Sunday, December 30, 2007

நட்புக்காக!

(சிறுகதை மாதிரி ஆனால் சிறுகதை அல்ல)!

""நாளைக்கு ராத்திரி எல்லோரும் குற்றாலம் போறோம்டா! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் குற்றாலத்தில்தான் நம் ஆட்டம்!" "ஜான் அண்ணன் சுமோ கார்லதான் போறோம் நம்ம பசங்க எல்லொரும் வராங்க! ரெடியா வந்திரு மச்சான்! என்று கணேஷிடம் சொன்னான் செல்வா! ...ம்ம் சரிடா! மாசக்கடைசியாச்சுல கையில் 500 ரூபாய்தான்டா இருக்கு" என்றான்! இருக்குறத கொண்டுவாடா! நான் பார்த்துக்குறேன் என்றான்" செல்வா!

கணேஷ் வீட்டிற்கு சென்றதும் எதிர் வீட்டில் குடியிருக்கும் தன் காதலி விமலா செல்பேசியில் அழைத்தாள்! "கணேஷ் என் கூட வேலைபாக்குற அடுத்த‌ தெரு பொண்னோட அக்காவுக்கு பக்கத்து ஊர் சிவன் கோவிலில் கல்யாணம் அம்மா என்ன போக சொல்லீட்ட்டாங்க ! மறக்காம வந்திடு கணேஷ்!" என்றாள் விமலா. "கண்டிப்பா வரேன்" என்று சொல்லி விட்டு, நண்பர்களிடம் எப்படி சொல்வது என யோசித்தான்!

கணேசும் விமலாவும் சிலவருடங்களாக காதலிக்கிறார்கள்!இருவர் வீட்டிலும் தெரிந்து எதிர்த்தபின், ஒரே தெருவில் இருந்தாலும் நேரில் சந்தித்துகொள்வதில்லை! இருவரும் வேலை பார்க்கும் அலுவலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல், நீண்ட தொலைவில் இருக்கின்றன! எனவே அதிகம் சந்தித்துக்கொள்வதில்லை!

யாரேனும் எங்காவது இருவரையும் சேர்ந்து பார்த்ததாக் சொல்லிவிட்டால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக முடியாது என்பதால், ஞாயிற்றுக்க்கிழமைகளில் கூட வீட்டை விட்டு எங்கும் செல்லாத சூழ்நிலையில் இருப்பவள் விமலா!ஆனாலும் பேசும் விதத்தில் பேசினால் அப்பா சம்மதிக்கும் குணம் உடையவர் என்பதால் நம்பிக்கையோடு காதலித்தால்! தொலைபேசி பேச்சு மட்டும் தினமும் நடக்கும்! இது போல அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பர்களில்தான் சந்தித்துக்கொள்வார்கள்!

செல்வாவுக்கு போன் செய்து" சாரிடா மச்சான் விமல பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்கு கல்யாணத்துக்கு போறாளாம் வர சொல்லுறா!நான் போகலாம்னு நினைக்கிறேன்! நீங்க மட்டும் குற்றாலம் போய்ட்டு வாங்கடா! நான் அடுத்த முறை வரேன்!"'என்றான் கணேஷ்.

செல்வாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது! "ஏண்டா மச்சான் இப்படி இருக்க! நீ வரலைனா நம்ம பசங்க பாதி பேரு வரமாட்டானுங்கடா எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லோரையும் ஒன்னுசேர்த்திருக்கென் தெரியுமா! லவ்வுலாம் இன்னைக்கு இருக்கும்! நளைக்கு விட்டுட்டு போனாலும் போய்டும்டா, நம்ம ஃப்ரண்ட்ஷிப் அப்படியாடா"என்றான் செல்வா!
கணேஷ்" சாரிடா மச்சான் என்ன புரிஞ்சுக்க!" என்றதும்,கோபத்தில் செல்வா இணைப்பை துண்டித்தான்!

கணேஷ் வரவில்லை என்றதும் சில நண்பர்கள் வரவில்லை என்றார்கள் அவர்கள் வரவில்லை என்றால் நாமும் போகவேண்டாம் என்றார்கள் மற்ற நண்பர்கள், கடைசியில் குற்றாலம் செல்லும் திட்டமே கைவிடப்பட்டது!
கணேஷ் திருமணத்திற்கு சென்று விமலாவுடன் சில மணிநேரங்கள் நிறைய‌ பேசிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்ததால் மகிழ்ச்சியுடன் திரும்பினான்!

இடையில் செல்வாவின் எண்ணிற்கு போன் செய்துபார்த்தான், அவன் இன்னும் கோபம் குறையாமல் இருந்ததால் எடுக்கவில்லை! மறுநாள் எதிரே பார்த்தபோதும் கண்டும் காணாததுபோல் போய்விட்டான்!முன்று நாட்களாகியும் பேசவில்லை!SMS அனுப்பியும் எதற்கும் பதில் அனுப்பவில்லை,என்ன செய்வது என்று யோசித்த கணேஷ் அலுவகத்தில் உணவு இடைவேளையின் போது தன் இ_மெயில் முகவரியில் இருந்து செல்வாவின் இ_மெயில் முகவரிக்கு மெயில் ஒன்றை அனுப்பினான்!


""ஹாய்டா மச்சான்!
எப்பிடியிருக்க? ஏண்டா மூணு நாளா பேச‌மாட்டிங்குற!
அவ்ளோ பெரிய ஆளாகிட்டியாடா நீ! நான் வேணும்னே அப்படி செய்யலடா என் சூழ்நிலை அப்படி! உனக்கே தெரியும் நானும் விமலாவும் நேர்ல பேசி ரொம்ப நாள் ஆச்சுனு!அதான் போய்ட்டேன்!நீ கோபிக்கிற அள‌வுக்கு நான் தப்பு எதுவும் பண்ணின மாதிரி எனக்கு தோன‌லடா! உன் கோபத்த மாத்திட்டு எப்ப‌வும் போல பேசுடா!
ஃப்ரண்ர்ஷிப்பவிட காதல் பெரிசுனு நான் நினைக்கலடா! ரெண்டுமே வேற வேற மாதிரி அதுகேத்தமாதிரிதான் நான் நடந்துகிட்டேன், எப்படினு கேக்குறியா?

நீ எனக்கு ரொம்ப வருசமா பெஸ்ட் ஃப்ரண்டு! ஆனா விமலா எனக்கு மூணு வருசமாதான் லவ்வர்! எப்பவும் இதே மதிரி இருக்க முடியாது, அடுத்த வருசமே கல்யாணம் முடிஞ்சா வாழ்க்கை அன்பு ஆசை சண்டைனு எல்லாம் கலந்து நிறையவே மாறிடும்!இப்போ மாதிரி அப்போ இருக்கமுடியாது!ஆனா நம்ம ஃபிரண்ட்ஷிப் அப்படியாடா? எப்பவும் இதே மாதிரி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாதானடா இருப்போம்! லவ்வ புரிஞ்சுகிட்டு ஃப்ரண்ஷிப்பா நீ நம்ம சந்தோசத்த விட்டுகொடுப்ப! ஃபிரண்டிஷிப்ப புரிஞ்சுகிட்டு தன்னோட சந்தோசத்த அவ விட்டுகொடுக்கமாட்டா! ஏன் எந்த லவ்வரும் தன்னோட சந்தோசத்த விட்டுக்கொடுக்குறதில்லை!லவ்வு பிடிவாதம் பிடிக்கும்டா!ஃபிரண்ட்ஷிப்தாண்டா ம‌ச்சான் அணுச‌ரிச்சு போகும்! அதுதாண்டா மச்சான் நம்ம ஃபிரண்ட்ஷிப்போட ஸ்பெசலே!

லவ் விசயத்துல எதாவது ப்ரோகிராம்னா வாய்ப்பு கிடைக்கிறப்போவே யூஸ் பண்ணிக்கிட்டாதான்!இல்லாட்டி அவ்ளவுதான்!ஆனா ஃப்ரண்ஷிப் ப்ரோகிராம எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம் மச்சான்!
எதாவ‌து பிர‌ச்ச‌னைனா நீங்க‌ள்லாம் உத‌வி ப‌ண்ண‌ இருப்பீங்க‌ன்ற‌ தைரிய‌த்துல‌தாண்டா நான் தைரிய‌மா காத‌லிக்கிறேன் நீயே இப்ப‌டி இருந்தா எப்ப‌டிடா? வேலை முடிஞ்ச‌தும் ஏழு ம‌ணிக்கு சிவா க‌டைக்கு வ‌ந்திருடா! நான் அங்கேயே இருக்கேன் ! ம‌ற‌ந்துடாதே!!

உன் ந‌ண்ப‌ன்
க‌ணேச‌ன்


அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் செல்வா செல்பேசியில் க‌ணேசை அழைத்தான்!
"டேய் மச்சான் இந்த‌ ஞாயிற்றுக்கிழ‌மை கண்டிப்பா குற்றால‌ம் போறோம்டா! எல்லார் கையில‌யும் ச‌ம்ப‌ள‌க்காசு இருக்கும் நல்லா செல‌வு செய்ய‌லாம்!" என எதுவும் ந‌ட‌க்காத‌துபோல் எப்போதும் போல‌ இய‌ல்பாக‌ பேசிக்கொண்டிருந்தான் செல்வா! மெயில் ப‌டித்ததும் ச‌மாதான‌மாகிவிட்டான் என்ப‌து கணேசுக்கு புரிந்தது!
"ச‌ம‌தான‌மான‌ அடுத்த‌ நிமிட‌மே, சண்டைகளை மறந்துவிடுவதே நட்புக்கு அழகு!" என்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக இருவரும் பேசிகொண்டிருந்தார்க‌ள்!

~நம்பிக்கைபாண்டியன்~
முரண்பாடு
அன்றொரு நாள்
வெளியே
காத்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்காத‌

பேருந்தை பார்த்து
சபித்துச் சொன்ன மனசு!

மற்றொரு நாள்
உள்ளே
அமர்ந்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்கும்

பேருத்தை நினைத்து
"இத்தனை நிறுத்தங்களா"
என சலித்துக் கொள்கிறது!


~நம்பிக்கைபாண்டியன்
உரை பார்வை பூக்களால் முன்னுரை
எழுதத் தொடங்கிய‌
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?


~நம்பிக்கைபாண்டியன்

Friday, December 14, 2007

பாரதியே! எதையாவது
எழுதிவிட்டு
கவிதை
என்று சொல்லும்,
என்
தகுதியில்லா
தலைக்கணத்தில்!
நறுக்கென்று
குட்டியது!
உன்
நல்லகவிதை ஒன்று!
~நம்பிக்கைபாண்டியன்

வருடங்கள் ஓடியதால்
பருவங்கள் மாறியது!
ப‌ருவங்கள் மாறியதால்
உருவங்கள் மாறியது!

உருவங்கள் மாறினாலும்
உள்ளங்கள் மாறாமல்!
அன்றுபோல் இன்றும்
உயர்ந்தே இருக்கிறது
நம் உன்னத நட்பு!

~நம்பிக்கைபாண்டியன்

Wednesday, December 12, 2007

ப‌ல‌ன்! "க‌விதை போட்டிக‌ளில்
சில‌ ஆயிர‌ம் ப‌ரிசுக‌ள்!

ப‌த்திரிக்கை பிர‌சுர‌த்தில்
ப‌ல‌ ஆயிர‌ம் வாச‌க‌ர்க‌ள்!

இணைய‌ தொட‌ர்புக‌ளில்
இனிய நண்ப‌ர்க‌ள்!

முக‌ம‌றியாம‌ல்
பேசும்ந‌ல்ல‌ தோழிக‌ள்!

ப‌ழைய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குள்
புதிய ம‌‌திப்புக‌ள்!" என‌

உன்னால்
நான் எழுதிய
க‌விதைக‌ளின் ப‌ல‌ன்க‌ளாய்,
நிறையவே கிடைத்தன‌
உன்னைத் த‌விர‌!!


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
( சிறுகதை) ~(நம்பிக்கைபாண்டிய‌ன்)



புவனாவின் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமல் எழுந்து, நடந்துகொண்டே சிகரெட் ஒன்றை பற்றவைத்தபடி கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்! புவனா இதைக க‌ண்டதும் "நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட நீ யோசிச்சது மாதிரி தெரியல‌ ரமேஷ்!என் பேச்சுக்கு இவ்வளவுதானா நீ கொடுக்கும் மரியாதை" என்றாள் கோபமாக!

"புவனா நான் உன்னை காதலிக்கிறது என்னவோ உண்மைதான்,அதற்காக‌ நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்க வேன்டுமென்று நினைப்பதில் நியாய‌மில்லை! இது என் தனிப்பட்ட சுதந்திரம்! இதில் தலையிடாதே! நான் சிகரெட் பிடிப்பது முன்பே தெரிந்துதானே என்னை காதலித்தாய்! இப்போது மட்டும் ஏன் நிறுத்த சொல்லுகிறாய்!என்று சொல்லிக்கொண்டே மனதிற்குள்" ச்சே என்ன பெண்கள் இவர்கள், காதலின் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் பெண்கள், நாட்கள் செல்லச் செல்ல அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறார்கள்!" என நினைத்துக்கொண்டான்!



