழாமல் பள்ளிக்கு செல்ல தினமும் காலை ஒரு தேன் மிட்டாய் பரிசளிக்கப்படும்! ஒரே ஒரு சிலேடு, உடைந்த சிலேட்டுக்குச்சிகள், ஒரு குட்டி டிபன் பாக்ஸ் , அதற்கு ஒரு மஞ்சள் பையுடன் ப்ள்ளிசெல்வோம், 1,2,3 மற்றும் தமிழ் ஆங்கில வார்த்தைகள் எழுத கற்றுக்கொண்ட நாட்கள் அவை!

ஒண்ணாப்பு
வீட்டிற்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப்ப பள்ளியில் செர்க்க போகும்போது, கையால் தலையை சுற்றி காதை தொட சொன்னார்கள் எனக்கு எட்டவில்லை! சேர்க்க முடியாது என்று சொல்லிவிட, வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு தனியார் தமிழ் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்! மாலை4 மனிக்கு பள்ளிவிடும். 3.50க்கு உமாராணி என்ற பெயருடைய பேருந்து பள்ளியை கடந்து செல்லும், அந்த பேருந்தின் சத்தம் கேட்டதுமே மனதில் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்! மணி அடித்த நொடியில் அத்தனை பேரும் ஹே.... என் கத்திக்கொண்டே பள்ளியை விட்டு மகிழ்ச்சியோடு ஓடிவருவோம்! சில நாட்களில் அப்படி ஓடிவரும்போது ஒருவன் தடுமாறி கீழே விழ அடுத்தடுத்து வருபவர்களும் விழுவார்கள்!சிரிப்பாக இருக்கும். எழுத்துக்களை அழகாக்கும் ரெண்டு கோடு மற்றும் நான்கு கோடு நோட்டுகளுடன் பள்ளிசெல்வோம். வீட்டுப்பாடம் கொடுக்கப்படும்! கூட்டல் கழித்தல் கணக்குகளும், தமிழ் ஆங்கில வார்த்தைகளை வரிகளாக்குவதையும் கற்ற நாட்கள் அவை!

ரெண்டாப்பு!
அதுவரை சுதந்திரமாக இருந்தவர்கள், படிப்பு ,கண்டிப்பான வீட்டுப்பாடம், தேர்வு போன்ற வளையங்களுக்குள்  கொண்டுவரப்பட்ட வகுப்பு அது!  வகுப்பு ஆசிரியை பாப்பா டீச்சர், வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவினை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம், பள்ளிக்கு செல்ல வீட்டில்  மிட்டாய்களுக்கு பதிலாக காசு(5&10 பைசா)  வாங்க ஆரம்பித்த வகுப்பு இது! பள்ளிக்கு வெளியில் தின்பண்டம் விற்பவர்களிடம் பிடித்தை வாங்கி சாப்பிடுவோம்! நீண்ட நேரம் சாப்பிடும் "கமர்கட்" அதிகபேரால் வாங்கப்படும். பள்ளி ஆண்டுவிழாவில் பாட்டுப்பாடும் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள், "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்...." பாடல் பாடியது நன்றாக நினைவில் இருக்கிறது! இரண்டு கோடு நீட்ட்ய்கள் மறைந்து ஒற்றைக்கோடு போட்ட நோட்டுகளில் எழுத ஆரம்பித்த வகுப்பு இது!

மூணாப்பு!

மீண்டும் வீட்டருகில் உள்ள அரசு பள்ளிக்கு வந்துவிட்டேன் அன்று சேர்க்காதவர்கள் இப்போது சேர்த்துக்கொண்டார்கள்! வகுப்பு ஆசிரியை சிறுமணி டீச்சர்! கடிகாரத்தில் மணி பார்ப்பது எப்படி என்று சொல்லி கொடுத்தார்கள், தினமும் மதியம் பள்ளி சத்துணவுதான், முதலில் பிடிக்கவிட்டாலும் பிறகு பிடித்துவிட்டது! சிறிய ரக வாடகை சைக்கிள் எடுத்து பக்கத்து வீட்டு அண்ணன்கள் உதவியுடன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். ரீஜஸ் & உணவு இடைவேளையில் தின்று எறிப்பட்ட மக்காச்சோள கட்டையில் கால்பந்து விளையாடுவோம்! வித்தியாசமான பட்டபெயர்களுடன் நண்பர்கள் இருந்தார்கள், அதில் ஒருவன் பெயர் "பாட்டன்" ,அவன் தலை முடி நரைத்திருப்பதால் அந்த பெயர்! முதல் பதினாறு வாய்பாடுகளை மனப்பாடம் செய்த வகுப்பு இது!

