எனக்கு நீ! உனக்கு நான்!
(முத்தமிழ் குழுமத்தின் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை)
குமரன் திருமணகோலத்தில் மணமேடையில் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான், மணமகளாக நிற்கும் கோமதியை சுற்றியிருந்த அவளின் நண்பர்கள் கூட்டம்தான் அவன் முகஇறுக்கத்திற்கு காரணம்,கல்லூரி முடித்து வேலைக்கு போய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு சந்தித்ததால் எல்லோரும் ஆவலோடு பேசிக்கொண்டும் சத்தமாக சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்,
சில தோழிகளும் நண்பர்களும் அவள் காதில் ரகசியமாய் ஏதோசொல்ல இவளும் பலமாக சிரித்தாள். நன்கு படித்தவர்களாக இருந்தும் பலர் பார்க்கும் மணமேடையில் சிறிது அமைதி காக்கவேண்டும் என்று தெரியவில்லையே? என்று அவன் மனம் புலம்பிக்கொண்டிருந்தது, அதை அதிகப்படுத்துவது போல அந்த கூட்டத்திலிருந்த ஒருவன் போகும்போது "ஹேப்பி பர்ஸ்ட் நைட்" என்று கேலியாக வாழ்த்திவிட்டு போக அவன் முகம் இன்னும் இறுகியது,
கீழே அமர்ந்த நண்பர்கள் அவளை பார்த்து ஏதோ சொல்லி அங்கிருந்தபடியே கையசைத்து சிரித்துகொண்டிருந்தார்கள்,இறுகிய அவன் முகத்தை புகைப்படம் எடுப்பவர்கள் பலமுறை சிரிக்க சொல்லி வற்புறுத்தியதால் வலிய சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்,இதைப்பற்றி நினைத்துக்கொண்டேயிருந்தால் இருக்கும் சந்தோசம் குறைந்துவிடுமென்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அவளின் கண்களையும், சிரிப்பையும் பேசும்போது மாறும் சின்னசின்ன முக பாவனைகளையும் ரசித்து அவளில் மனம் ஒன்றினான்,
இனியதொரு இல்லற வாழ்க்கை ஆரம்பித்த சில நட்களில் அவளின் வீட்டிற்கு சென்ற போது அவளுடைய கடந்த கால புகைப்படங்களை எடுத்து ,குழந்தைப் பருவத்திலிருந்தது எப்போது, எங்கே, யாருடன் எடுத்தது என்று சொல்லிகொண்டே வந்தாள், அதில் சிறுகுழந்தையாக ஆடையின்றி இருந்த புகைப்படத்தை பார்த்து அவள் காதில் குமரன் ஏதோ ரகசியமாய் சொல்ல நறுக்கென்று கிள்ளிவிட்டு அவனை வினோதமாய் பார்த்து ரசித்து சிரித்தாள் , அவள் கல்லுரிமாணவியாக இருந்த புகைப்படங்களை பார்க்கும்போது கல்லூரியிலும் , சுற்றுலா சென்ற இடங்களிலும் வகுப்பு மாணவர்களுடன் பலருடன் அரட்டை அடித்தபடி நின்றிருந்தாள் ,அவர்களை பற்றி சில விசயங்களை எடுத்து சொல்லி தன்சிறந்த நண்பர்கள் என அறிமுகம் செய்தாள். சில நண்பர்கள் திரும்ப திரும்ப பல புகைபடங்களில் இவளுடன் நின்றிருந்தனர், தொடர்ந்து பார்க்க மனமின்றி வேகமாக ஆல்பத்தை புரட்டி முடித்தான்,மனம் குழப்பத்தில் ஏதேதோ சிந்தித்தது, கோவிலுக்கு செல்ல அழைத்ததும் அங்கு அவளுடன் நீண்ட நேரம் பேசிகொண்டிருந்ததும் இயல்புக்கு வந்தான்,
இருவரும் வேலைக்கு செல்வதால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர், இரு மாதங்கள் ஆகிவிட்டது "இந்த வாரம் என் தோழி விஜயா வீட்டுக்கு போகலாம்ங்க" என்று அழைத்தாள் கோமதி. ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றார்கள் மதிய உணவாக விதம் விதமாக சமைத்திருந்தார்கள். சாப்பிட்டதும் விஜயாவும் கோமதியும் வரவேற்பு அறையில் அமர்ந்து சிறிது நேரம் இவனிடம் பேசிவிட்டு பிறகு தங்கள் கடந்தகால வாழ்க்கையைபற்றி பேச ஆரம்பித்தார்கள்.