ர‌மேஷின் பேச்சுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் மொளனமாக இருந்தாள் புவனா! சற்று கோபம் தணிந்தவனாய் " என்னால சிகரெட்ட நிறுத்த முடியாது புவனா எட்டு வருட பழக்கம்! இப்போதாவது ஒரு பாக்கெட்தான்,முன்னாடி தினமும் இரண்டு பாக்கெட் காலி செய்த காலமெல்லாம் இருக்கு! கெட்ட பழக்கங்களை பழகுவது சுலபம் ஆனால் நிறுத்துவது மிக மிக கடினம்! தவறென்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாத நிலமை என்னுடையது! புரிந்துகொள் புவனா!" என்றான்.


"பேசுற அளவுக்கு யோசிக்கப் பழகு ரமேஷ்! உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன்,இதானால் எவ்வளவு கெடுதல்னு புக்ஸ்ல படிச்சிருக்கேல‌!நீ சொல்லுற மாதிரி, "திருத்திக்கொள்ள முடியாத தவ‌றுகள் என்று எதுவுமே இல்லை!! இருக்கிறது என்று நீ சொன்னால், திருந்துவதற்கு உன் மனம் தயாராக இல்லை என்றுதான் அர்த்தம்!"

"நான் உன்னை உடனே நிறுத்த சொல்லலியே முதல்ல பாதியாக குறை! அப்படியே கொஞ்ச‌ம் கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்!" "சொல்ல‌னும்னு தோனுச்சு சொல்லிட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்! நேரமாச்சு போகலாம்!"என்றாள் அவன் பதிலை எதிர்பாராதவளாக! இருவரும் புறப்பட்டு சென்றனர்,


கோபத்தில் மறுநாள் ரமேசிடம் புவனா சரியாக பேசுவதில்லை, செல்பேசியில் அழைத்து கேட்டால், அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்று சொல்லிவிட்டாள்! கோபத்தில் இவனும் "நீ எப்போ ப்ரீயா இருக்கியோ அப்போ நீயா கூப்பிட்டு பேசு!" என்று இணைப்பை துண்டித்தான்! இரண்டு நாட்களாக இருவருமே பேசுவதில்லை!சம்பிரதாயத்திற்கு காலையிலும் இரவிலும் SMS அனுப்பிக்கொள்வதோடு சரி!


ர‌மேஷ் தனியார் வ‌ங்கி ஒன்றில் உயர்ப‌ணியில் இருப்பவன். ப‌ள்ளி ஒன்றில் ந‌ட‌க்கும் விழாவிற்கு அந்த‌ வ‌ங்கியின் சார்பில் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ ஸ்பான்ச‌ர் செய்திருந்தார்க‌ள், அது ப‌ற்றி பேச‌ உண‌வு இடைவேளை நேர‌த்தில் வ‌ருமாறு த‌லைமை ஆசிரிய‌ர் அழைத்திருந்தார்! அத‌ன்ப‌டியே சென்றான்.


தலைமை ஆசிரியருடன்விழா ப‌ற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளை பிடித்து இழுத்த‌ப‌டி உள்ளே வ‌ந்த உடற்பயிற்சி ஆசிரியர்" சார் இவனுக ரெண்டுபேரும் நம்ம ஸ்கூல் மொட்டை மாடியில் சிகரெட் பிடிச்சுட்டு இருக்கப்போ பார்த்து கையோட இழுத்துட்டு வந்தேன் சார்!" என்று புகார் செய்தார்!


த‌லைமை ஆசிரிய‌ர் அம்மாண‌வ‌ர்க‌ளை பார்த்து முறைத்த‌ப‌டியே" ஏன்டா அறிவு கெட்ட பயலுகளா!இந்த‌வ‌ய‌சிலேயே சிக‌ரெட்டா? காச‌க் க‌ரியாக்கி உட‌ம்பையும் கெடுத்துக்காதிங்க‌டா" என்று திட்ட‌ ஆர‌ம்பித்தார்! ஒரு மாண‌வ‌ன் என்ன‌ செய்ய‌போகிறாரோ என்ற‌ ப‌ய‌ந்த‌ப‌டியே நின்றிருந்தான்! இன்னொருவ‌ன் எந்த‌ ப‌ய‌முமின்றி அல‌ட்சிய‌ ம‌னோபாவ‌த்துட‌ன் நின்றிருந்தான்!



திட்டிக்கொண்டிருந்த‌ த‌லைமை ஆசிரியர், அதில் ஒருவ‌னை வேதியிய‌ல் ஆய்வ‌க‌த்திற்கு சென்று சுட‌ர்விள‌க்கு ஒன்றையும், க‌ண்ணாடித்துண்டு ஒன்றையும் வாங்கிவ‌ர‌ச் சொன்னார்! என்ன செய்யப்போகிறார் என்று ஆர்வ‌மாக கவணித்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.



அவன் வாங்கி வ‌ந்த‌த‌தும்,"சிக‌ரெட் குடிப்ப‌து ஏன் த‌ப்புனு சொல்லுறேன்னு முத‌ல்ல‌ தெரிஞ்சுக்கோங்க‌டா!" என்று சொல்லி, முத‌லி சுட‌ர்விள‌க்கை ப‌ற்ற‌ வைத்தார், அதில் எரிந்த‌ தீச்சுட‌ருக்கு சற்று மேலே க‌ண்ணாடித்துண்டை தூக்கி பிடித்தார், தீச்சுட‌ரிலிருந்த வந்த புகை தொடர்ந்து கண்ணாடியில் ப‌டிந்ததும், ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருந்த‌ க‌ண்ணாடித்துண்டு க‌ருப்பாக‌ மாறிய‌து!
மாண‌வ‌ர்க‌ளிட‌ம் அதைக்காட்டி" சுத்த‌மாக‌ இருந்த‌ இந்த‌ க‌ண்ணாடி ஏன் இப்ப‌டி அழுக்கு பிடித்து க‌ருப்பாகா மாறிய‌துனு தெரியுமா?" என்றார்!


"தொட‌ர்ந்து புகைப‌ட்ட‌தால் இப்ப‌டி அழுக்காச்சு சார்!" என்றான் அல‌ட்சிய‌மாக‌ இருந்த‌ மாண‌வ‌ன்,"

"ம்ம்ம் அதே மாதிரிதாண்டா நம்ம உடலின் உள் உறுப்புக‌ளும், சுத்த‌மாக‌ இருக்கும் உட‌லுக்குள் தொட‌ர்ந்து புகையை இழுப்ப‌தால் அந்த‌ புகையில் உள்ள‌ ந‌ச்சுப்பொருட்கள் உள் உறுப்புகளுக்கு த‌ற்காலிக‌ இத‌ம‌ளித்தாலும், பெரிய‌ அள்வில் பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து! நிறைய‌ நோய்க‌ளை உருவாக்குகிற‌து!


இந்த‌ வ‌ய‌சுல‌ உட‌ம்புல‌ தெம்பு இருக்குற‌ப்போ ஒன்னும் தெரியாது! பின்னால‌ ரொம்ப‌ க‌ஷ்டப்‌ப‌டுவீங்க‌! இனிமேல் சிக‌ரெட் குடிக்காதீங்க‌! என்று தெளிவாக‌ ம‌ன‌தில் ப‌தியுமாறு சொன்னதும், உண்மை புரிந்த‌வ‌ர்க‌ளாக‌ மாண‌வ‌ர்க‌ள் இருவ‌ரும் "இனி நெஜ‌மாவே சிக்ரெட் குடிக்க மாட்டோம் சார்" என்று ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ சொன்னார்க‌ள்!


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த‌‌ ர‌மேசுக்கு ம‌ன‌திற்குள் ஏதோ ஒன்று சுருக்கென்ற‌து தைத்த‌து போல‌ இருந்த‌து!தெளிவாக உணர்த்திய ஆசிரியரை ஆச்சர்யமாக பார்த்தான், புவனாவும் இதை, என் நலத்திற்காகாதானே சொன்னாள்! அதை கேட்ப‌தில் என்ன‌ த‌வ‌று!இனி நானும் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என ம‌ன‌திற்குள் ம‌ன்னிப்புக் கேட்டுகொண்டே!பேசி முடித்துவிட்டு வெளியே வ‌ந்த‌தும் த‌ன் செல்பேசியில் "செல்ல‌ம்" என்ற‌ பெய‌ரில் சேமித்துவைத்திருந்த‌ புவ‌னாவின் எண்ணை அழைக்க‌ அழுத்தினான்!

Sunday, November 04, 2007

காத்திருப்பு பேருந்து
நிறுத்த‌த்தில்
ர‌யிலுக்காக
‌காத்திருக்கும்
ப‌ய‌ணியைப் போல்
நானும்!

பொருத்த‌மின்றி
காத்திருக்கிறேன்
உன்
காத‌லுக்காக‌!
~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

Wednesday, October 03, 2007

அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த‌
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த‌
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!

~நம்பிக்கைபாண்டியன்


Tuesday, October 02, 2007

மறைந்த காதல்!சரியா? தவறா?
எப்படி கேட்பது?
என்ன நினைப்பார்கள்?
என்ற தயக்கத்தில்
எனக்குள் தோன்றி
எனக்குள்ளேய
‌மறைந்து போன‌
சில கேள்விகளைப் போல்!
உன்மேல்
நான் கொண்ட‌
காதலும் ஆனதடி(டா)!
nambikaipandian@gmail.com ~நம்பிக்கைபாண்டியன்



Sunday, September 30, 2007

ஓடிப்போலாமா?

அக்கம் பக்கம் கண்ணில் படும்படி யாருமில்லை என்று தெளிவுபடுத்திக்கொண்டு ,வீட்டிற்கு சற்று தள்ளியே பைக்கை நிறுத்திவிட்டு,செல்வியின் வீட்டிற்குள் நுழைந்தான் மூர்த்தி!

உள்ளே அன்றைய செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தாள்செல்வி
!மூர்த்தியை பார்த்ததும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்!
"என்ன செல்வி! இன்னும் புறப்படலியா நான்தான் நேற்றே சொன்னேன்ல! வேகமா வா உன் அம்மா அப்பா வருவதற்குள் போயிடலாம்!"என்று கெஞ்சும் பார்வையுடன் அழைத்தான்!
"உங்க இஷ்டத்துகெல்லாம் என்னால வரமுடியாது!நம்ம ஒன்னுசேரமுடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எனக்கு ரொம்ப குறைஞ்சுருச்சு!"
"என்ன மன்னிச்சுருங்க! முதல்ல வீட்டுக்கு போங்க! யாராவது பார்த்தா என்ன தப்பா நினைப்பாங்க!"என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் ஜன்னலின் பக்கம் திரும்பிக்கொண்டாள்!
"உன்ன எனக்கு நிஜமாவே பிடிக்கலைனு சொல்லு நான் போய்டுறேன்!"என்றான்!
அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்!

யாரென்றே அறிமுகமாத நம்மை!நம் இருவருக்கும்தான் திருமணம் என்று சொல்லி! நம் பெற்றோர்கள்தானே நம்மை நேரில் அறிமுகப்படுத்தினார்கள்! மூன்று மாதத்திற்கு முன் பெரியோர்கள் முன்னிலையில் வெற்றிலைபாக்கு வைத்து, தட்டு மாற்றிக்கொண்டு நல்லநாள் மூகூர்த்தம்,திருமண மண்டபம் ,திருமண செலவுக்க்கு இரு தரப்பிலும் தேவையான பணஏற்பாடு, போன்ற காரணங்களால் நான்கு மாதங்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்! என்று சொன்னார்கள்!

எனக்கு தெரியாமல் உங்களிடம் நான் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொன்னது என் பெற்றோர்கள் செய்த தவறு! அதை நம்பி அன்று பெண்ணுக்கு 25 சவரன் நகைபோடுவதாக ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது "பேசியதை விட நான்கு சவரன் குறைவாகத்தான் நகை போடுவோம் இல்லையென்றால் நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்" தடாலடியாக பதில் சொன்னது உன் பெற்றோர்களின் தவறு! இவர்களுக்கு இடையில் நாம் மாட்டிகொண்டு முழிக்கிறோம்!" என செல்வியிடம் புலம்பி தவித்தான் மூர்த்தி!

"உங்கள் வீட்டில் நீங்கள் எடுத்துச்சொல்லி சமாதானம் செய்யலாமே என்றாள் செல்வி!"
"சொல்லிவிட்டேன்!செல்வி,எங்கள் வீட்டில் பணத்தாசைக்காக மறுக்கவில்லை! உன் பெற்றோர்கள் பொறுமையாக பேசாமல் எடுத்தெறிந்து பேசும் விதமாக பதில் சொன்ன விதம் பிடிக்கவில்லை! அதனால்தான் இப்பொழுதே இப்படியா? என்று யோசிக்கிறார்கள்,என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்!
உன் அப்பாவிடமும் நான்கு சவரன் நகைக்குரிய செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் திருமணத்தை நிறுத்தாதீர்கள் என்று சொல்லி பார்த்துவிட்டேன்! "எங்கள என்ன வக்கத்த குடும்பம்னு நினைச்சுட்டிங்களா!உங்க வாக்கு சுத்தத்திற்கு இவ்வளவு செய்யுறதே போதும்!னு சொல்லுறார்!
இருதரப்பினரையும் இப்போது சமாதனம் செய்வதை விட நாமாக திருமணம் செய்துவிட்டு பிறகு சமாதானம் செய்வது சுலபம்! என்றான்!

அவள் சற்று முன் செய்திதாளில் சில வரதட்சனை கொடுமைசெய்திகளை படித்ததில், அதிலிருந்த ஆண்களை விட மூர்த்தி உயர்ந்தவனாக் தெரிந்தான்!அப்படி என்ன! இவ்வளவு பிரியம் என்மேல் என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டே அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் செல்வி!

அவளின் பார்வையின் அர்த்தன் புரிந்தவன் போல் "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு செல்வி! பார்த்தவுடன் பிடித்துப்போன உன் இயல்பான முகம்!கடந்த மூன்று மாதத்தில் உன்னுடன் தொலைபேசியில் பேசியபோதும், என் வீட்டிற்கு தெரியாமல் உன் வீட்டிற்கு இரண்டு முறை உன் வீட்டிற்கு வந்த போதும் நீ பேசிய விதமும்,உன் குணமும் பிடித்திருந்தது! "நான்கு சவரன் நகைக்காக நல்ல வாழ்க்கையை இழக்க நான் தயாராக இல்லை!"அதனால்தான் உன் வீட்டில் கொடுக்கும் நகையோ எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!நீ வந்தால் போதும்!செல்வி!

நகரத்து வாழ்க்கைக்கு என்றால் என் சம்பளம் போதாதுதான்!நம் பகுதிக்கு வாழ்க்கைக்கு என் சம்பளம் அதிகம் தான்! வாழப்போவது நாம் தான் நம் பெற்றோர்கள் அல்ல அவர்களை பிறகு சமாதானப்படுத்தலாம் வா போகலாம் என்று கையை பற்றி இழுத்தான்!
சட்டென்று அவன் கைகளை உதறிவிட்டு உள அறைக்குள் ஓடினாள்!அவன் வாடிய முகத்துடன் வாசலில் வந்து நின்றான்!

உள்ளே சென்றவள் சில நாட்களுக்கு தேவையான ஆடைகளை பையில் எடுத்து வைத்துவிட்டு!"பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை! பணத்தைவிட என்னைக் நேசிப்பவன் கிடைக்கும் போது என் திருமணத்திற்காகவே எடுத்த நகைகளின் உரிமையை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று நினைத்தபடியேஅலமாரி சாவியை எடுத்து நகைகளையும் எடுத்து பையில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள் செல்வி!அது தெரியாமலேயே மனம் மகிழ்ந்து பைக்கை இயக்கினான் மூர்த்தி! அவன் தோள்களை பற்றியபடி அவள் பின்னே அமர்ந்ததும், இணையப்போகும் இரு உள்ளங்களை சுமந்த பைக் உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது!

~(நம்பிக்கைபாண்டியன்)

Monday, September 17, 2007

முதல்நண்பன்(கடவுள்)
தவறிழைக்க
மனம் முயன்று
மறந்து சென்றேன் உன்னை!

தடை கொடுத்து
வழி மாற்றி
சீர் செய்தாய் என்னை!

உன்னால்
மன்னிக்கப்பட்டவன் நான்!
என்னால்
மறக்கமுடியாதவன் நீ!

~நம்பிக்கைபாண்டியன்

Sunday, August 05, 2007

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!




ந‌ம்நட்பு!

அர்த்தமின்றி சிரிக்கும்
காதலை தவிர்த்து,

ஆதாயம்தேடி சிரிக்கும்
சொந்தங்களை தவிர்த்து,

உள்ளத்திலிருந்து வரும்
உண்மையான சிரிப்பில்
இருக்கிறது நம் நட்பு!


~நம்பிக்கை பாண்டியன்

Monday, July 30, 2007

காதல் நிலை!

அழகின் ஆர்வ‌த்தில்
புரியாத வேகத்தில்
பக்குவமின்றி
பரிமாறிக்கொண்ட‌
அவசரக் காதல்கள்!
மழைக் காலத்துக்
காளான்களாக‌
எளிதில் அழிந்து
மறைகின்றன!

சூழ்நிலை உணர்ந்து
பேசிப் புரிந்து
பொறுமையாக வளர்ந்த
சீரான காதல்கள்!
மலைப் பிரதேசத்து‌
மரங்களாக‌,
உறுதியாய் உயர்ந்து
நிலைக்கின்றன!

~நம்பிக்கைபாண்டிய‌ன



பட்டிமன்ற மடல் உரை!


கூகுள் தளத்தின் அன்புடன் குழுமத்தில்(groups)
"""காதல் குளத்தில் கல்லெறிவது "ஆண்களே"! "பெண்களே!"""" என்ற தலைப்பில் இரு அணிகளாக பட்டிமன்றம் நடந்தபோது, "பெண்களே!" என்ற அணியின் சார்பாக நான் எழுதி அனுப்பிய மடல் உரை!

காதல் குளத்தில் கல்லெறிவது பெண்களே!

அழகான த‌லைப்பில் இந்த‌ப‌ட்டிம‌ன்ற‌த்தை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்திவ‌ரும் அன்புட‌ன் குழுநிர்வாக‌த்திற்கும், ஆர்வ‌மாக‌ ப‌டித்து ர‌சித்துக்கொண்டிருக்கும் குழுந‌ண்ப‌ர்களுக்கும்,காத‌ல் குளத்தையெல்லாம் தாண்டி, காதல் க‌ட‌லில் மூழ்கி முத்தெடுத்து க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்கும்ம் ந‌டுவ‌ர் அவர்களுக்கும்! இன்னும் த‌லைப்பிற்கு அர்த்த‌மே புரியாம‌ல் பேசிகொண்டிருக்கும் எதிர‌ணி ந‌ண்பர்களுக்கும்! அருமையான பல‌க‌ருத்துக்க‌ளை சொல்லி, இன்னும் சொல்ல‌ப்போகும் என‌து அணி ந‌ண்பர்களுக்கும்,என் அன்பு வ‌ண‌க்க‌ங்க‌ள்,
எங்கள் அணியின் சார்பாக‌ ஏற்க‌ன‌வே விரிவாக‌, அருமையாக‌ க‌ருத்துக்க‌ளை ச‌ஞ்ச‌ய்காந்தி அவ‌ர்க‌ளும்! மீரான் அவ‌ர்க‌ளும் சொல்லி இருக்கிறார்க‌ள், சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ம‌துமிதா அவ‌ர்க‌ள் சொல்லி இருகிறார்க‌ள்! எதிர‌ணியின‌ர் அணியின் பலத்தை உயர்த்த என்னென்னமோ சொல்லித்தான் பார்த்தாங்க‌‌! ஆனால் எதிர் பார்த்த‌ ப‌ல‌ம் இல்லை, ரொம்ப வீக்கா இருக்காங்க‌! எங்க‌ள் அணியின் ப‌ல‌த்தை பார்த்து பாதியிலேயே எஸ்கேப் ஆகிடாதிங்க‌‌! கடை‌சி வ‌ரை இருந்து எங்க‌ள் வெற்றிய‌ பார்த்துட்டு போங்க‌!
ந‌டுவ‌ர் அவர்க‌ளே,இங்கே ந‌ம‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் த‌லைப்பு, ச‌ப‌ல‌க்குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

ஈவ் டீசிங் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து யார் என்ப‌த‌ல்ல!

காதல் குளத்தில் கல்லெறிவது யார் என்பதுதான்,

உண்மையான காதலுக்கு மனம் தான் முக்கியபங்கு வகிக்கிறது, அப்படி பார்த்தால் யார் முதலில் மனப்பூர்வமாக காதலிக்கிறார்களோ அவர்கள்தான் காதல் குளத்தில் கல்லெறிவதாக அர்த்தம்!இதை எதிர‌ணியிண‌ர் இன்னும் புரிந்துகொள்ள‌வில்லை! ஆண்க‌ள் தான் அதிக‌ம் சைட் அடிக்கிறார்க‌ள், ஆண்தான் பெண்ணின் பின்னால் அலைகிறான், ஆண்தான் பெண்னுக்காக‌ அங்கும் இங்கும் சுற்றுகிறான் என்றெல்லாம் சொல்கிறார்க‌ள்! இதெல்லாம் காத‌லாகி விடுமா??

காத‌ல் என்ப‌து ம‌ன‌தை அடிப்படையாக‌ கொண்ட‌ விச‌ய‌ம், ஆண் பெண்ணின் பின்னால் சுற்றும் போதும் அவ‌ள் ம‌ன‌தில் இட‌ம்பிடிப்ப‌த‌ற்காக, ப‌ல‌ பொய்க‌ளும்,சாக‌ச‌ முய‌ற்சிக‌ளும் செய்யும்போதெல்லாம் அவ‌ன் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ காதலை உண்ர்வ‌தில்லை!இது மனித இயல்பிற்க்கே உரிய பாலின ஈர்ப்பு,அதனால்தான் ஆண்கள் நிறையபேரை காதலித்துக்கொண்டிருகிறார்கள் !உண்மை காதலை உணரும் முன்பே அவளிட‌ம் காத‌லிப்பதாக‌ உள‌றி கொட்டிவிடுகிறான், இவனுடைய‌ செய‌ல்க‌ள் அவள் மனதிற்கு பிடித்து, முன்பே இவனை காதலிக்க ஆரம்பித்திருந்தாலும் தாம‌த‌மாக‌வே பெண் காதலை வெளிப்ப‌டுத்துகிறாள்! அவ‌ள் ம‌ன‌ம்திற‌ந்து த‌ன் காத‌லை சொல்லும்போதுதான் ஒரு ஆண் உண்மையாக‌வே அவ‌ளை காத‌லிக்க‌ ஆர‌ம்பிக்கிறான்! இதை ஒரு க‌விதையாக‌வே சொன்னால்!

பார்வைகளால்
நான் உன்னை
காதலிக்க‌ ஆர‌ம்பித்த‌
நாட்க‌ளை விட‌
ம‌ன‌தால்
நீ என்னை
காத‌லித்த பிறகுதான்
இத‌ய‌த்தால் உண்ர்ந்தேன்
உண்மைக் காத‌லை!


காத‌லுக்கும், விருப்ப‌த்திற்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கிற‌து இதைப் புரிந்துகொண்டால், காத‌ல் குள‌த்தில் க‌ல்லெறிவ‌து பெண்கள்தான் என்ப‌து புரியும்!

காத‌லை 4 நிலைக‌ளாக‌ பிரிக்க‌லாம்! என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து! அதில் மூன்றை ம‌ட்டும் இங்கு சொல்லுகிறேன்!

1) விருப்ப‌ம்!(ஈர்ப்பு)

நாம் ஒவ்வொருவ‌ருமே வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைக‌ளில் வெவ்வேறுவித‌மான‌ ம‌னித‌ர்க‌ளை ச‌ந்திக்கிறோம், அப்ப‌டி ச‌ந்திப்ப‌வ‌ர்க‌ளில் சில‌ர் ம‌ட்டும் ந‌ம்ம‌ன‌தில் ஏதேனும் ஒருவகையில் ஒரு தாக்க‌த்தை ம‌ன‌தில் ஏற்ப‌டுத்திவிட்டுசெல்வதால் அவர்களை!நமக்கு பிடிக்கும்!
சில‌ரை அழ‌கால் பிடிக்கும், சில‌ரை அறிவுத்திறமையால் பிடிக்கும், சில‌ரை ந‌ல்ல‌ குண‌ங்க‌ளால் பிடிக்கும்! சில‌ரை சூழ்நிலைக்கேற்றார்ப்போல் பேசும் க‌ல‌க‌ல‌ப்பான‌ பேச்சால் பிடிக்கும்! இது ந‌ம் வாழ்வில் நிறைய‌பேரிட‌ம் வ‌ரும்!இது காத‌ல் அல்ல!இந்த குளத்தில்தான் ஆண்கள் முதலில் கல்லெறிகிறார்கள்!

2) விருப்ப‌த்தின் பிர‌திப‌லிப்பு!

அவ‌ர்க‌ளை ந‌ம‌க்கு பிடிப்ப‌துபோல! நம்மையும் அவர்களுக்கு பிடிக்கும்! ஆனால் இருவ‌ருமே காதலை சொல்லிகொள்ள‌ மாட்டார்க‌ள்! சாத‌ர‌ண‌மாக‌வோ, போலியான‌ ந‌ட்பாக‌வோ பேசிக்கொள்வார்க‌ள்! பார்ப்பார்க‌ள், சிரிப்பார்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ல் ஏதேதோ பேசிகொள்வார்கள்!சூழ்நிலைகள் பொருந்தாது என்றால் கடைசிவரை சொல்லாமலே பிரிந்துவிடுவார்கள்! எனவே இதையும் காத‌ல் என்று சொல்ல‌ முடியாது, ஆனால் காத‌லுக்கு அடிப்ப‌டை நிலை இதுதான்! இங்கே ஆண்பெண் இருவ‌ருமே சம‌மாக‌வே க‌ல்லெறிகிறார்க‌ள்!

3)புரிந்துகொள்ளுத‌ல்

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள், மனம்விட்டு நிறைய பேசிக்கொள்வார்கள், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு பேசி புரிந்துகொள்வார்கள்! ஒருவர் மீது ஒருவர்அதீதமான அன்பும் அக்கைறையும் செலுத்துவார்கள்! எல்லை மீறாமல் நடந்துகொள்வார்கள்! இங்கே காதல் என்பது மனதை மையமாககொண்டிருக்கும்!இங்கேதான் உண்மையான காதல் ஆரம்பிக்கிறது!மனம் என்னும் கல்லை பெண்தான் முதலில் எறிகிறாள்!

எந்த ஒரு காதலிலும் ஒருபெண் என்ன மனநிலையில் இருக்கிறாளோ அதை பொறுத்தே அந்த காதலின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது!காதலர்களுக்குள் மனப்பூர்வமான காதல் என்பது ஒரு பெண்ணில்தான் முதலில் தொடங்குகிறது, வார்த்தைகளால் வேண்டுமானால் ஆண்வெளிப்படுத்தலாம், ஆனால் பெண்கள் பார்வைகளாலும் பேசும்போது மறைமுகமாக சிலவார்த்தைகளாலும் காதலை வெளிப்படுத்துவார்கள்! ஆண் முதலில் சொல்லட்டும் என் எதிர்பார்ப்பார்கள்!சொன்னாலும் உடனே சம்மதிக்க மாட்டார்கள்! (சொன்னால் அவர்கள் இமேஜ் குறைஞ்சுடுமாம், கல்யாணத்துக்கப்புறம் சண்டை வரும்போது "நீங்கதானே என்ன துரத்தி துரத்தி காதலிச்சிங்க!" என்று சொல்லி திட்டுவதற்கும் உதவுமாம்),

சைட் அடிக்கும்போதும், முதல் முதலில் காதலிக்க ஆரம்பிக்கும்போதும் பெண்களின் மாற்றங்களினை கவனித்து பாருங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும்! சமீபத்தில் நான் எழுதிய உளறல் கவிதையின் வரிகளின் இடையே இதை எழுதி இருப்பேன்!

.....................
எல்லோருக்கும் தெரியும்படி
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்‌பாய் இருந்த‌ நீ,
நான் பார்ப்ப‌தை அறிந்ததும்
ப‌ர‌வ‌ச‌மாகி உன்
செய‌ல்க‌ளை மாற்றுகிறாய்!

நான் பா‌ர்க்காத‌போது
மெதுவாக‌ விழிக‌ளை
ந‌க‌ர்த்தி பார்க்கிறாய்
அதை நான் பார்க்கும்போது
மின்ன‌ல்வேக‌மாய் திருப்பி
விழிக‌ளை ம‌றைக்கிறாய்!

ந‌ன்றாக‌ இருக்கும் உடைக‌ளை
ச‌ரி செய்வ‌துபோல் ந‌டிக்கிறாய்!
க‌டிகார‌த்தில் அடிக்க‌டி
ம‌ணிபார்க்கிறாய்!
உன் விர‌ல் ந‌க‌ங்க‌ளை
கடிப்ப‌து போல
பாவ‌னை செய்கிறாய்!

நெற்றியின் முன்னே
இட‌து ப‌க்க‌த்தில்
சுருண்ட‌ முடிக‌ளை
அழ‌காக‌ வ‌ல‌து கைக‌ளால்
பின்னால் இழுத்து விடுகிறாய்!
கழுத்தில் இருக்கும்
மெல்லிய சங்கிலியை
அவ்வப்போது கைகளால்
பிடித்து உருட்டி பார்க்கிறாய்!

உன் தோழியுடன்
பேசிகொண்டே
க‌ண்க‌ளை ம‌ல‌ர‌விட்டு
ப‌ற்க‌ள் தெரியும்ப‌டி
பேசும் வார்தைகளுக்கு
சிறிதும் ச‌ம்ப‌ந்த‌மின்றி
அழ‌காக‌ சிரிக்கிறாய்!
ப‌ள‌ப‌ள‌ப்பு குறையாம‌ல்
உன் உத‌டுக‌ளை அவ்வ‌ப்போது
சுழித்து ஈர‌ப்ப‌டுத்துகிறாய்!

பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........
....................>


காத‌லித்து கொண்டிருக்கும்போது பெண்களின் பேச்சை க‌வ‌னித்துபாருங்க‌ள், ஆண்க‌ள் கேட்கும் பெரிய‌ கேள்விக‌ளுக்கு சுருக்க‌மாக‌ தெளிவாக‌ ப‌தில் சொல்லிவிடுவார்க‌ள்! ஆனால் அவ‌ர்க‌ள் கேட்கும் சிறிய‌ கேள்விக‌ளுக்கு கூட‌ ஆண்க‌ள் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் சொல்லவேண்டிய‌திருக்கும்!அவ‌ள் ம‌ன‌தில் உயர்ந்த‌இட‌ம் பிடிக்க‌ ஆண், புகழ்ந்தும்,பாரட்டியும் கெஞ்சியும், கொஞ்சியும் ஏதேதோ முய‌ற்சிகள் செய்துகொண்டிருப்பான்! ஆனால் பெண்க‌ளோ சில‌ பார்வைக‌ளாலும் சில‌ வார்த்தைகளாளும் அவ‌ன் ம‌ன‌தில் மிக‌ உய‌ர்ந்த் இட‌த்தை பிடித்துவிடுவார்க‌ள்!

காதலில் பொறுப்புணர்ச்சியும் பெண்களுக்கே அதிகம் இருக்கிறது! ஆண் நிகழ்காலத்தைப்பற்றியே அதிகம் பேசுவான், பெண்தான் காதலில் எதிர்காலத்தைபற்றி யோசிப்பாள்!காதலிக்கும்போது நிறைய பேசவேண்டும், நிறைய அன்பு செலுத்தவேண்டும், நிறைய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெண்களின் ஆர்வமும் வேகமும்தான் அதிகமாக இருக்கும்!

பெண்களின் காதல் உணர்வை கண்ணதாசன் இரண்டே வரிகளில் அருமையாக சொல்லி இருப்பார்!
""ஆணை விட பெண்ணுக்கு ஐந்து மடங்கு ஆசைகள் அதிகம்! ஆனால் பத்து மடங்கு அடக்கம் அதிகம்!""

நன்றாக காதலித்துவிட்டு பிரச்சனைகள் வரும்போது , காதலை உதறிவிட்டு காதல் தோல்விக்கும் பெண்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்,காதலில் கடைசிவரை உறுதியாக இருந்து காதலின் வெற்றியிலும் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்!

இதை எல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் காதலில் எந்த ஒரு நிலையிலும் பெண்தான் சிறந்தவளாக இருக்கிறாள்! சிலபெண்கள் கல்லுடன் சேர்த்து குப்பைகளையும் எறிந்து காதல் குளத்து நீரை பயன‌ற்றதாக்குகிறார்கள், பல பெண்கள் கல்லுடன் சேர்த்து கற்கண்டையும் எறிந்து காதல் குளத்தின் நீரின் சுவையை கூட்டுகிறார்கள்! எனவே காதல் குளத்தில் ஆண்கள் எறிவெதெல்லாம் கல் அல்ல! வெறும் மண்!அவைகள் காதலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதையும் ஏற்படுத்துவதில்லை! பெண்கள் எறிவதுதான் உண்மையான கல்!அவைகள்தான் அலை அலையாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன!

நடுவர் அவர்க்ளே,மனதை மையமாக கொண்ட ""உண்மையான காத‌ல்குள‌த்தில், உண்மையாக‌வே க‌ல்லெறிவ‌து பெண்களே! பெண்களே! பெண்க‌ளே!"" என்று சொல்லி! கருத்துக்களில் எதிரணியை விட நாங்கள் நிறைந்திருந்தாலும் நபர்களின் எண்ணிக்கையில் அவர்களை விட(10)எங்க‌ள் அணி‌ குறை‌ந்துள்ள‌தால்(8) கடைசி க‌ட்ட‌த்தில் பதில் பேச‌ யாரேணும் இருவ‌ருக்கு கூடு‌த‌ல் வாய்ப்பு கொடுக்கும்ப‌டி கேட்டுகொண்டு," உண்மையான‌காதல் எனும் குளத்தில் கல்லெறிவது பெண்களே!" என்ற தீர்ப்பினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்!

ந‌ண்ப‌ன்
ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

(காதலை
உணர்ந்து எழுதுபவனல்ல !
எழுதி உணர்பவன்!)


Wednesday, June 20, 2007

எனனைச்
சுற்றியிருப்பவர்களுக்காக
மட்டும் பிரார்த்திக்கும்‌
சுயநலம் மிகுந்த எனக்குள்!
காதலை விதைத்து!

உலகெங்குமுள்ள
காதலர்கள் எல்லோரும்
பிரியாமல் வாழ பிரார்த்திக்கும்
பொதுநலத்தை வளர்த்தவள்(ன்) நீ!




எத்தனையோ நாட்கள்
எவ்வளவோ முயற்சித்தாலும்
விழிப்பிற்க்கும்
தூக்கத்திற்குமிடையிலான‌
சந்திப்பு நொடிகளை
உணர முடிவதே இல்லை!
~
nambikaipandian

Wednesday, June 06, 2007

எனக்கு நீ! உனக்கு நான்!

(முத்த‌மிழ் குழுமத்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ சிறுகதை)

குமரன் திருமணகோல‌த்தில் மணமேடையில் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான், மணமகளாக நிற்கும் கோமதியை சுற்றியிருந்த அவளின் நண்பர்கள் கூட்டம்தான் அவன் முகஇறுக்கத்திற்கு காரணம்,கல்லூரி முடித்து வேலைக்கு போய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு சந்தித்ததால் எல்லோரும் ஆவலோடு பேசிக்கொண்டும் சத்தமாக சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்,

சில தோழிகளும் நண்பர்களும் அவள் காதில் ரகசியமாய் ஏதோசொல்ல இவளும் பலமாக சிரித்தாள். நன்கு படித்தவர்களாக இருந்தும் பலர் பார்க்கும் மணமேடையில் சிறிது அமைதி காக்கவேண்டும் என்று தெரியவில்லையே? என்று அவன் மனம் புலம்பிக்கொண்டிருந்தது, அதை அதிகப்படுத்துவது போல அந்த கூட்டத்திலிருந்த ஒருவன் போகும்போது "ஹேப்பி பர்ஸ்ட் நைட்" என்று கேலியாக வாழ்த்திவிட்டு போக அவன் முகம் இன்னும் இறுகியது,

கீழே அமர்ந்த நண்பர்கள் அவளை பார்த்து ஏதோ சொல்லி அங்கிருந்தபடியே கையசைத்து சிரித்துகொண்டிருந்தார்கள்,இறுகிய அவன் முகத்தை புகைப்படம் எடுப்பவர்கள் பலமுறை சிரிக்க சொல்லி வற்புறுத்தியதால் வலிய சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்,இதைப்பற்றி நினைத்துக்கொண்டேயிருந்தால் இருக்கும் சந்தோசம் குறைந்துவிடுமென்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அவளின் கண்களையும், சிரிப்பையும் பேசும்போது மாறும் சின்னசின்ன‌ முக பாவனைகளையும் ரசித்து அவளில் மனம் ஒன்றினான்,

இனியதொரு இல்லற வாழ்க்கை ஆரம்பித்த‌ சில நட்களில் அவளின் வீட்டிற்கு சென்ற‌ போது அவளுடைய கடந்த கால புகைப்படங்களை எடுத்து ,குழந்தைப் பருவத்திலிருந்தது எப்போது, எங்கே, யாருடன் எடுத்தது என்று சொல்லிகொண்டே வந்தாள், அதில் சிறுகுழந்தையாக ஆடையின்றி இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை பார்த்து அவ‌ள் காதில் கும‌ர‌ன் ஏதோ ர‌க‌சிய‌மாய் சொல்ல ந‌றுக்கென்று கிள்ளிவிட்டு அவ‌னை வினோத‌மாய் பார்த்து ர‌சித்து சிரித்தாள் , அவள் க‌ல்லுரிமாணவியாக இருந்த‌ புகை‌ப்ப‌ட‌ங்க‌ளை பார்க்கும்போது க‌ல்லூரியிலும் , சுற்றுலா‌ சென்ற‌ இட‌ங்க‌ளிலும் வ‌குப்பு மாண‌வ‌ர்களுடன் ப‌ல‌ருட‌ன் அர‌ட்டை அடித்த‌ப‌டி நின்றிருந்தாள் ,அவ‌ர்களை ப‌ற்றி சில‌ விச‌ய‌ங்களை எடுத்து சொல்லி தன்சிற‌ந்த ந‌ண்ப‌ர்க‌ள் என அறிமுக‌ம் செய்தாள்‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ ப‌ல புகைப‌ட‌ங்க‌ளில் இவளுடன் நின்றிருந்த‌ன‌ர், தொட‌ர்ந்து பார்க்க‌ ம‌ன‌மின்றி வேகமாக‌ ஆல்பத்தை புர‌ட்டி முடித்தான்,ம‌ன‌ம் குழ‌ப்ப‌த்தில் ஏதேதோ சிந்தித்த‌து, கோவிலுக்கு செல்ல‌ அழைத்த‌தும் அங்கு அவ‌ளுடன் நீண்ட‌ நேர‌ம் பேசிகொண்டிருந்த‌தும் இய‌ல்புக்கு வ‌ந்தான்,

இருவ‌ரும் வேலைக்கு செல்வ‌தால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழ‌மையும் உற‌வின‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் வீட்டுக்கு விருந்துக்கு சென்றன‌ர், இரு மாத‌ங்க‌ள் ஆகிவிட்ட‌து "இந்த‌ வார‌ம் என் தோழி விஜ‌யா வீட்டுக்கு போக‌லாம்ங்க" என்று அழைத்தாள் கோமதி. ஞாயிற்றுக்கிழ‌மை அங்கு சென்றார்க‌ள் மதிய உண‌வாக விதம் விதமாக சமைத்திருந்தார்கள். சாப்பிட்டதும் ‌விஜ‌யாவும் கோமதியும் வரவேற்பு அறையில் அமர்ந்து சிறிது நேர‌ம் இவ‌னிட‌ம் பேசிவிட்டு பிறகு த‌ங்க‌ள் க‌ட‌ந்த‌கால‌ வாழ்க்கையைபற்றி பேச‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.

நீண்ட‌ நாட்க‌ள் ஆன‌‌தால் பல நண்பர்களுடைய ‌ வாழ்க்கை‌ கதைகளை பேசிகொண்டார்கள். த‌ங்க‌ள் ந‌ட்பின் நினைவுக‌ளில் மூழ்கியதால் இவ‌ன் இருப்ப‌தை ம‌ற‌ந்து பேசிகொண்டே இருந்தார்கள். கும‌ர‌னும் அவ‌ர்க‌ளின் பேச்சை க‌வ‌னித்தான் ஒன்றும் புரிய‌வில்லை. உல‌கில் மிக‌க் க‌டின‌மான‌ விச‌ய‌ம் புரியாத ஒன்றை புரிந்த‌துபோல‌ நடித்துக்கொண்டு நீண்ட‌ நேர‌ம் கேட்பது, அத‌ற்கு மேல் நடிக்க‌விருப்ப‌மின்றி டி.வி யை பார்த்தான் எல்ல சேன‌ல்க‌ளிலும் வெறுப்பேற்றும் நாட‌க‌ங்க‌ள்,கேட்டு ச‌லித்த புதிய பாட‌ல்க‌ள், எழுந்து அடுத்த‌ அறைக்குள் அம‌ர்ந்து ஜ‌ன்ன‌லை வெறித்து பார்த்தபடி"நட்புள்ள‌ இர‌ண்டு பெண்க‌ள் சேர்ந்தால் உல‌கில் வான‌த்திற்கு கீழிருக்கும் அத்தனை விச‌ய‌ங்க‌ளைப‌ற்றியும் அள‌வின்றி பேசிக்கொண்டிருக்கிறர்க‌ள்! எல்லா பெண்க‌ளுமே ஏன் இப்ப‌டி இருக்கிறார்கள்?" என்று மனதிற்குள் கேள்வி கேட்டுகொண்டான்,

அவ‌ர்க‌ளின் பேச்சை மீண்டும் க‌வ‌னித்தான் "ஹே உன‌க்கு க‌ல்யாண‌ம்னு தெரிஞ்ச‌வுட‌னே ந‌ம்ம‌ செந்தில் ரொம்ப‌ சோக‌ம் ஆகிட்டான்டி" என்றாள் விஜ‌யா,"அதுக்கு நான் என்ன‌டி செய்ய‌ முடியும்,வேற‌ எதாவ‌து பேசு" என்று சொல்லி பேச்சை மாற்றினாள் கோம‌தி,

கும‌ர‌ன் ம‌ன‌தில் புதிதாய் ஒரு ச‌ந்தேக‌ம‌ர‌ம் தோன்றியது ,மனம் இருப்பு கொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வெளியே இருந்த‌ பெட்டி க‌டைக்குள் நுழைந்து சிக‌ரெட் ஒன்றை வாங்கி ப‌ற்ற‌வைத்தான். யார் அவன்? எத‌ற்காக‌ அவன் சோகமாக‌ வேண்டும்,?ஒருவேளை இவ‌ளை காத‌லித்திருப்பானோ, இருக்க‌லாம், இவ‌ளின் அறிவுத்திற‌மைக்கும் ந‌ல்ல‌ குண‌த்திற்கும் நிறைய பேர் இவ‌ளை காத‌‌லித்திருக்க‌லாம். அது இய‌ல்புதான், ஆனால் அதில் யாரையாவ‌து இவ‌ள் காத‌லித்திருப்பாளா? என்று ம‌ன‌தில் இருந்த‌ ச‌ந்தேக‌ ம‌ர‌ம் புதிதுபுதிதாக‌ கிளைவிட்ட‌து,அவ‌ளிட‌மே கேட்டுவிட‌லமா, என‌ யோசித்தான்.
"ச்சீ வேண்டாம்" பிற‌கு என்னை ப‌ற்றி என்ன‌ நினைப்பாள். அப்படி எதுவும் இல்லாவிட்டால் அத‌ற்கு பிற‌கு நா‌ன் சாத‌ரணமாக‌‌ பேசுவ‌துகூட‌ அவ‌ளுக்கு சந்தேக‌மாக‌த்தானே தெரியும், பிற‌கு பிரச்ச‌னைக‌ள் வ‌ள‌ர்ந்துகொண்டே போகும்,இப்போது வேண்டாம் நேர‌ம் வ‌ரும்போது கேட்க‌லாம் என் நினைத்து அன்று மாலை வீடுவந்து சேர்ந்த‌ர்க‌ள், அந்த‌ வார‌ம் முழுவ‌தும் அவளிடம் குழப்ப‌ ம‌ன‌துட‌னே நெருங்கினான், "என்ன‌ ஆச்சு உங்க‌ளுக்கு ஒரு மாதிரியாவே இருக்கீங்க" என்று கேட்ட‌வ‌ளுக்கு ஒன்றுமில்லை என்று பொய்யான‌ ப‌தில் சொன்னான்,

அடுத்த‌‌ ஞாயிற்றுகிழ‌மை "என்னுடன் ப‌டித்து என்னுட‌னே வேலை பார்க்கும் நீண்ட‌ வ‌ருட‌ ந‌ண்ப‌ன் விட்டிற்கு போக‌லாம்" என்று அழைத்துசென்றான்.

அன்று இர‌வு வீடு திரும்பிய‌தும் எதுவும் பேசாம‌ல் அமைதியாக படுக்கையில் சென்று ப‌டுத்துகொண்டாள்‌ ‌, ப‌ல‌முறை அழைத்து பார்த்தான் ப‌தில் வ‌ர‌வில்லை , அருகில் சென்று முக‌த்தை திருப்பி பார்த்தான், க‌ண்ணீர் வ‌ழிந்திருந்தது.
"என்ன‌ ஆச்சு மதி, ஏன் இப்ப‌ அழுகிற‌" என்றான் , அவளிடமிருந்து ப‌தில் வ‌ர‌வில்லை,அவள் அருகிலேயே அமர்ந்தான், மெதுவான குரலில் பேச ஆரம்பித்தாள் "உங்க ப்ரண்டு வீட்டுல நான் ஒருத்தி இருக்கிற‌தையே ம‌ற‌ந்துட்டு அவ‌ர்கிட்ட‌யே பேசிட்டு இருக்கீங்க‌ என‌க்கு அப்போ எவ்வ‌ள‌வு கோப‌ம் தெரியுமா? நீங்க ரெண்டுபேரும் பேசுறப்போ, உங்க‌ ப்ர‌ண்டு "அவ‌ள‌ பார்த்தேண்டா ஆளே மாறிட்டா, பார்த்தும் பார்க்காத‌து மாதிரி போய்ட்டா, ந‌ல்ல‌வேளைடா ம‌ச்சான் நீ த‌ப்பிச்சுட்ட‌ இல்ல‌ட்டி ரொம்ப‌ க‌ஸ்ட‌ப்பட்டிருப்படா"னு சொன்ன‌து காதில் விழுந்துச்சு.
"அவள் யாரா இருக்கும்! உங்க வீட்டுல அன்னிக்கு ஆல்ப‌ம் பார்க்குற‌ப்போ உங்க‌கூட நிறைய‌ போட்டோவில‌ ப‌க்க‌த்தில் நின்னுருந்தாளே அது அவளா இருக்குமோ? ,
"ந‌ம்ம‌ க‌ல்யாண‌மேடைல‌ உங்க‌ள‌ சுற்றி நிறைய‌ பொண்ணுங்க‌‌ அரட்டை அடிச்சு கிண்ட‌ல் பண்ணிட்டு இருந்தாங்க‌ளே அதுல‌ ஒருத்தியா இருக்குமோனு ம‌ன‌சுல‌ புதுசு புதுசா குழ‌ப்ப‌ம் வ‌ருதுங்க‌!
நமக்‌குள்ள‌ பிரச்ச‌னை எதுவும் வ‌ந்துருமோனு ப‌யமா இருக்கு!"என்று அழுதுகொண்டே நகர்ந்து அவ‌ன் ம‌டியில் ப‌டுத்துக்கொண்டாள்.

கும‌ர‌னுக்கு என்ன‌ சொல்வ‌தென்றே புரியாமல் யோசித்தான், இதே போல‌தானே நாமும் அவளை த‌வ‌றாக‌ நினைத்தோம்,அவளை பற்றி மட்டுமே யோசித்துகொண்டிருந்த நான் என் நிலையை எப்படி மறந்தேன்,இதே போல் அவளிடமும் நானும் கேள்வி கேட்கலாம், ஆனால் அது சந்தோசத்திற்கு உதவாது,பிர‌ச்சனையை பெரிதாக்கும்,

ஒவ்வொருவருமே தன் வழ்க்கைதுணையின் மனதில் தான் மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும், தனக்கு மட்டுமே சொந்தமாக‌ இருக்க வேண்டும் என்று நினைகிறார்கள், அதற்கு மாறாக ஏதாவது தெரிய வரும்போது அங்கே பிரச்சனைகள் வளர்கிறது,அதை த‌விர்த்துவிட்டால் சந்தோச‌ம் பெருகிவிடும்! என்று புரிந்த‌தும், அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை பிடித்து தூக்கி "நீ பயப்படுற‌ மாதிரிலாம் எதுவும் ந‌ட‌க்காது வீணா மனச குழப்பிக்காதே மதி," அது ஒரு சாத‌ர‌ண‌ விச‌ய‌ம் ,இன்னொருநாள் புரியுற‌ம‌திரி சொல்லுறேன். இப்போ நினைச்சா சிரிப்புதான் வ‌ருது, சொன்னா‌ நீயும் சிரிப்ப! ஒருவிச‌ய‌ம் ந‌ல்ல‌ யோசிச்சு பாரு, வாழ்க்கைல‌ எவ்வ‌ள‌வோ பேரை பார்க்குறோம் அதில‌ ய‌ராவ‌து ஏதா‌வ‌து ஒரு கார‌ணத்தால‌ ந‌ம‌க்கு பிடிக்கும், அது ஒரு ச‌தார‌ண‌ ஈர்ப்பு, உன‌க்கும் கூட‌ இருந்திருக்கலாம், அது முடிஞ்சு போன‌ விச‌ய‌ம் ,

இப்போ ந‌ம்ம‌ புது வாழ்கையை ஆர‌ம்பிச்சு இருக்கோம், என் மன‌சுல இனி என்னைக்கும் நீ மட்டும்தான் உன் ம‌ன‌சுல நான் ம‌ட்டும்தான்! இதுல‌ எந்த‌ மாற்ற‌மும் இல்ல! ந‌ம‌க்குள்ள‌ இந்த‌ விச‌ய‌த்தில இனி எந்த‌பிர‌ச்ச‌னையும் வ‌ர‌க்கூடாது.ம‌ற்ற விச‌ய‌ங்க‌ளில் சின்ன‌ சின்ன‌ பிர‌ச்சனைகள் வரலாம், ஆனால் அதை எல்லாம் நான் சரிபண்ணிடுவேன் ம‌தி" என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்தான் .

அவளும் ம‌ன‌ம் மாறி சந்தோசமாய் அவன் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டு "எப்ப‌டி சரிப‌ண்ணுவிங்க" என்று ஆர்வ‌மாய் கேட்டாள், "இப்ப‌டித்தான்" என்று சொல்லி உற்ச‌க‌மாய் அவ‌ளை அணைத்துகொண்டான்.


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

சுதந்திரத்தை உணர்வோம்

நினைத்ததும்
கிடைத்துவிடவில்லை
சுதந்திரம்!
எத்தனை பேரின்
காயங்கள்!
எவ்வளவு பேரின்
கண்ணீர்கள்!

அளவில்லாத கொடுமைகள்!
அர்த்தமிள்ளாத
அடக்கு முறைகள்!
அத்தனையும் மாற!
அன்று!
சுயநலம் எதுவுமின்றி
பலர் ரத்தம் சிந்தியதால்தான்
இன்று
அடிமைபயம் சிறிதுமின்றி!
சுதந்திரமாய் வாழ்கிறோம்!

இன்று நாம்!
சுதந்திர காற்றை சுவாசிக்க!
அன்று அவர்கள்
சுவாசத்தை இழந்து
தன் உயிருக்கும்! நமக்கும்
சுதந்திரம் அளித்தார்கள்!