நாலாப்பு!

வகுப்பு ஆசிரியை வீரம்மாள் டீச்சர், அந்த நேரத்தில் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாததால்! அடிகடி மெடிக்கல் லீவ் எடுத்துவிடுவார்கள், அதனால் பெரும் பான்மையான நாட்கலிள் ஆசிரியர் இல்லாமலே அமர்ந்திருந்தோம், பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து ஒவ்வொருவராக எழுந்து ஒவ்வொரு பக்கமாக வசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்!  சத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அமைதியாக இருக்கசொல்லி பேசுபவர்களின் பெயர்கள் கரும்பலகையில் எழுதச்சொல்லப்படும்! கடைசியில் அதில் உள்ள பெயர்களுக்கெல்லாம் பிரம்படி கொடுக்கப்படும்! அந்த பட்டியலில் நான் அடிக்கடி வந்துகொண்டிருந்ததால், பேசுபவர்களின் பெயரெழுதும் பணியை என்னிடமே கொடுத்தது சுவாரஸ்யமான நிகழ்வு! மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அடிக்கடி சண்டை வரும். "குண்டு சார்" என்ற பெயரில் ஒரு ஆசிரியர் இருந்தார், அற்புதமான மனிதர். வகுப்பில் யாரையில் அடிக்க மாட்டார், பொறுமையாக எதையும் எடுத்துச்சொல்வார், சற்று குண்டாக இருப்பார், அவரை மாணவர்களே, "குண்டுசார், வணக்கம் சார்" என்றுதான் அழைப்போம், கோபிக்க மாட்டார் அவர் டீக்கடையில் இருக்கும்போது  மாணவர்கள் யாரைபார்த்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் டீ வங்கி தந்துவிடுவார்! வித்தியாசமான பட்டப்பெயரில் "கள்ளுக்கடை" என்று ஒருவன் இருந்தான், அவன் அப்பா சாரயக்கடையில் வேளை பார்ப்பதால் அவனுக்கு இந்த பெயர்! விடுமுறை என்றால் ஆச்சி ஊருக்கும், பெரியப்பா ,அத்தைகளின் ஊருக்கும் செல்ல அடம்பிடிப்பேன் வீட்டில் உடனே வரமாட்டார்கள் வீட்டில் அனுமதியும் காசும் மட்டும் வாங்கிகொண்டு நானாக பஸ் ஏறிச்செல்ல பழகிக்கொண்ட வகுப்பு இது!


அஞ்சாப்பு!
வகுப்பு ஆசிரியை சரஸ்வதி டீச்சர், அதிரடியான ஆசிரியை சிறு தவறு என்றாலும் அடிதான் பேச்சுக்கே இடமில்லை! நன்றாக சொல்லி கொடுப்பார்! அடிக்கடி தேர்வு வைப்பார் (கோடிட்ட இடம் நிரப்புதல்,சரியா தவறா,பொருத்துக) மாணவர்களின்  விடைகளை
மாணவிகளிடமும், மாணவிகளின் விடைகளை மாணவ்ர்களிடமும் மாற்றி கொடுக்க சொல்லி, சரியான விடையை அவர் சொல்லி திருத்த சொல்லுவார். அப்போது சில பெண்களிடம் தங்கள் விடைதாள் களை கொடுப்பதற்கு பெரிய போட்டியே  நடக்கும், சில மாணவர்களிடம் எந்த பெண்ணும் விடைதாள்களை கொடுக்க மாட்டார்கள், ஒரே காமெடியாக இருக்கும்! இந்தவகுப்பில் படிக்கும்போதுதான் எங்கள் ஊர்பகுதியில் கரகாட்டக்காரன் பட சூட்டிங் நடந்தது! 11.30 மணிக்கு ரீஜஸ் இடைவேளையில் சூட்டிங் பார்க்கச்சென்றோம், "குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா..." பாடல் எடுத்துக்கொண்டிருந்தார்கள், கனகாவும் அவரின் அம்மா தேவிகாவும் காரில் அமர்ந்து இருந்தார்கள், கவுண்டமனி செந்தில்,&குரூப்ஸ் சுற்றி அமர்ந்து ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்கள்! ராமராஜன் பட்டு சட்டை, லிப்ஸ்டிக்லாம் போட்டு சோகமாக மாட்டுவண்டியில் அமர்ந்திருந்தார்!  ஒரே வரிகளை மீண்டும் மீண்டும், போட்டு பல டேக்குகள் எடுப்பது ஆச்சர்யமாக இருந்தது! பள்ளிக்கு திரும்பும்போது மணி 3 ஆகிவிட்டது, எங்களுக்கு அன்று விழுந்த பிரம்படி அந்தபாடலை டி.வியில் பார்க்கும்போது இப்போதும் நினைவுக்கு வரும்!, பள்ளியில் உள்ள அனைவரையும் ஒரு முதலை படத்திற்கு அழைத்துச்சென்ற நியாபகம் இருக்கிறது! பட்டப்பெயரில் ஒருவன் பெயர் "குறத்தி" , மிகவும் அப்பாவி பையன், ஏன் வைத்தார்கள் என்றே காரணம் தெரியவில்லை! சிலேடுகளும் கோடு போட்ட நோட்டுகளும்,  எங்களிடமிருந்து விடைபெற்ற வகுப்பு இது!

ஆறாப்பு!
(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!-வாடிப்பட்டி)

சேர்ந்து படித்தபோது சண்டை போட்டுக்கொண்டிருந்த பெண்களின் முக்கியத்துவம், அவர்கள் இல்லாததின் எதோ ஒரு நட்பின் வெறுமை, ஆண்கள் பள்ளியில் சேர்ந்தபோதுதான்  புரிந்தது! பெண்கள் பள்ளியை தாண்டிதான் எங்கள் பள்ளிக்கு செல்வோம், அவ்வப்போது பார்த்து சிரித்துக்கொள்வோம், பேச முயற்சித்தாலும் பேசமாட்டார்கள் பாடங்கள் சற்று கடுமையாக இருந்த்துபோல் தோன்றியது , குறிப்பாக கணிதம்! வகுப்பு ஆசியரிடமே(மேரி சரோஜா டீச்சர்)  டியூசன் செல்ல ஆரம்பித்தோம், எங்கள் வகுப்பறை நிழல்நிறைந்த மரத்தடிதான், வெயில் நகர நகர நாங்களும் நகர்ந்து அமர்ந்துகொள்வோம், உடற்பயிற்ச்சி வகுப்பு, கைத்தறி வகுப்பு போன்றவைகள் வாரத்தில் இரண்டு வகுப்பு மட்டும் இருக்கும், கைத்தறி ஆசிரியர் உணர்ச்சிப்பூர்வமாக சவுண்டு எபெக்டுகளுடன் கதை சொல்லுவார்! pt வகுப்புகளுக்கு கண்டிப்பாக பனியன் அணிந்து செல்லவேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கும்( பள்ளி மைதானத்தை 3முறை சுற்றிவருவது), அடிக்கடி விளையாடுவது ரப்பர் பந்துகளில் கால்பந்து விளையாட்டுதான்! பள்ளி முடிந்துவீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடவேண்டும் போல் தோன்றும்! ரேங்க் கார்டுகளும், அப்பவின் கையெழுத்துகளும் முக்கித்துவம் பெற ஆரம்பித்தன! வகிப்பில் இருக்கும் 40 மாணவர்களும் முதல் 8 ரேங்குகள் பெறுவர்கள் தலைமையில் 5 மாணவர்கள் கொண்ட குழுவாக பிரித்து, அந்த குரூப்பில் யார் சொன்ன செய்தாலும் அந்த குரூப் லீடருக்குதான் தலைவலி, அவர்களை படிக்க வைப்பதும் அவர்களின் பொறுப்பே! நானும் அதில் ஒரு குரூப் லீடராக வந்தது மகிழ்ச்சியான விசயம்!                    சுதந்திர தினம், குடியரசு தினத்தில் நண்பர்கள் எல்லோரும், அருகில் உள்ள பெருமாள் மலைக்குச்செல்வோம்!  வித்தியாசமான பட்டப்பெயர்களில் உள்ளவர்களில் ஒருவரன் "உலகப் பிராடு" இவனைப்போல் யாரும் பொய்சொல்ல முடியாது அப்படி நம்பும்படி சொல்லுவன்அவன் சொன்ன பொய்களில் மிகபிரபலமானது " எங்கப்ப ஏரோ பிளைனை ஒத்த கையில ஓட்டுவார்" " தென்ன மரத்தில் இளநீர் பறிக்க எங்க மாமா மரத்துல ஓங்கி உதைப்பார், எல்லா இளநீரும் கீழே விழுந்துவிடும்!  என்பான். ( அன்றைய சூழ்நிலையில் இதை நாங்கள் நம்புவோம்) , சேமிக்கும் பழக்கம் அவசியம் என பள்ளியில் சஞ்சாய்கா திட்டத்திலும் சேர்த்து விட்டார்கள்! பள்ளிக்கு செல்லும் போது குட்டிநாய் ஒன்று தெருவோரத்தில் விளையாடிக்கொண்டி என் பின்னாடியே வந்தது, அதன் அருகில் சென்று கையில் பிடிக்க நினைத்தபோது விரலில் கடித்துவிட்டது, மதுரை பெரிய ஆஸ்பத்தியில் 12 நாட்கள் தினமும் தொப்புளை சுற்றி ஊசி போட்டது மறக்கமுடியதது! நண்பர்களுடன் சேர்ந்து  ஆறு, கிணறுகளில் நீச்சல் கற்றுக்கொண்ட வகுப்பு இது!
குறிப்பு!
பெரியபதிவாக தெரிந்ததால் இரண்டாக பிரித்துவிட்டேன் நாளை இன்னொரு பகுதி வரும்!