நீண்ட நாட்கள் ஆனதால் பல நண்பர்களுடைய வாழ்க்கை கதைகளை பேசிகொண்டார்கள். தங்கள் நட்பின் நினைவுகளில் மூழ்கியதால் இவன் இருப்பதை மறந்து பேசிகொண்டே இருந்தார்கள். குமரனும் அவர்களின் பேச்சை கவனித்தான் ஒன்றும் புரியவில்லை. உலகில் மிகக் கடினமான விசயம் புரியாத ஒன்றை புரிந்ததுபோல நடித்துக்கொண்டு நீண்ட நேரம் கேட்பது, அதற்கு மேல் நடிக்கவிருப்பமின்றி டி.வி யை பார்த்தான் எல்ல சேனல்களிலும் வெறுப்பேற்றும் நாடகங்கள்,கேட்டு சலித்த புதிய பாடல்கள், எழுந்து அடுத்த அறைக்குள் அமர்ந்து ஜன்னலை வெறித்து பார்த்தபடி"நட்புள்ள இரண்டு பெண்கள் சேர்ந்தால் உலகில் வானத்திற்கு கீழிருக்கும் அத்தனை விசயங்களைபற்றியும் அளவின்றி பேசிக்கொண்டிருக்கிறர்கள்! எல்லா பெண்களுமே ஏன் இப்படி இருக்கிறார்கள்?" என்று மனதிற்குள் கேள்வி கேட்டுகொண்டான்,
அவர்களின் பேச்சை மீண்டும் கவனித்தான் "ஹே உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சவுடனே நம்ம செந்தில் ரொம்ப சோகம் ஆகிட்டான்டி" என்றாள் விஜயா,"அதுக்கு நான் என்னடி செய்ய முடியும்,வேற எதாவது பேசு" என்று சொல்லி பேச்சை மாற்றினாள் கோமதி,
குமரன் மனதில் புதிதாய் ஒரு சந்தேகமரம் தோன்றியது ,மனம் இருப்பு கொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வெளியே இருந்த பெட்டி கடைக்குள் நுழைந்து சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்தான். யார் அவன்? எதற்காக அவன் சோகமாக வேண்டும்,?ஒருவேளை இவளை காதலித்திருப்பானோ, இருக்கலாம், இவளின் அறிவுத்திறமைக்கும் நல்ல குணத்திற்கும் நிறைய பேர் இவளை காதலித்திருக்கலாம். அது இயல்புதான், ஆனால் அதில் யாரையாவது இவள் காதலித்திருப்பாளா? என்று மனதில் இருந்த சந்தேக மரம் புதிதுபுதிதாக கிளைவிட்டது,அவளிடமே கேட்டுவிடலமா, என யோசித்தான்.
"ச்சீ வேண்டாம்" பிறகு என்னை பற்றி என்ன நினைப்பாள். அப்படி எதுவும் இல்லாவிட்டால் அதற்கு பிறகு நான் சாதரணமாக பேசுவதுகூட அவளுக்கு சந்தேகமாகத்தானே தெரியும், பிறகு பிரச்சனைகள் வளர்ந்துகொண்டே போகும்,இப்போது வேண்டாம் நேரம் வரும்போது கேட்கலாம் என் நினைத்து அன்று மாலை வீடுவந்து சேர்ந்தர்கள், அந்த வாரம் முழுவதும் அவளிடம் குழப்ப மனதுடனே நெருங்கினான், "என்ன ஆச்சு உங்களுக்கு ஒரு மாதிரியாவே இருக்கீங்க" என்று கேட்டவளுக்கு ஒன்றுமில்லை என்று பொய்யான பதில் சொன்னான்,
அடுத்த ஞாயிற்றுகிழமை "என்னுடன் படித்து என்னுடனே வேலை பார்க்கும் நீண்ட வருட நண்பன் விட்டிற்கு போகலாம்" என்று அழைத்துசென்றான்.
அன்று இரவு வீடு திரும்பியதும் எதுவும் பேசாமல் அமைதியாக படுக்கையில் சென்று படுத்துகொண்டாள் , பலமுறை அழைத்து பார்த்தான் பதில் வரவில்லை , அருகில் சென்று முகத்தை திருப்பி பார்த்தான், கண்ணீர் வழிந்திருந்தது.