நம்மை
அடிமைப்படுத்தியவர்களின்!
ஆங்கிலப் புத்தாண்டையும்!
காயப்படுத்தியவர்களின்
காதலர் தினத்தையும்!
கொண்டாடுவதில் இருக்கும்
ஆர்வத்தில் பாதி கூட!
சுதந்திர தினத்திற்க்கு இருப்பதில்லை!

ஒருபுறம்
வளர்ச்சிப்பாதையில்!
மறுபுறம் அழிவுப்பாதையில்!
இலக்கில்லாத பாதையில்
பலரது வாழ்க்கைப் பயணம்!
இதற்காகவா பெற்றோம் சுதந்திரம்!

தீமைகளின்
சுதந்திரத்தைஅழித்துவிட்டு!
இனி நன்மைகளுக்கு
அடிமையாவோம்!
சுதந்திரத்தின்
அருமை உணர்வோம்!
~நம்பிக்கை பாண்டியன்
என்னை சுற்றி
(தவறான சூழ்நிலைகளை தவிர்த்தால், தவறுகளை தவிர்க்கலாம்!)

நம்மை சுற்றி இருக்கும் சில மனிதர்களின் தவறான செயல்களின் விளைவுகளை சிந்தித்து பார்த்தால் நம் சொந்த அனுபவமின்றியே சில பாடங்களை கற்றுகொள்ளலாம்! என்னுடைய நண்பன் ஒருவனின் அண்னனுடைய திருமணவிழா!பொதுவாகவே சிறந்த நண்பர்களின் வீட்டுத்திருமணவிழா என்றால் முதல் நாள் இரவே சென்று நண்பனுக்காக திருமணவீட்டில் சிறு சிறு உதவிகள் செய்வது, அரிதாகவே சந்திக்கும் பல நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே இரவு முழுவதும் ஊர்சுற்றி திருமணவாழ்த்து போஸ்டர் ஒட்டுவது,பிறகு பெரிய அரட்டை கச்சேரிநடத்துவது வழக்கம் !ஒரு குழுவினருக்கு கூடுதலாக "உற்சாகமான கவனிப்பு" கச்சேரியும் நடப்பதுண்டு ,இப்போதெல்லாம் நண்பர்களின் திருமண வீடுகளில் இரவு தாமதமாக சென்றால் உண்பதற்கு உணவை பார்க்க முடிகிறதோஇல்லையோ!உற்சாகமான "கவனிப்பை" பார்க்க முடியும்!

மது அருந்துவதை, தவறு என்றும், அடிகடி குடித்தால்தான் தவறு, அவ்வப்போது அருந்தினால் தவறில்லை என்றும், அளவாக குடித்தால் தவறில்லை என்றும் எவ்வளவு குடித்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தால் தவறில்லை என்றும்! எவ்வளவு ஆர்ப்பாட்டாமானலும் வெளியில் செய்யாமல் விட்டிற்குள் செய்தால் தவறில்லை என்றும்!ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நினைக்கிறார்கள், பாதிப்புகள் வரும்போதுதான் அதை தவறு என்று உணருகிறார்கள். அந்த நண்பனும், நண்பர்களில், உறவினர்களில், சிலரின் பிடிவாதமான அன்புக்கட்டளைகளால் ஒரு அட்டைபெட்டி நிறைய பாட்டில்களுடன் ஏற்பாடு செய்திருந்தான்!

அன்று இரவு அவனுடைய சொந்த மாமா ஒருவரை பார்த்து!"" மாமா, இன்னிக்கு ஒருநாளைக்கு ஒழுங்கா இருங்க மாமா அசிங்கபடுத்திடாதிங்க" என்று கெஞ்சி சொல்லிவிட்டு வந்தான்! என்னவென்று விசாரித்ததில் "அவர் சிறந்த"குடிமகன்" என்றும்!இது போன்ற விழா வைபவ சூழ்நிலைகளில் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியாதென்றும்! மது அருந்திவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் கூட பரவாயில்லை! அளவில்லாத ஆர்ப்பாட்டம் செய்வார் என்றும்! இன்று ஒரு நாள் அவர் குடிக்காமல்இருப்பது நல்லது, இல்லாவிட்டால் வந்திருக்கும் உறவினர்களுக்குள் ஏதாவதுசண்டையை ஏற்படுத்திவிடுவார்! அதனால்தான் அவ்வாறு கேட்டுகொண்டதாகவும் தெரிவித்தான்.

நாங்கள் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டோம்! எங்கள் நண்பர்களிலும் சிலர் தங்கள் கடமைகளை சரியாக மு(கு)டித்துவிட்டு வர எல்லோரும் திருமண மண்டபத்தின் மாடியில் சுற்றி அமர்ந்து பேசி சிரித்துகொண்டிருந்தோம்! திடீரென கீழே ஒரே கூச்சலும்,கலவரமுமாக இருந்து! என்னவென்று ஓடிச்சென்று பார்த்தால்! அங்கே நண்பனின் மாமா முழுபோதையில், பேச்சின் வேகத்தில் நான்கு மனிதர்களுக்கு சமமாகவும்! நிதானத்தில் அரை மனிதனாகவும் நின்றிருந்தார்! அவருடன் உறவினர்கள் சில வாக்குவாதத்தில் இருந்தனர்,அந்த சண்டையில் அவர் பழைய குடும்ப சண்டைகளை எல்லம் சொல்லி விளக்கம் கேட்க! ஒருவருக்கொருவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்த பலர் தடுத்தும் இரு தரப்பிலும் சமாதானமாகவில்லை!சண்டை வளர்ந்துகொண்டே போனது,திருமணவீடு மெல்ல மெல்ல பெரிய சண்டைக்களமாக மாறிக்கொண்டிருந்த்து.

"மது உள்ளே போனால் மதி வெளியே போய்விடுகிறது" என்ற கண்ணதாசனின் அனுபவ வரிகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அவர்கள் இருந்தார்கள்! இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் மாம்ஸ் தான்!
என் நண்பன் நண்பர்கள் சிலரிடமும் , உறவினர்கள் சிலரிடம் கண்சாடை காண்பித்து காரை காண்பித்தான்! உடனே சிலர் சேர்ந்து! மாமாவை ஒரே அச்சாக தூக்கி, அவர் திமிறிக்கொண்டு வர! விடாமல் அமுக்கி டாடாசுமோ காருக்குள் தூக்கிவைத்து அழுத்தி பிடித்துகொண்டு! ஒருவீட்டிற்கு இழுத்துச்சென்று வீட்்டிற்குள் அடைத்து, சற்று நிதானத்தில் இருந்த அவருடைய நண்பர் ஒருவரை உடன் இருக்கவைத்து விட்டு திரும்பினோம்!இன்னொரு தரப்பினை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது, மறுநாள் தாமதமாகவே சென்று போதை தெளிந்த பிறகு அவர்களை எழுப்பி, கிளப்பி கூட்டி வர! நண்பனிடம்" மாப்ள மன்னிச்சுக்கடா மாப்ள!நானும் குடிக்க கூடாதுனாதான்டா நினைச்சேன் , சொந்தகார பயலுக எல்லம் சேர்ந்து கூப்பிடவும் பழக்கதோசத்து ஆசைல போய்ட்டேன்! சரி அதிகம் குடிக்காம அளவா! குடிச்சுட்டு நிதனாம இருக்கலாம்னு தான் நினச்சேன், ஆனால் அங்கே போய் அப்படி இருக்க முடியல! மனசு மாறிடுச்சு!அவனுகளோட சேர்ந்து நானும் மாறிட்டேன்!" போதைல இருந்ததாலதான் மாப்ள அப்படி நடந்துகிட்டேன்! இல்லாட்டி அப்படி செய்வேனா!?"" என்றெல்லாம் ஏதேதோ சொல்லி மன்னிப்பு கேட்டுகொண்டிருந்தார்!

பலர் மத்தியில் அவரின் மதிப்பும் மரியாதையும் குறைந்ததுதான் மிச்சம்!தவறான சூழ்நிலைகளில் அவர் கொஞ்சம் யோசித்திருந்தால் இதுபோல அவமரியாதைகளைலிருந்து தப்பித்திருக்கலாம் மனம் அடிமையானதால் முடியவில்லை! பொதுவாக எந்த ஒரு தவறையும் திருத்திக்கொள்ள நினைப்பவர்கள், தவறான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு தவறுகளை தவிர்ப்பது கடினம்! ஆனால் அதற்குபதிலாக தவறான சூழ்நிலைகளையே தவித்துவிடுவது சுலபம்!

~~நம்பிக்கை பாண்டியன்

Wednesday, April 25, 2007



அழகிய பொய்கள்!

"புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!

மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!

வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!

எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!

பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!

ரயிலேற்றிய
தண்டவாள‌க்காசு காந்த‌மாகும்!

பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!

இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!

க‌ட‌வுள் குளிப்ப‌தால்தான்
ம‌ழை பெய்கிற‌து

பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!

சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!

கொடிக்காய் பழவிதைகளை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!

கோவில் சுவற்றில்
தேர்வு எண்னை எழுதினால்
கூடுத‌ல் ம‌திப்பெண் கிடைக்கும்!

திரைப்ப‌ட‌த்தில் வாக‌ன‌ங்க‌ள்
வேக‌மாக‌ செல்லும் காட்சிக‌ளுக்கு
ப‌ட‌ச்சுருளை வேக‌மாக‌ சுற்றுவார்கள்!

விமான‌த்தில் செல்ப‌வ‌ர்க‌ள்
எல்லோரும் வெள்ளைகார‌ர்கள்!

இர‌ண்டாயிர‌மாவ‌து ஆண்டில்
உல‌க‌ம் அழியும்! "என‌

இப்போது நினைத்தாலும்
அழ‌காக‌வே இருக்கின்ற‌ன‌!
குழ‌ந்தை ப‌ருவ‌த்தின்
குற்ற‌மில்லாத‌ பொய்க‌ள்!


~ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்
அழகிய காதல்!

காத‌லியே!
உன் பிற‌ந்த‌நாள‌ன்று
அழ‌கு நிலைய‌த்தில்
உன் முக‌த்தை
அழ‌குப‌டுத்தி வ‌ந்து
நான் அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை!ஆனால்
ப‌ளிச்சென்று இருக்கிறாய்! என்றேன்,

புன்னகையாய் பார்த்துவிட்டு,
புதிய‌ சுரிதார்
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருகிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை ஆனால்
அருமையாக‌ இருக்கிறாய்! என்றேன்,

அமைதியாய் பார்த்துவிட்டு,
பாவாடை தாவணி
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை
ஆனால்அற்புத‌மாக‌ இருக்கிறாய்! என்றேன்,

சலிப்பாய் பார்த்துவிட்டு,
ஜீன்ஸ்,டி.ச‌ர்ட்
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்,
அழ‌காய் இல்லை ஆனால்
க‌வ‌ர்ச்சியாக‌ இருக்கிறாய்! என்றேன்,

முறைத்து பார்த்துவிட்டு,
ப‌ட்டுச்சேலை
உடுத்திவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை ஆனால்
ம‌ங்க‌ள‌க‌ர‌மாக‌ இருக்கிறாய்! என்றேன்,

வெறுப்பாய் பார்த்துவிட்டு,
உடல் முழுவ‌தும்
தங்க‌ஆப‌ர‌ண‌ங்க‌ளை
அணிந்துவ‌ந்து
இப்போது அழ‌காய்
இருக்கிறேனா? என்றாய்
அழ‌காய் இல்லை ஆனால்
அல‌ங்காரமாய் இருக்கிறாய்! என்றேன்,

குழப்பமாய் பார்த்துவிட்டு,
எப்போதுதான்
அழ‌காய் இருப்பேன்
நீயே சொல்லேன்!என்றாய்

அடி என் இனிய‌வளே!
நீ! அன்பும்
அக்க‌றையும் செலுத்தும்
ஒவ்வொரு நிமிட‌மும்
அழ‌குதான‌டி!
அழ‌கு
தோற்ற‌த்திலா இருக்கிற‌து
வாழும்
முறையில்தானே இருக்கிறது!
என்றும்என‌க்கு
நீ பேர‌ழ‌கிதான்!என்ற‌தும்
அழ‌கை ம‌ற‌ந்து
அன்பாய் சிரித்தாய்
இது மிக‌வும் அழ‌கு!!

--நம்பிக்கைபாண்டியன்
கவலைகள் மறப்போம்!

(சில தத்துவங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை,முத்த‌மிழ் குழும‌த்தின் போட்டியில் ஆறுத‌ல் ப‌ரிசு பெற்ற‌ க‌ட்டுரை)

உலகில் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன,இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம், எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவராததற்கு காரணம் கவலைகள் தான். இவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமன கவலைகள், சிலருக்கு பணத்தை பற்றிய கவலைகள்,சிலருக்கு அழகைப்பற்றிய கவலைகள், சிலருக்கு கடந்த காலத்தை பற்றிய கவலைகள் , சிலருக்கு எதிர்காலத்தைபற்றிய கவலைகள் என‌‌் ஒவொருவரின் வாழ்கைக்கும் ஏற்றார்போல் அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது,கவலைபடுவதால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்றால் தாராளமாக கவலைப்படலாம், ஆனால் தீர்வதில்லை,அதற்கு மாறாக கவலைகள் நம்துன்பங்களை வளர்க்கிறது அது நம்வலிமையை அழித்து விடுகிறது, முன்னேற்றப்பாதையில் செல்லும் நம் வேகத்தை குறைத்துவிடுகிறது,நேரத்தை வீணாக்குகிறது, கவலைகளில் இரு முக்கியமான கவலைகள் கடந்தகாலத்தபற்றியதும், எதிர்காலத்தைபற்றியதும்தான்

கடந்த காலத்தை பற்றிய கவலைகள் ,

"எதை நம்மால் மாற்றமுடியாதோ அதை நினைத்து கவலைப்படகூடாது!" மாற்றமுடியாது என ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்படவேண்டும், கடந்த காலம் என்பது கடவுளால் கூட திருப்பிதரமுடியாத ஒன்று, அதில் நாம் எவ்வளவோ சாதித்து இருக்கலாம் , அல்லது தவறுகள் செய்திருக்கலாம் அதனால் நம் வாழ்க்கை முறை எப்படி வேண்டுமானலும் மாறி இருக்காலாம், அதன் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த நினைவுகள் நம் இன்றைய நல்ல முயற்சிகளை தடை செய்வதாக இருக்ககூடாது, இன்னும் சிறப்பாக செயல்பட தேவையான மனப்பக்குவத்தையும் தெளிந்த அறிவையும் தருவதாக இருக்க வேண்டும், சிலர் கடந்த காலத்தில் பெற்ற தோல்விகளை சொல்லி, வாழ்வில் முன்னேற கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோமே என கவலையுடன் இருப்பார்கள்,நம் தோல்விகள்தான் நமக்குஅதிக அறிவைக் கொடுக்கின்றன,வெற்றியை பெற, வெற்றி பெற்றவனுக்கு எதைச் செய்யவேண்டும் என்றுதான் தெரியும், தோல்வியடந்தவனுக்குதான் எதைசெய்யகூடாது என்று தெரியும், எதை செய்யகூடாது என்று தெரிந்தவன் சரியாக செய‌ல்பட்டால் எந்தஒரு முயற்சியில் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம், இழந்த நிமிடங்களை நினைத்து இருக்கும் நிமிடங்களை இழந்துவிடக்கூடாது, இன்னும்சிலரோ, கடந்த காலத்தில் எவ்வளவு நன்றாக இருந்தோம் இப்போது இப்படி துன்பப்படுகிறோமே என்று கடந்தகால சந்தோசங்களை நினைத்து கவலைப்படுவார்கள், மாற்றங்கள் நிறைந்ததுதான் மனிதவாழ்க்கை எதிர்மறைகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்,ஆண்,பெண், நீர் நெருப்பு ,நன்மை ,தீமை ,இருட்டு,வெளிச்சம்,என பல வகையான எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றுமட்டும் நிறைந்த வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள் அர்த்தமில்லததாக் இருக்கும், எனவே துன்பமும் இன்பபமும் இயல்பாகவே இருப்பது,அது மாறிக்கொண்டே இருக்கும். இலட்சியத்தை நோக்கிபயணம் செல்லும் சாலைகள் சமதளமாக இருக்கவேன்டும் என்று நினைத்தால் எந்த வெற்றியும் பெறமுடியாது எத்தனைமுறை வேண்டுமானலும் தோல்வி எனும் பள்ளங்களில் கீழே விழலாம்,அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுந்து நடந்தால்தான் வெற்றிபெறமுடியும் ,தேர்வுக்கு படிக்கும் மாணவன் நேற்றைய தேர்வை எப்படி எழுதினோம் என்று நினைத்துகொண்டிருந்தால் இன்றைய தேர்வுக்கு மனம் ஒன்றி படிக்க முடியாது,எனவே கடந்த காலம் என்பது முடிந்துபோன நினைவுகள், அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்சரி அதன் நினைவுகளை பாரமாக சுமக்காமல் அவை கற்று கொடுத்த அறிவை மட்டும் பாடமாக கொண்டு நிகழகாலத்திற்கும் வந்துவிடுவோம்,

எதிர்காலத்தைபற்றிய கவலைகள்:

"எதை நம்மால் மாற்றமுடியுமோ அதை நினைத்தும் கவலைப்படக்கூடாது!" மாற்றமுடியும் என்று ஆகிவிட்டதே பிறகு ஏன் வீணாக கவலைப்பட்டு நேரத்தை விணடிக்க வேண்டும், மற்றுவதற்கு தேவையான முயற்சிகளை ஆரம்பிக்கவும், ஒவ்வொருவர் மனதிலும் நம் எதிர்காலம் இப்படி இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கும்,ஆனால் அது நனவாகுமா என்ற பயம் நிறைந்த கவலைகள் இருக்கும், ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும்போதே இதில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் வரக்கூடாது! துன்பங்களால் வரும் வேத்னையை விட துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் தெரும் வேதனை கொடுமையானது!எதயும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்! "இந்த உலகில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீ மனம் தளர்ந்து நிற்கும்போது ஒன்றை மட்டும் மறந்துவிடாதே உன் எதிர்காலத்தை நீ இன்னும் இழக்கவில்லை என்பதுதான் அது!"என்கிறார் ஒரு அறிஞர்.உலகில் உயிருடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்குமே எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது, இப்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே நம் எதிர்காலத்தை மாற்றமுடியும் நம் கடந்தகால செயல்கள் நம் நிகழ்காலத்தில் பெரிய மற்றத்தை தந்திருப்பதுபோல நம் நிகழ்காலச்செயல்களும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும், எதிர்கலத்தைபற்றி கனவுகள் மட்டும் கண்டுகொண்டும் , பயந்து கவலைப்பட்டுக்கொண்டும் இருப்பதால் எதிர்காலம் மாறிவிடாது,நாம் தான் மாற்றவேண்டும், சரியானமுறையில் திட்டமிடவேண்டும், திட்டங்களை முழுமையாக செயலுக்கு கொண்டுவரவேண்டும், கவலைகளையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் ,கண்ணை முடிக்கொண்டு கயிற்றில் நடப்பது எவளவு ஆபத்தானதோ, அது போல கவலைகள் நிறைந்த மனத்துடன் வெற்றிக்கு ஆசைப்படுவதும் அவ்வளவு ஆபத்தானது, இனி நாம் செல்லும் வழியெங்கும் கவலைகளை மறப்போம்,தோல்விகளை தொலைப்போம், வெற்றிப்பாதையில் நிலைப்போம், -- நம்பிக்கைபாண்டியன்

Wednesday, April 11, 2007

புரிதல்

அளவில்லாத
அம்மாவின்
அன்பைப்போல்!

கருணைமிகு
கடவுளின்
அருளைப்போல்!

மனம் நிறைந்த‌
துணையின்
காதலைப்போல்!

எதிர்பார்ப்பில்லாத‌
நண்பனின்
நட்பைபோல்!
அறிவுக்கு புரியாத‌

சில விசயங்கள்,
மனதிற்கு மட்டுமே
புரிகின்றன!

~நம்பிக்கை பாண்டியன்
மன‌சாட்சி

தவறுகளை
சரி! என்று சொல்லி
மேலும் மேலும்
செய்யும் மனமும்!

இதெல்லாம்
ஒரு தவறா?
எனச் சொல்லி
தன் தவறுகளை
நியாயப்படுத்தும்
உதடுகளும்!

நான் மட்டுமா
செய்கிறேன்,
நிறைய பேர்
செய்கிறார்களே! என‌
குற்ற உணர்விலிருந்து
தப்பிக்க
தன‌க்கு தானே
ஆறுதல் தேடும் அறிவும்

க‌ட‌வுளின் முன்
கைகூப்பிய‌ பிரார்த்த‌னையில்
த‌வ‌றுக‌ளுக்காக‌
மன்னிப்பு கேட்க‌
ம‌ற‌ப்ப‌தில்லை!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்
ந‌ட்பு கவிதைகள்

1)
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற‌
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாக தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!

2)
என் வாழ்வின்
வளர்ச்சிக்கு நீயும்!
உன் வாழ்வின்
வளர்ச்சிக்கு நானும்
எடுத்துக் கொண்ட!
முயற்சிகளால்தான்
நம்வாழ்வில் நட்பு‌
உயர்ந்திருக்கிறது நண்பனே!

3)
அங்கும் இங்கும்
தேடித்திரிந்து
ஒருத்தியிடம் மட்டுமே
எதிர்பார்க்கிறேன் காதலை!
செல்லும்
இடமெங்கும்
ஒவ்வொருவரிடமும்
எதிர்பார்க்கிறேன் நட்பை!

~நம்பிக்கைபாண்டியன்

Tuesday, March 27, 2007

என்னை சுற்றி

(சிலநண்பர்கள் சிலபாடங்கள்‍)

ந‌ம் வாழ்வில் எவ்வ‌ள‌வோ ந‌ண்ப‌ர்க‌ளை ச‌ந்திக்கிறோம்,அவர்களை கவனித்து பார்த்தால் ஒவ்வொருவ‌ரிட‌மும் ஒவ்வொரு வித‌மான‌ குண‌ங்க‌ள் காணப்ப‌டுகின்ற‌ன, அதில் ந‌ல்ல‌வை கெட்ட‌வை என‌ எல்லாம் க‌ல‌ந்திருக்கும்,அப்ப‌டி என் ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரிட‌ம் நான் க‌ண்ட‌ ந‌ல்ல‌குண‌ங்களில் சிலவற்றை நானும் பின்ப‌ற்றி இருக்கிறேன்,அதில் ஒன்றை சொல்லுகிறேன்,

க‌ல்லூரி நாட்க‌ளில் பாதி நாட்க‌ள் க‌ல்லூரி முடிவ‌த‌ற்கு முன்பே வேக‌மாக‌ புற‌ப்ப‌ட்டு சைட் அடிப்ப‌த‌ற்காக‌ பேருந்து நிலை‌ய‌த்திற்கு சென்றுவிடுவோம், மீதி நாட்க‌ள் இரவு வ‌ரை க‌ல்லூரியிலேயே இருப்போம், வார‌த்தில் 2 நாள் NCC இருக்கும், ஒரு நாள் NSS இருக்கும் சில‌ நாட்க‌ள் ம‌ற்ற துறைக‌ளுக்கு இடையே கிரிகெட் போட்டி ந‌ட‌த்துவோம், இத‌னால் என் வ‌குப்பு நண்ப‌ர்க‌ளின் விடுதி அறைக்கு அடிக்க‌டி செல்வோம், மாண‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் என்ப‌தால் எங்க‌ள் க‌ல்லூரியில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ள் இருக்காது சுத‌ந்திரமாக‌ இருப்போம், சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் திருட்டுத்த‌ன‌மாக‌ மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வாங்கி வ‌ந்து த‌ருவார்க‌ள், எப்போத‌வ‌து வார்ட‌ன் பார்த்து விட்டால்" சார் NCCல‌ இருக்கோம் சார் ட்ரெஸ் மாத்த‌ வ‌ந்தோம் சார்" என்று ஏதாவ‌து பொய் சொல்லி த‌ப்பித்துவிடுவோம்,விடுதி வாழ்க்கையில் நட்பு மிகமிக‌ ச‌ந்தோச‌மான‌து‌,அர‌ட்டை அடிக்க‌ சேர்ந்துவிட்டால், ஒரே சிரிப்பு ம‌ய‌மாக‌த்தான் இருக்கும், ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் உண்மையான‌ குணங்க‌ளை எளிதில் க‌ண்டுபிடித்துவிட‌லாம்,எங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் குழுவில் எல்லோரும் பெரிய‌ அர‌ட்டை ம‌ன்ன‌ர்க‌ள், என‌வே விடுதியில் எல்லா துறை மாண‌வ‌ர்களிடமும் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ந‌ட்பு இருக்கும்,

ஒருமுறை வரலாற்று துறையை சேர்ந்த‌ மாண‌‌வ‌ன் ஒருவ‌ன் அறையில் சில‌ர் அம‌ர்ந்து பேசிகொண்டிருந்தோம் அப்போது அவ‌ன் க‌டித‌ம் எழுதிக்கொண்டிருந்தான்,விடுதி மாணவர்களுக்கும் கடிதங்களுக்கும் நெருங்கிய ப‌ந்தம் உண்டு,அவர்களின் மனஆறுதலுக்கும் , வீட்டில் அன்பிற்க்கும்,பணதேவைகளுக்கும் கடிதத்தையே அதிகம் சார்ந்திருப்பார்கள், பேசிகொண்டே த‌ற்செய‌லாக‌ அவ‌னை பார்த்தேன் க‌டித‌ம் எழுதிகொண்டிருந்த‌வ‌ன் சட்‌டென்று எழுதுவ‌தை நிறுத்திவிட்டு ச‌ற்று நிமிர்ந்து அம‌ர்ந்து க‌ண்க‌ளை மூடி ஏதோ பிரார்த்த‌னை செய்தான் பிற‌கு மீண்டும் எழுதுவ‌தை தொட‌ர்ந்தான், என‌க்கு அவ‌ன் என்ன‌ பிரார்த்த‌னை செய்தான், யாருக்கு க‌டித‌ம் எழுதினான், என்ன‌ எழுதினான் என்ப‌தை அறிந்துகொள்ளும் ஆர்வ‌ம் தொற்றிகொண்ட‌து,(அடுத்தவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஆர்வம்).