Sunday, March 04, 2012

சில பெண்ணியவாதிகள் - கவிதை

ஒழுக்க
குணங்களுக்கு பெயர்
அடிமைத்தனம்!

ஆபாசமின்றி
ஆடை உடுத்தச் சொன்னால்
ஆணாதிக்கம்!

அருவருப்பின்றி
கவிதை எழுதச் சொன்னால்
அடக்குமுறை!

சட்டங்கள்
பாதுகாப்பதற்கல்ல
பழிவாங்குவதற்கே!

அர்த்தங்கள்
மாறிவருகின்றன
சில பெண்ணியவாதிகளின்
அகராதிகளில்!

குறிப்பு: - பெண்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பல சிறந்த பெண்ணியவாதிகளை பெரிதும் மதிக்கிறேன், ஆனால் சிலரோ, சில பெண்களின் அர்த்தமற்ற ஆணவத்தையும், தவறுகளையும் பெண்ணியம் என்ற போர்வைக்குள் மறைக்கின்றனர் (நியாயப்படுத்துகின்றனர்), அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த சிலருக்காக எழுதப்பட்டதே இந்த கவிதை!



Wednesday, February 29, 2012

உனக்கான கவிதைகள்!


நீ
சாலையோரத்தில்
ஒதுங்கி நிற்கும்போது
அடர்த்தியாக
பெய்துகொண்டிருந்த மழை
நடக்க ஆரம்பித்ததும்
மாறிவிடுகிறது
சிறு தூரலாக...

**************************

உன் ஊரின்
பெயர் தாங்கி
என்னைக்
கடந்து செல்லும்
ஒவ்வொரு
பேருந்தின் பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் மனது!

**************************

நான் எழுதும்
ஒவ்வொரு 
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!

**************************



Friday, February 24, 2012

அனுமதியற்றவர்கள் - கவிதை

எறும்பு எலி,
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


Wednesday, February 15, 2012

மரண குறிப்புகள்! - கவிதை

என்மரணம்
நிகழந்தது தெரிந்ததும்,
எனைப்பற்றி
ஒவ்வொருவரும்
பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்!
எனக்கான இடம்
சொர்கத்திலா? நரகத்திலா?
என்பதை தீர்மானிக்க!




                     

Saturday, February 11, 2012

உனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்! - கவிதை


தொட்டிலில்
தூங்கிக் கொண்டிருந்த‌
நம் அன்புக் குழந்தையின்
முதல் பிறந்த நாளுக்கு!
ஆடை வாங்குவது பற்றி!
கட்டிலில் அமர்ந்தபடி
பேசிக்கொண்டிருந்தோம்!

 
முதல் பிறந்தநாள்!
வாழ்க்கை முழுவதும்
மங்களகரமாய் இருக்க!
உனக்கு பிடித்த‌
மஞ்சள் நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ,

முதல் பிறந்தநாள்
வாழ்க்கை முழுவதும்
பசுமையானதாக இருக்க!
எனக்கு பிடித்த
பச்சை நிறத்தில்
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,

இருவரும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருக்க!
பேச்சு விவாதமாகி!
விவாதம் சண்டையாகி!
தலையணைகளால்
தாக்கிக்கொண்டோம்!
உன் இடை பற்றி
இழுத்தவுடன்!
என் தோள் பற்றி
சாய்ந்து கொண்டாய்.........
........................................
............................!

கூடி களைத்த பின்,
முத்தமிட்டபடி,
உனக்கு பிடித்த
மஞ்சள் நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறேன் நான்,
இல்லை! இல்லை!
உங்களுக்கு பிடித்த‌
பச்சை நிறத்திலேயே
ஆடை எடுக்கலாம்!
என்கிறாய் நீ!
ஆரம்பித்தோம்
அடுத்த சண்டையை....
................................!


மறுநாள் மாலை
வாங்கி வந்த‌ ஆடையில்!
மஞ்சளும் பச்சையும்!
சமமாய் கலந்திருந்தது!
நம்மைப் போல்!