"என்ன ஆச்சு மதி, ஏன் இப்ப அழுகிற" என்றான் , அவளிடமிருந்து பதில் வரவில்லை,அவள் அருகிலேயே அமர்ந்தான், மெதுவான குரலில் பேச ஆரம்பித்தாள் "உங்க ப்ரண்டு வீட்டுல நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டு அவர்கிட்டயே பேசிட்டு இருக்கீங்க எனக்கு அப்போ எவ்வளவு கோபம் தெரியுமா? நீங்க ரெண்டுபேரும் பேசுறப்போ, உங்க ப்ரண்டு "அவள பார்த்தேண்டா ஆளே மாறிட்டா, பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்ட்டா, நல்லவேளைடா மச்சான் நீ தப்பிச்சுட்ட இல்லட்டி ரொம்ப கஸ்டப்பட்டிருப்படா"னு சொன்னது காதில் விழுந்துச்சு.
"அவள் யாரா இருக்கும்! உங்க வீட்டுல அன்னிக்கு ஆல்பம் பார்க்குறப்போ உங்ககூட நிறைய போட்டோவில பக்கத்தில் நின்னுருந்தாளே அது அவளா இருக்குமோ? ,
"நம்ம கல்யாணமேடைல உங்கள சுற்றி நிறைய பொண்ணுங்க அரட்டை அடிச்சு கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்களே அதுல ஒருத்தியா இருக்குமோனு மனசுல புதுசு புதுசா குழப்பம் வருதுங்க!
நமக்குள்ள பிரச்சனை எதுவும் வந்துருமோனு பயமா இருக்கு!"என்று அழுதுகொண்டே நகர்ந்து அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.
குமரனுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் யோசித்தான், இதே போலதானே நாமும் அவளை தவறாக நினைத்தோம்,அவளை பற்றி மட்டுமே யோசித்துகொண்டிருந்த நான் என் நிலையை எப்படி மறந்தேன்,இதே போல் அவளிடமும் நானும் கேள்வி கேட்கலாம், ஆனால் அது சந்தோசத்திற்கு உதவாது,பிரச்சனையை பெரிதாக்கும்,
ஒவ்வொருவருமே தன் வழ்க்கைதுணையின் மனதில் தான் மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும், தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைகிறார்கள், அதற்கு மாறாக ஏதாவது தெரிய வரும்போது அங்கே பிரச்சனைகள் வளர்கிறது,அதை தவிர்த்துவிட்டால் சந்தோசம் பெருகிவிடும்! என்று புரிந்ததும், அவள் கன்னங்களை பிடித்து தூக்கி "நீ பயப்படுற மாதிரிலாம் எதுவும் நடக்காது வீணா மனச குழப்பிக்காதே மதி," அது ஒரு சாதரண விசயம் ,இன்னொருநாள் புரியுறமதிரி சொல்லுறேன். இப்போ நினைச்சா சிரிப்புதான் வருது, சொன்னா நீயும் சிரிப்ப! ஒருவிசயம் நல்ல யோசிச்சு பாரு, வாழ்க்கைல எவ்வளவோ பேரை பார்க்குறோம் அதில யராவது ஏதாவது ஒரு காரணத்தால நமக்கு பிடிக்கும், அது ஒரு சதாரண ஈர்ப்பு, உனக்கும் கூட இருந்திருக்கலாம், அது முடிஞ்சு போன விசயம் ,
இப்போ நம்ம புது வாழ்கையை ஆரம்பிச்சு இருக்கோம், என் மனசுல இனி என்னைக்கும் நீ மட்டும்தான் உன் மனசுல நான் மட்டும்தான்! இதுல எந்த மாற்றமும் இல்ல! நமக்குள்ள இந்த விசயத்தில இனி எந்தபிரச்சனையும் வரக்கூடாது.மற்ற விசயங்களில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம், ஆனால் அதை எல்லாம் நான் சரிபண்ணிடுவேன் மதி" என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்தான் .
அவளும் மனம் மாறி சந்தோசமாய் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டு "எப்படி சரிபண்ணுவிங்க" என்று ஆர்வமாய் கேட்டாள், "இப்படித்தான்" என்று சொல்லி உற்சகமாய் அவளை அணைத்துகொண்டான்.
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment