Monday, November 21, 2011

உலகம் விரும்பும் உன்னதபருவம்! - கவிதை - மழலை தொடர்பதிவு

                                                         
                                ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் அதிக நேரத்தை கவலைகளற்று மகிழ்ச்சியாக கழித்த பருவம் குழந்தை பருவமாகத்தான் இருக்க முடியும்! பிறந்தது முதல் எட்டு வயது வரை உள்ள காலத்தை குழந்தை பருவமாக கருதலாம்! பணம் சம்பாதிக்கவோ சொத்து சேர்க்கவோ கவலைகள் இல்லை, காதல் காமம் போன்ற சபலங்கள் இல்லை! ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு  நிலையிலும் குழந்தைகளை பற்றிய எண்ணம் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது! இளைஞனாக இருக்கும்போது தன் குழந்தை பருவத்தை நினைத்தால் மகிழ்ச்சிவரும், நடுத்தர வயதில் தனது குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சிவரும், முதுமையில் தனது பேரக் குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சி வரும். குழந்தைகளின் நினைவுகளும் அழகானவை, குழந்தைகளின் தோற்றங்களும் அழகானவை





அழகிய விதமாய் தலை வாரவில்லை!
புருவத்தின் இயல்பை சீர் செய்யவில்லை!
உதட்டிற்கு சிவப்பு சாயமிடவில்லை!
முகத்திற்கு அழகூட்ட எதுவும் பூசவில்லை!
கழுத்திலும் உடலிலும் ஆபரணங்கள் இல்லை!
விலைஉயர்ந்த நாகரீக ஆடையுமில்லை!
கையில் மணிகாட்டும் கடிகாரமில்லை!
காலில் எந்த காலணியுமில்லை!
ஆனாலும்
அழகாய் இருக்கிறது குழந்தை!

                                               குழந்தை பருவம் என்றவுடனே முதலில் நினைவுக்கு வருவது அம்மாவுக்கும் குழந்தைக்குமிடையிலான அன்பு, ஒரு தாய் தன் குழந்தையை அன்பு மிகுதியில் வித விதமான வார்ணனைகளாலும், வார்த்தைகளாலும் கொஞ்சும் அழகும், அம்மா அடித்தாலும் அம்மாவையே கட்டிக்கொண்டு , அம்மா.. அம்மா என அழும் குழந்தைகளின் அன்பும் வார்தைகளால் விவரிக்க முடியாத அன்புக்கவிதைகள்! வீட்டிற்கு வெளியில் வீரவ்சனம் பேசிக்கொண்டும், வெட்டி பந்தா செய்துகொண்டும் இருக்கும் பல அப்பாக்கள், வீட்டுக்கு வந்ததும் குழந்தையோடு குழந்தையாக மாறி அவைகளின் மழலை கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்துக்கொண்டிருப்பது மழலை அன்பின் மகத்துவங்களில் ஒன்று!


அம்மாக்களுக்கான
 குழந்தைகளின் கவிதைகளும்
குழந்தைகளுக்கான 
அம்மாக்களின் கவிதைகளும்
முத்தங்களாலேயே
எழுதப்படுகின்றன!

                                              எனக்கு நினைவில் இருக்கும் நிகழ்வுகளில் 6 வயது சிறுவனாக இருக்கும்போது விஜயகாந்த் நடித்த "கரிமேட்டுக் கருவாயன்"(86-87) என்ற திரைப்படத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, அப்படத்தில் விஜயகாந்த் பழிவாங்குவதற்காக நிறைய பேரை வெட்டிக் கொடூரமாக கொலை செய்வார், என் அருகிலிருந்த என் அம்மா படத்தின் ஒவ்வொரு கொலை செய்யும் காட்சியிலும்  நான் அந்த காட்சியை பார்க்காதபடி  தன் கைகளால்  என் கண்களை இருக்க மூடிக்கொள்வார், தன் குழந்தை பயந்துவிடக்கூடாது என்ற அந்த அக்கறை இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது!