அவ‌ன் ந‌ன்கு ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ன் அத‌னால் த‌ய‌ங்காம‌ல் அவ‌னிட‌ம் கேட்டுவிட்டேன், இன்னும் ஒட்டாம‌ல் வைத்திருந்த‌ க‌டிதத்தை என்னிட‌ம் நீட்டினான்,"டேய் யாருக்கா‌க‌ பிரார்த்தனை செய்தனு தெரிஞ்சுக்க‌ கேட்டேன்டா‌ சொன்னா‌ போதும் " என்று த‌ய‌ங்கினேன், "அட‌ சும்ம‌ ப‌டிடா ம‌ச்சி இது என்ன பெரிய‌ ராணுவ‌ ர‌க‌சியமா" என்று கடித‌‌த்தை என் கையில் திணித்தான் அது அவனுடைய‌ ப‌ள்ளிப‌டிப்போடு ப‌டிப்பை நிறுத்திவிட்டு வேறு ஊரில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் ந‌ண்ப‌ன் ஒருவ‌னுக்கு அனுப்பிய‌ ப‌தில் க‌டித‌ம், அவ‌னுட‌ய‌ வேலை ம‌ற்றும் ப‌ண‌விச‌ய‌ங்க‌ளில் அந்த நண்பனுடைய ‌ க‌ஷ்ட‌ங்க‌ள் தீர‌ பிரார்த்தனை செய்வ‌தாக எழுதி இருந்தான், அப்ப‌டி எழுதும்போது உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்ப‌தை வார்த்தைக‌ளால் ம‌ட்டும் சொல்லாம‌ல் உட‌ன‌டியாக‌ க‌ண்க‌ளை மூடி சில‌ நொடிக‌ள் ம‌ன‌ம்விட்டு உண்மையாக‌வே க‌ட‌வுளிட‌ம் பிரார்த்தனை செய்திருக்கிறான் என்ப‌து அவ‌ன் சொல்லாம‌லேயே என‌க்கு புரிந்த‌து‌, ம‌ன‌ம் நெகிழ்ந்து பெருமையாக‌ அவ‌னை பார்த்தேன்,

பிரார்த்த‌னைக‌ளுக்கும் எண்ண‌‌ங்க‌ளுக்கும் வ‌லிமை உண்டு என்ப‌தால் யாரிட‌மாவ‌து "உங்க‌ளுக்காக‌ நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று வார்த்தைக‌ளாலோ, எழுத்துக்க‌ளாலோ சொல்லும்போது அந்த‌ ந‌ல்ல‌ குண‌த்தை நானும் பின்ப‌ற்றுகிறேன்!"" வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் வெளிப்படுத்தும் நல்லகுணங்களை செயல்களாலும் வெளிப்படுத்துவது நல்லது!!
ஒப்பீடு!

மனிதர்களுடன்!
மனிதர்களை
ஒப்பிட்டுப் பார்த்தால்!
தலைக்கனமும் வரும்!
தாழ்வு மனப்பான்மையும் வரும்!

பிரச்சனைகளை
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் தவறுகள் புரியும்!

வெற்றிகளை!
செயல்களுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்!
நம் நன்மைகள் புரியும்!

வாழ்க்கையை!
சம்பவங்களுடன்

ஒப்பிட்டுப் பார்த்தால்!
வளமுடன் வாழ!
வழிகள் தெரியும்!

~நம்பிக்கைபான்டியன்
நட்பு வேண்டும்!

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்

யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி

இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை

தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை

கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்

காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

~நம்பிக்கைபாண்டியன்

Wednesday, March 21, 2007

நட்பு

காதலுக்காக
காத்துக் கொண்டு
இருப்பதை விட!

நட்புடன்
நடந்துகொண்டு
இருப்பது
நல்லது!
~நம்பிக்கைபாண்டியன்
என்னைசுற்றி

(இனிமையான‌ குழ‌ந்தைப‌ருவ‌ம்)

குழந்தைப் ப‌ருவ‌ம் எல்லோராலும் விரும்ப‌ப்ப‌டும் ப‌ருவ‌ம்,க‌ட‌வுள் க‌ண்முன் தோன்றி என்ன‌ வ‌ர‌ம் என்று கேட்டால் மீண்டும் என்னை குழ‌ந்தையாக்கு என்று கேட்ப‌த‌ற்கு நிறைய மனித‌ர்க‌ள் த‌யாராக‌வே இருக்கிறார்க‌ள்! குழந்தை‌ப்ப‌ருவ‌த்திலும் சிறுவ‌ர்க‌ளாக‌ இருக்கும்போதும் , ஒவ்வொருவ‌ரின் குற்றமில்லாத குறும்புகளும் பேச்சுகளும் நினைக்க நினைக்க அவ்வ‌ள‌வு இனிமையாவை!என் குழந்தை ப‌ருவ‌த்து நிகழ்வுக‌ள் என‌க்கு அதிக‌ம் நினைவில்லை நான் அறிந்த சிலரின் குழ‌ந்தைப‌ருவ நிகழ்வுகள் ந‌ன்கு நினைவில் இருக்கிற‌து!

ஒரு முறை என் சித்த‌ப்பாவின் ஊருக்கு என் வீட்டில் எல்லோரும் சென்றிருந்தோம், நாங்க‌ள் சென்ற மாலைநேர‌த்தில் டீ அருந்துவ‌த‌ற்கு த‌யாரானார்க‌ள்,எங்க‌ளை பார்த‌த்தும் இருந்த‌ குறைந்த அள‌விலான‌ டீ யை எல்லோருக்கும் பாதி பாதியாக ச‌ம‌மாக‌ பிரித்து ஊற்றி அருந்த‌ கொடுத்தார்க‌ள், அப்போது என் சித்த‌ப்பா இளையவன் விக்னேஷ் (அப்போது 5வயது இருக்கும்) ""ம்ம் போங்க!!‌என‌க்கு அர கிளாஸ்லாம் வேணாம் ட‌ம்ள‌ர் நிரையா வேணும்? என்று அட‌ம்பிடித்தான்,திரும்ப கொடுக்க முயன்ற‌ எங்க‌ளையும் சித்தி கொடுக்க‌விடாம‌ல் த‌டுத்து கோபத்துடன் அவனிடம் "போடா நாயே!நிறையா வேணும்னா போய் மிச்ச‌த்துக்கு த‌ண்ணி ஊத்திக்க! நிறைய‌ வ‌ந்துரும்!"" என்று சொல்ல‌ அவ‌னும் உட‌னே எழுந்து டம்ளர் நிறையவருமாறு பானையிலிருந்து த‌ண்ணீரை எடுத்து ஊற்றி ம‌ட‌ ம‌டவென‌ குடித்துவிட்டான், அன்று முழுவ‌தும் அதை நினைத்து நினைத்து சிரித்தோம்!

வைகாசி மாத‌ம் எங்க‌ள் ஊர் திருவிழாவிற்கு அத்தைக‌ள், சித்த‌ப்பா, பெரிய‌ப்பா எல்லோரும் குடும்ப‌மாக பாட்டி வீட்டில்தான் இருப்போம், அன்று இர‌வு முழுவ‌தும் மொட்டை மாடியில் அதிக‌மான‌ அர‌ட்டை அடித்துக்கொண்டேதான் எல்லோரும் சேர்ந்து தூங்குவோம்,தின்பண்டங்கள் நிறைய தருவார்கள், அத்தைகள், ச‌கோதரிகள் எல்லோரும் இருகைகளில் ம‌ருதாணி அரைத்து வைப்பார்கள்,சிறுவர்களாக இருக்கும் எங்களுக்கும் அத்தை பையன்களுக்கும் ஒரு கைக‌ளில் ம‌ட்டும் வைத்துவிடுவார்க‌ள், அன்று நடுஇர‌வு ப‌ல‌ரும் தூங்கிவிட‌ சில‌ர் ம‌ட்டும் தூங்காம‌ல் அரட்டைஅடித்து சிரித்து பேசிகொண்டே இருந்தோம், அப்போது கைக‌ளில் ம‌ருதாணியுட‌ன் தூங்கிக் கொண்டிருந்த‌ அத்தை பைய‌ன் ஒருவ‌ன் தூக்க‌த்திலேயே திடீரென‌ ‌எழுந்தான் கைக‌ளில் இருந்த‌ ம‌ருதாணியை ல‌ப‌க் ல‌ப‌க்கென‌ பிரித்து வாயில்போட்டு முழுங்க‌ ஆர‌ம்பித்துவிட்டான், சிறிது நேரத்திற்குபிறகே பார்த்தோம், உட‌னே த‌டுத்து ,வாயில் இருந்த‌தையும் தோண்டி எடுத்துவிட்டார்க‌ள்,ம‌றுநாள் முழுக்க‌ வ‌யிற்றுப்போக்குட‌ன் இருந்தான்,அவர் இப்போது சிலநேரங்களில் அதிககிண்டலுடன் பேசிகொண்டே இருப்பார், அவரின் பேச்சை நிறுத்த"நிறுத்துங்க மச்சான்!உங்க‌ளை ப‌த்தி எங்க‌ளுக்கு தெரியாதா‌ அரை தூக்க‌த்தில‌ அரைகிலோ ம‌ருதாணிய‌ தின்ண‌ ஆளுதானே நீங்க‌! என்று சொன்ன‌வுட‌ன் சிர்த்துகொண்டே அமைதியாகிவிடுவார்.


சில‌ ஆண்டுக‌ளுக்குமுன்னால் என் நண்ப‌ன் வீட்டிற் சென்றிருந்தேன், அப்போது என் ந‌ண்ப‌னின் ச‌கோத‌ரிக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தை பிற‌ந்திருந்த‌து , நானும் என் ந‌ண்ப‌னும் குழ‌ந்தை அருகே அம‌ர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம், அப்போது முத‌ல் குழ‌ந்தை ஷீலா" ஏம்மா பாப்பாக்கு குட்டி க‌ண்ணா இருக்குல, அது பாக்குற‌ப்போ நாம‌லாம் அதுக்கு பூத‌ம் மாதிரி தெரிவோமா?? என்று கேட்க உட‌னே அக்கா "அய்யோ!! என் பிள்ளைக்கு அறிவ‌ பாருங்க‌டா‌ நீங்க‌ளும்தான் இருக்கீங்க!! என்று சொல்லி குழ‌ந்தையை அணைத்துக்கொண்டார்க‌ள்! அந்தக்‌ குழந்தை சிந்தனையான ‌கேள்வியை கேட்ட‌தும் நாங்க‌ள் சிறுவ‌ய‌தில்! "டேய் எரும்பு க‌ண்ணுக்கு நாம எல்லாரும் அர‌க்க‌ன்டா! ந‌ம்ம தெரு சாக்க‌டைதான் அதுக்கு க‌ட‌ல், இந்த‌க் க‌ல்லு எல்லாமே அதுக்கு இம‌ய‌மலைடா!" என்று சொல்லி விளையாடிய‌து நினைவுக்கு வ‌ந்து சென்ற‌து!

என் மாமா வீட்டில் ந‌ட‌ந்தது, ஒரு நாள் என் மாமா ம‌க‌ன் மூத்த‌வ‌ர் ச‌ர‌வ‌ண‌ன் ஆறு வ‌ய‌தில் முதல் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அருகே உள்ள ப‌ள்ளிக்கு சென்று மழையால் தாம‌தாமாக‌ வீடு திரும்பியிருக்கிறார்! அத்தை "ஏன்டா!கண்ணு இவ்வ‌ள‌வு நேர‌ம் க‌ழிச்சு வ‌ர‌! என்று கேட்க‌, அத‌ற்கு!" ம‌ழ‌ பேஞ்சுச்சுமா! அதான் கொஞ்சங் கொஞ்ச‌மா வ‌ந்தேன்!என்று சொல்ல‌, அத்தை முதலில் புரியாம‌ல் ,யோசித்த‌ பிற‌கு ம‌ழைக்கு ஒதுங்கி மெதுவாக‌ நின்று நின்று வ‌ந்த‌தை ம‌ழ‌லை மொழியில்"கொஞ்சங் கொஞ்ச‌மாக‌ வ‌ந்தேன்" என்று சொன்ன‌தை புரிந்து சிரித்தார்க‌ளாம்,

இதுபோல் எத்த‌னையோ வீடுகளில் எத்த்னையோ வித‌மான‌ குழ‌ந்தை ப‌ருவ‌த்து சுவாரஸ்ய‌மான‌ நிக‌ழ்வுக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌, குழ‌ந்தைக‌ளின் செய‌ல்க‌ள் சிலநேர‌ங்க‌ளில் கோப‌த்தை கொடுத்தாலும் பல நேரங்களில் குழந்தைபருவமும் அதன் நினைவுகளும் இனிமையாகவே இருகின்றன. அவ‌ர்க‌ளின் எண்ண‌ங்க‌ளை, பேச்சுக்க‌ளை சிரிப்புகளை எல்லாம் ர‌சிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் அந்தநேரத்தில் நம் க‌வ‌லைக‌ள் எல்லாம் இருக்கும் இட‌ம் தெரியாம‌ல் மறைந்துவிடுகின்ற‌ன‌!