                                                  குழந்தை மற்றும் சிறுவர்களின் விளையாட்டும் நட்பும் வியப்பிற்குரியது , விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டே தெருவில் விளையாடும் சிறுவர்களை ரசிக்கும் நிகழ்வு அற்புதமானது! விளையாடும்போது சண்டையிட்ட சிறுவர்களால் பெற்றோர்கள் பெரிய அளவில் சண்டையிட மறுநாள் எதையும் மனதில் வைக்காமல் எப்போதும்போல் சேர்ந்து விளையாடும் குழந்தைகளின் நட்பு நல்ல நட்புக்கு சிறந்த உதாரணம்!  குழந்தை பருவத்து ச‌கோதரபாசம் சிறு சிறு சண்டைகள் நிறைந்திருந்தாலும் அதில் உண்மையான அன்பு ஒளிந்திருக்கும்! அவைகள் என்றும் உற்சாகம் தருபவை!குழந்தைகள் பொம்மைகளையும் சிறு விளையாட்டுப் பொருட்களையும் வைத்து விளையாடும் அழகு சுவாரஸ்யங்கள் நிறைந்தது! பொம்மைகளை குளிப்பாட்டி சோறூட்டி தோழமையோடு பரமாரிக்கும் நிகழ்வுகள் ரசிக்கத்தக்கவை!


உடைந்த கை
திருகிய கால்
களைந்த முடி
அழுக்கேறிய ஆடை
அலங்கோலமான தோற்றம்!
ஆனாலும் சிரித்துக்கொண்டேதான்
இருக்கின்றன பொம்மைகள்
உன்னுடன் இருப்பதால்!

                                  குழந்தைகளின் சிரிப்பும் விளையாட்டும், கேட்கும் கேள்விகளும், மிக அழகான விசயங்கள் , நீங்கள் எவ்வளவு மன இருக்கத்தில் இருந்தாலும் சிரித்துகொண்டிருக்கும் ஒரு குழந்தையை சற்றுநேரம் கவனித்துக் கொண்டிருங்கள், உங்கள் மன இறுக்கம் கண்டிப்பாக குறையும், சாலையிலோ பேருந்திலோ பயணிக்கும்போது எதிர்படும் குழந்தைகளில் நிச்சயம் இதை உணர்ந்திருப்பீர்கள்! 

                                                         குழந்தை பருவத்து பள்ளி நினைவுகள் என்றும் இனிமையானவை!  அழுதுகொண்டே பயணிக்கும் முதல் பயண‌ம் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மறக்கமுடியாது! பிறகு அழுகையின்றி மகிழ்ச்சியாக பயணிக்கும் நாட்களும், வளரும் பள்ளிகூட நிகழ்வுகளும் நட்புகளும்  நம்மில் ஒவ்வொருவருக்கும் நம் நினைவுகளில் பசுமையானவை, திரும்ப கிடைக்காதா என ஏங்கவைக்கும் பருவம் இது!


இப்போதெல்லாம் நீ
பள்ளிக்குச் செல்லும்போது 
அழுவதை நிறுத்திவிட்டாய்
இன்னும் நிறுத்தவில்லை
நீ விளையாடும் பொம்மைகள்!

எனக்கு தெரிந்த சில மழலை நினைவுகள்!

                                          எனது சித்தப்பா பையன் (5) எப்போதும் அவர்கள் வீட்டில் இரண்டு டம்ளர் காபி குடிக்கும் பழக்கம் உடையவன், ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது அங்கு கொடுத்த ஒரு டம்ளர் காபி போதாது ஒன்னொரு டம்ளர் காபி வேண்டும் என அடம்பிடிக்க, சித்தப்பா கோபத்தில் ஒரு டம்ளர் தண்னீரை கலந்து குடிச்சுக்கோ என்று சொன்னதும் ஓடிச்சென்று ஒன்னொரு டம்ளரில் நீரை எடுத்து கலந்து இரண்டு டம்ளர் காபியாக மாற்றி குடிக்க முயற்சித்து சுவை பிடிக்காமல் கீழே கொட்டிவிட்டு ஓடிவிட்டான்.

                                        எங்கள் ஊர்திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு உறவினர்கள் எல்லோரும் வந்திருந்த போது, குழந்தைகளாகிய எங்கள் எல்லோருக்கும் இரு கைகளிலும் மருதாணி அரைத்து வைத்து விட்டனர், நாங்கள் எல்லோரும் தூங்க பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, தூக்கத்தில் என் அத்தை பையன் ஒருவன்(8) என்ன கனவு கண்டானோ தெரியவில்லை திடீரென்று ஒவ்வொரு விரலாக வாயில் வைத்து மருதாணியை தின்ன ஆரம்பித்துவிட்டான், அதை பார்த்தவர்கள் நீரை தெளித்து துக்கம் தெளியவைத்து துப்ப வைத்தனர் இப்போதும் நாங்கள் அவரை " வாங்க மருதாணி தின்ன மச்சான்" என்று கேலியாக அழைப்பது வழக்கம்!

                                        என் அத்தை பையன்(7) ஒரு நாள் பள்ளியிலிருந்து தமதமாக வீட்டுக்கு வர "ஏண்டா லேட்" என அத்தை கேட்க "மழை பேஞ்சுச்சுமா.. அதான் கொஞ்சம் கொஞ்சமா வந்தேன்" என்று அவன் சொல்ல எல்லோரும் ரசித்து சிரித்தார்களாம்.( மழையால் நின்று நின்று மெதுவாக வந்ததை அப்படி சொல்லியுள்ளன்)

இதுபோல் இன்னும் எவ்வளவோ மழலை நிகழ்வுகள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நிறையவே இருக்கலாம்! அத்தனையும் இனிமையானவை,


                                                     இன்றைநாளில் பணம் சம்பாதிப்பதின் நோக்கமாகவும், தனிக்குடும்த்தின் காரணமாகவும்  குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரம் குறைந்து வருகிறது! முடிந்தவரை குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள், அன்பையும் அளவாக கண்டிப்பையும் கொடுத்து அவர்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு!

பள்ளி முடிந்து, நீ
வீடு திரும்பும் நேரத்திற்காக
உன் வீட்டுவாசலில்
ஆவலோடு காத்திருக்கும்
பூச்செடிகளையும்
நாய்க்குட்டியையும் 
பார்த்து பொறாமைபடுகிறார்களாம்
உன் வேலைக்குச் செல்லும்
பெற்றோர்கள்!

இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் வியக்கவைக்கிறது, ஆனால் ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருக்கிறது! ஓடி ஆடி விளையாடும் பழக்கம் குறைந்தும், இயற்கைக்கு அப்பாற்பட்ட உணவுமுறையும் அதிகமாகவும் ஆகிவிட்டதே இதற்கு காரணம், அதை முதலில் மாற்றவேண்டும் பழங்கள் காய்கறிகள், பருப்பும் பயறுவகைகளை குழந்தையில் இருந்தே உண்ணப்பழக்க வேண்டும், குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு சென்றால் , சாக்லேட், ஐஸ்கிரீம்,பாக்கெட் ஸ்நாக்ஸ் போன்றவற்றை குறைத்து பழங்களை வாங்கி கொடுங்கள்! அவர்களுக்கு ஆரொக்கியமும் இயற்கை வளங்களின் மீதான அக்கறையையும் அதிகமாக நாம் பழக்கப்படுத்தி எதிர்கால தலைமுறையை சிறந்ததாக மாற்றுவோம்!

                                                                                                            ~நம்பிக்கைபாண்டியன்


குறிப்பு :- வலைபதிவுலகில் பல நண்பர்கள் மழலைகள் குறித்து தொடர்பதிவு எழுதியும், அழைப்பும் விடுத்து வருகின்றனர், அதில் எனது சிறு பங்களிப்பு என் கவிதைகளுடன், (படக்கவிதையாக தனிபதிவு வரும்)! இதை படிக்கும் நண்பர்கள் நீங்களும் தொடருமாறு நட்புடன் அழைக்கிறேன்!

Saturday, November 19, 2011

உயிர் வருத்தம்! - காமெடி கவிதை!

ஒரு உயிர் பிரிந்ததற்கான
எவ்வித வருத்தங்களுமற்று
எப்போதும்போலவே இருந்தது வீடு!

"டி.வி யில் மூழ்கியிருந்த மகள்
வாசலில் விளையாடும் மகன்
தண்ணீர் பிடிக்கும் மனைவி
சமைத்துக் கொண்டிருந்த அம்மா
செய்தித்தாள் வாசிக்கும்அப்பா!" என

யாருக்கும் அக்கறை இல்லை
என்று புலம்பியபடி
 நானே எடுத்து
வெளியில் எறிந்தேன்
வீட்டிற்குள்
இறந்துகிடந்த எலியை!


Friday, November 11, 2011

நட்பு மழை! - படக்கவிதை

வெயிலும், மழையும்
எதிரிகளாகவே இருக்கின்றன!

வெயில் வலிமையாக
இருக்கும் பொழுதுகளில்
மேகங்களுக்குள்
 மறைந்துகொள்கிறது மழை!
மழை கடுமையாக
இருக்கும் பொழுதுகளில்
காணாமல் போகிறது வெயில்!

மழையின் சுவடுகளை
அழித்துச்செல்கிறது வெயில்
வெயிலின் காயத்திற்கு
மருந்திடுகிறது மழை!

வெயிலும் மழையும்
சந்திக்கும் 
அரிய மாலைப்பொழுதில் 
பூக்கிறது
வானவில் என்றொரு
அழகிய நட்பு!

!



Monday, November 07, 2011

அழகிய பொய்கள்! - படக்கவிதை (மீள்பதிவு)


அழகிய பொய்கள்!


'புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!
மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!
வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!


எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!
பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!
ரயிலேற்றிய
தண்டவாளக்காசு காந்தமாகும்!


பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!
இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!
கடவுள் குளிப்பதால்தான்
மழைபெய்கிற‌து


பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!
சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!


கொடிக்காய் பழவிதையை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!
கோவில் சுவற்றில்
தேர்வுஎண் எழுதினால்
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்!


திரைப்படத்தில் வாகனங்கள்
வேகமாக‌செல்லும் காட்சிகளுக்கு
படச்சுருளை வேகமாக‌சுற்றுவார்கள்!
விமான‌த்தில் செல்பவர்கள்
எல்லோரும் வெள்ளைகாரர்கள்!
இரண்டாயிரமாவது ஆண்டில்
உலகம் அழியும்! 'என‌


இப்போது நினைத்தாலும்
அழகாகவே இருக்கின்றன!
குழந்தை பருவத்தின்
குற்றமில்லாத பொய்கள்!


Saturday, November 05, 2011

கவிதைகளாகவும் இருக்கலாம்! 2 - படக்கவிதை

1

சுவையான உணவை
எங்கு உண்டாலும்
உடனே வந்துவிடுகிறது
அம்மாவின் நினைவு!

2

ஹைக்கூ!

என்ன மகிழ்ச்சியோ
எங்கு விழுந்தாலும்
துள்ளிக் குதிக்கின்றன
மழைத்துளிகள்!

3

நெடுந்தூரம் பறந்துவரும்
பறவைகளின் ஓய்வுக்காகவே
ஆங்காங்கே காத்திருக்கின்றன
சில ஒற்றை மரங்கள்!






Wednesday, November 02, 2011

எதிர்வினை - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


   எதிர்வினை - சிறுகதை                              
                             ராஜேஷ் அவனது அறை நண்பர்களிடம் "இன்று இரவு என் பார்ட்டி, எல்லா செலவும் என்னுடையது" என்றவுடன் என்ன காரணம் என்று அனைவரும் கேட்டனர். "கடந்த ஒரு மாதாமாக போனிலேயே பேசிக் பஸ்டாப்பிலேயே சந்தித்த அந்த பெண்ணை நாளை நேரில் சந்திக்கப்போகிறேன். அவள் வீட்டில் யாருமில்லையாம் வரச்சொன்னாள்,நாளை என் அலுவலகத்திலும் லீவ் சொல்லிவிட்டேன்  நாளை முழுவதும் ஒரே ஜாலிதான்" என்று கண்சிமிட்டினான் ராஜேஷ்.

                               ராஜேஷ் பிரபல நிறுவனத்தில் உதவி மேலாளர் பொறுப்பில் இருக்கும் 27 வயதும், எடுப்பான தோற்றமும், சாமர்த்தியமான பேச்சும் க் இளைஞன். அவனுக்கு கீழ் இருப்பவர்களின் அன்றாட பணிகளை ஒருங்கிணைத்து மேலாளரிடம் சமர்பிப்பது மட்டுமே அவன் பணி, சில மணிநேரம் மாலை நேரத்தில் மட்டுமே வேலை இருக்கும், மற்ற நேரங்களில் கம்ப்யூட்டரிலும் செல்போனிலுமே அதிகம் மூழ்கியிருப்பான், இணையதள சாட்டிங்கில் சந்திக்கும் பெண்கள், சில நேரங்களில் ராங் நம்பர்களில் கிடைக்கும் பெண்கள், என அனைவரிடமும் பேசி எளிதில் நண்பனாகி விடுவான், அவர்களின் மனப்போக்கை அறிந்தபின்  சற்று பலவீனமானவர்களை தன்வசப்படுத்தி "காரியம்" சாதித்துக்கொள்வான், பிறகு அவர்களை தவிர்த்து விட்டு அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவான்.

                                                     "எப்படி உன்னால் மட்டும் இப்படி பெண்களை எளிதில் உன் வலையில் வீழ்த்த முடிகிறது? உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா!" என்றான் குமார். "கொடுத்துவச்சவண்டா நீ வாழ்ந்தால் உன்ன மாதிரி வாழனும் "என்றான் குரு ராஜேஷ் பெருமிதத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் . "ரொம்ப புகழாதிங்கடா அவன் செருப்படி வாங்கிய கதை எல்லாம் எனக்குதான் தெரியும், முதலில் எச்.ஐ,வி. டெஸ்ட் செய்ய வேண்டும் இவனிடம்" என்றான் சந்தோஷ். "இது உன் வாழ்வில் அடிக்கடி நடப்பதுதானே  அப்புறம் என்னடா புதுசா இதுக்காக பார்ட்டி என்றனர் அனைவரும். "பாதுகாப்பாக தவறுகள் செய்யும் போது பயப்படத்தேவையில்லை" என தன் தவறை  நியாயபடுத்தினான் ராஜேஷ்!

                               "இது என் வாழ்வில் நான் அடையப்போகும் 25 வது பெண் அதனால்தான் இந்த வெள்ளி விழா பார்ட்டி என்றவனிடம் "இதையும் கூட குறித்து வைப்பாயா" என்று கிண்டலடித்துக்கொண்டே பார்ட்டியை ஆரம்பித்து  உற்சாகபானத்தில் மிதந்து கொண்டிருந்தனர், 
                                                                                    "எனக்கென்னவோ நீ இப்படியே தவறான வழியில் போய்க்கொண்டிருப்பது நல்லதில்லை எனத் தோன்றுகிறது" என்று வழக்கம் போல  அறிவுரையை ஆரம்பித்தான் சந்தோஷ்.  ராஜேஷ் சிரித்துக்கொண்டே "நல்லவனவே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் இறந்த பிறகு சிலையா வைக்கப்போகிறார்கள், இருக்கும் வரை சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போய் விடவேண்டும்! மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது! சரியா, தவறா என்பது பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது" என்று அவன் அறிவுரைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

                                               மறுநாள் காலை அவளுடைய வீட்டிற்கு அருகில் சென்ற அவளுக்கு பல முறை போன் செய்தான் அவள் எடுக்கவில்லை,  என்ன செய்யலாம் என யோசித்திக்கொண்டே பக்கத்து சாலையில் இருந்த கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்து, ஒரு டீயை வாங்கி குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து "செல்லக்குட்டி" என்ற பெயரில் சேமித்த அவள் எண்ணிற்கு மீண்டும் அழைத்தான் , அழைப்பை ஏற்று தான் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அரைமணி நேரம் கழித்து மீண்டும் தானே அழைப்பதாகவும் கூறினாள்! அதே கடையில் நின்று மேலும் இரு சிகரெட்டுகளையும் ஒரு டீயையும் காலிசெய்தான், 
                                                    ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவளாகவே போனில் அழைத்து " இன்று வேண்டாம் ,நீ புறப்படு! இன்னொரு நாள் நானே சொல்கிறேன், இரண்டு நாட்களுக்கு போன், sms என எதுவும் செய்யாதே, என் சூழ்நிலை சரியில்லை" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள், மிகுந்த ஏமாற்றத்துடன் அருகில் இருந்த தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து,மாலை கடற்கரை சென்று , இரவு பாரில் நன்கு குடித்துவிட்டு அறையில் வந்து   தூங்கிவிட்டான். 
                                                       அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்ததால் அவசரமாக அலுவலத்திற்கு புறப்படும்போது நான்கு போலீசார் வீட்டிற்குள் வந்தனர்.  "நேற்று நடந்த கொலைக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதால் உன்னை கைதுசெய்கிறோம் " என்றபடி கையில் விலங்குடன் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் . என்ன கொலை என்று கேட்டபோது  அருகிலிருந்த அன்றைய செய்திதாளை எடுத்து என் கையில் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் அதில் " சென்னையில் இளம்பெண் கொடூரகொலை, கொலை செய்த கணவன் தற்கொலை "என்றபெயரில் இருந்த செய்தில் நேற்று தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏமாற்றி அனுப்பியவள் பிணமாக கிடந்தாள். ராஜேசிடம் அவன் செல்போனை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிலிருந்த  "செல்லகுட்டி" எண்ணையும் அந்த எண்ணுக்கு அனுப்பப்பட்ட & பெறப்பட்ட sms கலையும் பார்த்த்உ முகம்சுழித்தார், 

                                                பின் அவனிடம் "அவளை கொலை செய்த கணவன் "அவளுடைய கொலைக்கும் என் தற்கொலைக்கும் காரணம்  அவளுடைய சில கள்ளக்காதலர்கள்தான்" என் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளான். அவளுடைய செல்போனை வைத்து நாங்கள் விசாரித்த வரையில் கடந்த ஒரு மாதமாக நீதான் அவளுடன் அதிகம், தொலைபேசி மற்றும் sms வழியாக பேசியிருக்கிறாய், நேற்று கொலைசெய்யப்படுவதற்கு சற்று முன் வரை அவளுக்கு வந்த , மிஸ்டு கால், டயல்டுகால், ரெசிவ்டு கால் அனைத்தும் உன்னுடைய எண்தான், நேற்று முழுவதும் நீ அலுவலகத்திற்கும் செல்லவில்லை, அவள் வீட்டருகே இருந்த கடையில் இரண்டுமணி நேரமாக இருந்திருக்கிறாய்" கொலையை நீ செய்யாவிட்டாலும் அவள் கொலைசெய்யப்படுவதற்கு நீதான் முக்கியகாரணமாக இருந்திருக்கிறாய், இனி தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது ராஜேஷ்" என்றபடி  கையில் விலங்கை மாட்டினார் இன்ஸ்பெக்டர்.

                                                   " செய்த தவறுகளில் இருந்து தப்பித்தாக பெருமைப்படும் ஒருவன், ஒரு நாள் செய்யாத தவறால் பாதிக்கப்படும்போது நிச்சயம் வருத்தப்படுவான்" என்று எப்போதோ சந்தோஷ் சொன்ன அறிவுரை நினைவுக்குவர, கதறி அழ ஆரம்பித்தான்.